disalbe Right click

Tuesday, May 9, 2017

போட்டுக்கொடுத்தாரா பல்லாவரம் நகராட்சி அதிகாரி?

போட்டுக்கொடுத்தாரா பல்லாவரம் நகராட்சி அதிகாரி?
ஆர்டிஐ ஆர்வலர்களைப் போட்டுக்கொடுத்தாரா பல்லாவரம் நகராட்சி அதிகாரி?
விதிமுறைமீறல்கள், முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கொடூரக் கொலை
சென்னையில் பாரஸ்மால் என்ற ஆர்டிஐ ஆர்வலர், கட்டட விதிமுறைகள் குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டார். இந்தத் தகவல்கள் சம்பந்தப்பட்ட பில்டருக்குத் தெரிந்துவிட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாரஸ்மால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஆர்டிஐ மூலம் விண்ணப்பித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட பில்டருக்குத் தெரிந்தது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விதிமுறை மீறல் கட்டடம்
இது ஒருபுறம் இருக்க குரோம்பேட்டை ராதா நகரிலுள்ள ஒரு குடியிருப்பில் கார் பார்க்கிங் பகுதிக்கு ஒதுக்கிய இடத்தில் கட்டடம் கட்டி இருக்கிறார்கள்.
இது குறித்து அந்தப் பகுதியிலுள்ள அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் மனோகரன் மற்றும் 5 பேர் பல்லாவரம் நகராட்சிக்கு ஆர்.டி. மூலம் தகவல் கேட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கட்டடத்தில் பிளான், அப்ரூவல் நகல் ஆகியவற்றை அனுப்பும்படி கேட்டிருக்கின்றனர். ஏறக்குறைய பல மாதங்களுக்குப் பின்னும் ஆர்.டி. கேள்விகளுக்கு பல்லாவரம் நகராட்சி பொதுத்தகவல் அலுவலர் உரிய பதிலளிக்கவில்லை.
ஆர்வலர்களுக்கு மிரட்டல்
இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.டி. விண்ணப்பம் செய்த ஒருவரின் வீட்டுக்கு வந்த சிலர், 'என்ன எங்க பில்டர் பத்தி புகார் சொல்றீங்களா. தொலைச்சுப்புடுவோம். ஜாக்கிரதை' என்று மிரட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர். ஆர்.டி. போட்ட இன்னொருவர் பெண். பெண்கள் விடுதியில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வருகிறார். அவருடைய விடுதிக்குச் சென்ற சிலர், அந்தப் பெண்ணோடு தங்கியிருக்கும் இன்னொரு பெண்ணிடம் செல்போனை வாங்கி சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு போன் செய்தனர். 'என்னம்மா ஆர்.டி.- போட்டு கேள்வி கேட்கிறாயா? உனக்கு வேலை வெட்டி இல்லையா . இனிமேல் அதுமாதிரி எல்லாம் செய்யாதே' என்று மிரட்டி இருக்கின்னர். அதில் அந்தப் பெண் பயந்து போயிருக்கிறார்.
தகவல் எப்படி லீக் ஆகிறது?
இது குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் மனோகரனிடம் பேசினோம்.
"நான் இந்த பகுதியில் உள்ள கட்டட விதிமுறைகள் குறித்த நிறைய மனுக்கள் செய்திருக்கிறேன். 12 கட்டடங்கள் விதிமுறையை மீறி இருப்பதாக சிஎம்.டி. வுக்குக் கடந்த 2015 டிசம்பரில்-ல் விண்ணப்பம் போட்டேன். அவர்கள் 12 கட்டடங்களை ஆய்வு செய்து பல்லாவரம் நகராட்சியிடம் நடவடிக்கை எடுக்கும்படி சொன்னார்கள். சி.எம்.டி.-விலிருந்து பல்லாவரம் நகராட்சிக்கு 4 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பி விட்டனர்.
ஆனால், அதன்பிறகும் 12 கட்டடங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இது மட்டுமில்லை. ஒரு குறிப்பிட்ட சாலையில் சாலை போடும் பணியில் விதிமுறை மீறல் இருந்தது தெரியவந்தது. அது குறித்து பல்லாவரம் நகராட்சியிடம், சாலை போடும் பணி யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று தகவல் கேட்டோம். உடனே அரசியல்வாதிகள், கவுன்சிலர், ஒப்பந்ததாரர்களிடம் சொல்லி விட்டனர். அவர்கள் வந்து எங்களை மிரட்டினர். மிரட்டி விட்டால், ஆர்.டி. போடமாட்டார்கள் என்று அவர்கள் கருதுகின்றனர். நீர் நிலைகள் ஆக்கிரமிப்புப் பற்றி கேட்டதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி ஆக்கிரமிப்பாளர்களிடம் சொல்லிவிட்டார். அவர்கள் ஆர்.டி. மனுப்போட்டவரை மிரட்டினர். இப்போது, குரோம்பேட்டை ராதா நகரிலுள்ள கட்டடம் குறித்து மார்ச் 17-ம் தேதி ஒரு ஆர்.டி. போட்டேன். கட்டடத்தை முறையாக ஆய்வு செய்தீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தேன். கட்டடத்தின் பிளான் நகல் தரும்படியும் கேட்டிருந்தேன். ஏப்ரல் 10 வரை பதில் வரவில்லை. இதே போல மேலும் 2 பேர் மனு செய்திருந்தனர்.
பதில் வரவில்லை என்பதால் அறப்போரிலிருந்து மேலும் 3 பேர் மனுப்போட்டனர் . 14-ம் தேதி வணிக வளாகத்தில் கட்டடம் திறக்கப்பட்டது. ஆர்.டி. போட்ட இரண்டு மிரட்டி இருக்கின்றனர்.
ஆர்.டி. விண்ணப்பம் குறித்த தகவல்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனால், பல்லாவரம் பொதுத் தகவல் அதிகாரிக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் இருந்த முகவரி எப்படி சம்பந்தப்பட்ட பில்டரிடம் கொடுக்கப்பட்டது. இது பொதுத்தகவல் அதிகாரியைத் தவிர வேறு யாரும் இது போல செய்திருக்க முடியாது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் புகார் செய்திருக்கிறோம்" என்றார்.
விசாரணை நடக்கிறது
இது குறித்து பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு திட்ட அலுவலர் சிவக்குமாரிடம் கேட்டோம்.
"ஆர்.டி. மனு செய்தவர் பற்றி நான் யாரிடமும் கூறவில்லை. அது தவறான தகவல். இது குறித்து புகார் கொடுத்திருக்கின்றனர். உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். என்னுடைய தரப்பிலிருந்து அந்த தகவல் சொல்லப்படவில்லை. உரிய விசாரணைக்குப்
பின்னர்தான் யார் தவறு செய்தார்கள் என்பது தெரியவரும்" என்றார்.
கே.பாலசுப்பிரமணி
நன்றி : விகடன் செய்திகள் - 09.05.2017

Monday, May 8, 2017

போலீஸ்-பொதுமக்கள் இணைந்த வாட்ஸ்-அப் குழு உதயம்

போலீஸ்-பொதுமக்கள் இணைந்த வாட்ஸ்-அப் குழு உதயம்

குற்றங்களை தடுக்க காவல் ஆணையர் புது நடவடிக்கை: சென்னை காவல் நிலையங்களில் வாட்ஸ்-அப் குழு அமைக்க உத்தரவு - பொது மக்கள், போலீஸார் உறுப்பினர்களாக இருப்பார்கள்

சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல் ஆணை யர் கரன் சின்ஹா சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலை யங்களிலும் வாட்ஸ்-அப் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இன்று இணைய தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஓர் இடத்தில் நடக்கும் நிகழ்வு அடுத்த விநாடியே மற்றொரு இடத்துக்கு வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்துவிடுகிறது. குற் றத்தை தடுக்கும் வகையில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அழைப்பு
அதன்படி சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களி லும் (135 காவல் நிலையங்கள்) வாட்ஸ்-அப் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களின் அட்மினாக அந்தந்த காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்கள் இருப்பார்கள். மேலும் குற்றப்பிரிவு போலீஸார், போக்குவரத்து போலீஸார், ரோந்து பிரிவு போலீஸார் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
பொதுமக்கள் சார்பில் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், வணிக வளாக காவல் மேலாளர் கள், தன்னார்வ தொண்டு அமைப் பினர், அரசு அதிகாரிகள், ஹோட் டல் பாதுகாப்பு மேலாளர்கள் உள்ளிட்ட 13 வகையைச் சேர்ந்த வர்கள் உறுப்பினர்களாக இருப் பார்கள்.
கருத்து தெரிவிக்கலாம்
சம்பந்தப்பட்ட குழுவை துணை ஆணையர்கள், உதவி ஆணை யர்கள் கண்காணிப்பார்கள். அந் தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நிகழ்வுகள், சம்பவங்கள், பாதுகாப்பு குறைபாடுகள், மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம்.
மேலும் நடக்கும் குற்ற நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அனுப்பலாம். வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் கள் (தெற்கு மற்றும் வடக்கு) ஆய்வு செய்வார்கள்.
வாட்ஸ்-அப் குழுக்களில் பகிரப்படும் தேவையான தகவல்களை சேகரித்து போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என சென்னை காவல் ஆணையர் கரன் சின்ஹா தெரிவித் துள்ளார்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 06.05.2017


சட்டம் படித்தவர்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

சட்டம் படித்தவர்கள் என்னவெல்லாம் செய்யலாம்?
பொதுவாக, புரபஷனல் படிப்பை மேற்கொள்ளும் பெரும்பாலான மாணவர்கள், படிப்பை முடித்தப் பிறகு, தங்களின் படிப்பு தொடர்பான பணிகளையே மேற்கொள்வதை நாம் காணலாம். ஆனால் இன்று, தங்களுடைய படிப்பிற்கு நேரடியாக தொடர்பில்லாத தொழில்களிலும், புரபஷனல் படிப்பை முடித்தவர்கள் ஈடுபட்டிருப்பதை பரவலாக காண முடிகிறது.
அத்தகைய பட்டதாரிகளுக்கு சிறந்த உதாரணம் சட்டப் பட்டதாரிகள். சட்டம் படித்தவர்கள், நேரடியான நீதிமன்ற பணிகளுக்கு மட்டும் செல்வதில்லை. அரசியல், அக்கவுன்டிங், ஆசிரியர் பணி மற்றும் நிதித்துறை என்று பல்வேறான துறைகளில் அவர்கள் கோலோச்சுகிறார்கள். (சட்டம் படித்தவர்கள், அரசியலில் கோலோச்சுவது நீண்டகால மரபாகவே இருந்துவருவது குறிப்பிடத்தக்கது).
ஒரு சட்டப் பட்டதாரி என்ன செய்யலாம்?
சட்டப் படிப்பை முடித்தவுடன், சில விஷயங்கள் கருத்தில் கொள்ளத்தக்கவை. பலபேர், நேரடி சட்டத்துறையிலேயே ஈடுபடும் பொருட்டு, இன்டர்ன்ஷிப் அல்லது clerkship மேற்கொள்கிறார்கள். ஒரு சீனியர் வழக்கறிஞரின் கீழ் அல்லது தனியார் துறையில் இன்டர்ன் முறையில் பணியாற்றுவதன் மூலமாக, பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.
மேலும், இதன்மூலம், அத்துறை சார்ந்த வாழ்க்கைத் தொடர்பான ஒரு மேலோட்டமான பார்வையும் கிடைக்கிறது. இன்டர்ன் மேற்கொள்வதன் மூலம், அதிகம் மெனக்கெடாமலேயே நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது.
சட்டத்துறையில் இளநிலைப் படிப்பை முடித்த சிலர், இன்டர்ன் மேற்கொள்ள முடிவெடுக்கும் அதேவேளையில், வேறுசிலர், அத்துறையிலேயே முதுநிலை மற்றும் பிஎச்.டி. போன்ற மேற்படிப்புகளை மேற்கொள்ள விளைகின்றனர்.
சட்டப் படிப்பில் இளநிலைப் படிப்பை முடித்தவர்கள், விரும்பினால், நேரடியாகவே தொழிலில் இறங்கலாம். உங்களுக்காக பணிசெய்தல், அரசுக்காக செய்தல், தனியார் நிறுவனத்துக்காக, வணிகத்திற்காக மற்றும் கல்வி நிறுவனத்திற்காக போன்றவை அவற்றுள் அடக்கம்.
மறைமுக துறைகளில் சிலருக்கு ஆர்வம் ஏன்?
கஷ்டப்பட்டு படித்து, ஒரு சட்டப்படிப்பை முடித்து, பட்டம் பெற்ற பிறகு, அத்துறையில் நேரடியாக ஈடுபடாமல், சிலர், வேறுசில துறைகளுக்கு ஏன் தாவுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. சிலரின் எண்ண ஓட்டம், மற்றவர்களிடமிருந்து வேறுபடுவதுதான் அதற்கு காரணம். அவர்கள், வித்தியாசமாக எதையேனும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும், ஏராளமான சட்டப் பட்டதாரிகள் படித்து முடித்து வெளிவருவதால், அவர்களோடு இணைந்து நின்று, எதற்காக போட்டி போட்டுக்கொண்டிருக்க வேண்டுமென நினைக்கிறார்கள்.
எனவே, தங்களின் சட்டப் படிப்பின் மூலம், ஏதேனும் வித்தியாசமாக, அது சற்று சவாலானதாக இருந்தாலும் கூட, அதை ஆர்வத்துடன் செய்ய முயல்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், சட்டப் படிப்பின் மூலம், நேரடி சட்டத்துறைக்கு வெளியில், நிறைய சாதிக்கலாம். ஆனால், இது பலருக்கும் தெரிவதில்லை.
அவை என்னென்ன?
வணிகம் மற்றும் சட்டம் சார்ந்த துறைகள்
மேற்கண்ட துறைகள், பெரும்பாலான சட்ட மாணவர்களுக்கு பரிச்சயமானவை. இத்துறைகளில் ஈடுபட, தேவையான அளவிற்கு சட்டம் தெரிந்திருந்தால் போதுமானது. புராஜெக்ட் மேனேஜர் அல்லது மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட் போன்ற பல பணி நிலைகள் உள்ளன.

இவைதவிர, வேறுபல மறைமுக(paralegal) துறைகளும் உள்ளன. அவை,
* பொதுத்துறை மற்றும் அரசியல் சார்ந்த பணிகள்
* வங்கியியல், நிதித்துறை மற்றும் அக்கவுன்டிங்
* கற்பித்தல் மற்றும் கல்வித்துறை
* விளம்பரம், மார்க்கெட்டிங் மற்றும் பொதுமக்கள் தொடர்பு துறைகள்
* மீடியா
* என்.ஜி.ஓ., அறக்கட்டளை, மனிதவள மேம்பாட்டுத்துறைகள்
* மருத்துவம் சார்ந்த துறைகள்


மேற்கண்ட துறைகளிலெல்லாம், சட்டம் படித்த பட்டதாரிகள், சிறப்பான பணி வாய்ப்புகளைப் பெற்று, நல்ல சம்பளமும் பெற்று வாழ்க்கையில் சாதிக்கும் வாய்ப்புகள் ஏராளம் உள்ளன.
நன்றி : தினமலர் - கல்விமலர் - 09.05.2015

நீதிபதி கர்ணனுக்கு சிறை... ஊடகங்களுக்குத் தடை! உச்சநீதிமன்றம் அடுத்தடுத்த அதிரடி


நீதிபதி கர்ணனுக்கு சிறை... ஊடகங்களுக்குத் தடை! உச்சநீதிமன்றம் அடுத்தடுத்த அதிரடி

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நீதிபதி கர்ணனின் உத்தரவுகளை வெளியிடவும் ஊடகங்களுக்குத் தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியவர், சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன். கடந்த ஆண்டு, இவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம்செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்தார் கர்ணன். அதுமட்டுமன்றி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊழல் செய்வதாக கடிதம் ஒன்றை எழுதி, பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பிவைத்தார்.
நீதிபதி கர்ணன் இவ்வாறு செய்தது நீதிமன்றத்தை அவமதிப்பதாக உச்சநீதிமன்றம் கருதியது. எனவே, உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இதற்கிடையே, நீதிபதி கர்ணனின் மனநலம்குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. மனநலப் பரிசோதனைக்கு கர்ணன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால், கர்ணனுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கர்ணனின் உத்தரவுகளை வெளியிட, ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பல உத்தரவுகளை கர்ணன் பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : விகடன் செய்திகள் - 09.05.2017

சென்னையில் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 94 குழந்தைகள் மீட்பு!

சென்னையில் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 94 குழந்தைகள் மீட்பு!
சில மாதங்களுக்கு முன்பு, சென்னை வால்டாக்ஸ் சாலை நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த 8 மாத ஆண்குழந்தை  மற்றும் 9 மாத பெண் குழந்தை  இருவரையும் காரில் வந்த கும்பல் தூக்கிச்சென்றது. இதையடுத்து, எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல்சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்குத் தொடர்ந்தார். பிச்சை எடுக்கவைக்கவே குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிச்சை எடுக்கும் குழந்தைகள் தொடர்பாகதமிழகக் காவல்துறை அறிக்கை அளிக்குமாறு  நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது. பின்னர்பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 94 குழந்தைகளை மீட்டதாக, சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் சங்கர் தெரிவித்தார். சென்னையில் மீட்கப்பட்டுள்ள குழந்தைகளில் 17 பேரின் பெற்றோர்களை மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கோவையில் மட்டும் 91 குழந்தைகள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு இல்லங்களில் வைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். 
"குழந்தைகளைக் கடத்தி, இப்படியான செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  
வரவனை செந்தில்
 நன்றி : விகடன் செய்திகள் - 09.05.2017


டாஸ்மாக் கடையை எதிர்த்துப் போராடினால் போலீஸ் நடவடிக்கை கூடாது'

டாஸ்மாக் கடையை எதிர்த்துப் போராடினால் போலீஸ் நடவடிக்கை கூடாது'
உயர் நீதிமன்றம் அதிரடி
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் அதிக அளவிலான விபத்துகள் நடக்கின்றன என்று கூறி அங்கிருக்கும் டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைகளில் இருந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதனால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, மாற்று இடங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நெடுஞ்சாலைகளுக்கு அருகே கடைகள் இருக்கக் கூடாது என்பதால், மாற்று இடங்களில் அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலானவை ஊருக்குள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களைக் கலைக்க, போலீஸார் தடியடி நடத்திவருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, "டாஸ்மாக் கடைக்கு எதிராக, அமைதியாகப் போராடும் பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபடக்கூடாது. குறிப்பாக, டாஸ்மாக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால், டாஸ்மாக் கடையைத் திறக்கக்கூடாது" என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இரா. குருபிரசாத்
நன்றி : விகடன் செய்திகள் – 08.05.2017