disalbe Right click

Saturday, June 24, 2017

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை விதிகள் வெளியீடு

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை விதிகள் வெளியீடு
சென்னை: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை விதிகளை, அரசு வெளியிட்டு உள்ளது. மத்திய அரசின், ரியல் எஸ்டேட் சட்டத்திற்கேற்ப, தமிழக அரசு விதிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது.
ஒழுங்குமுறை குழுமத்தின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்யும் வரை, வீட்டு வசதி செயலர்,குழுமமாக செயல்படுவார். குழுமத்தின் அலுவலகம், சென்னை, எழும்பூரில் உள்ள, சி.எம்.டி.ஏ., அலுவலகத்தின், மூன்றாம் தளத்தில், தற்காலிகமாக இயங்கும் என, அரசு அறிவித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
500 சதுர மீட்டர் நிலப்பரப்புள்ள, அனைத்து கட்டட மனை விற்பனைதிட்டங்கள் மற்றும் முகவர்கள், கட்டாயம்குழுமத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்விதிகள், தற்போதைய திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.
குழுமத்தில் பதிவு செய்யாமல், எந்த கட்டட மனையையும், விற்பனை செய்ய முடியாது.
ஒவ்வொரு மேம்பாட்டாளரும், தன் திட்டத்திற்கான நிலத்தில், எவ்வித வில்லங்கமும் இல்லை; சட்டப்பூர்வ உரிமை தனக்கே உண்டு என்பதற்கான, உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும். அத்திட்டம் நிறைவு பெறும் காலத்தையும் குறிப்பிட்டு, பிரமாண பத்திரத்தில் சான்றளிக்க வேண்டும்.
எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் இல்லாமல், ஒதுக்கீட்டாளரிடம் இருந்து, திட்ட மதிப்பீட்டில், 10 சதவீதத்திற்கும் மேல், பணம் பெறக்கூடாது. அப்பத்திரத்தில், அதன் மொத்த மதிப்பையும் குறிப்பிட்டு பெற வேண்டும்.
ஒதுக்கீட்டிற்கு பின், ஐந்து ஆண்டுக்குள், கட்டுமானத்திலோ, வேலைப்பாட்டிலோ, தரத்திலோ, சேவையிலோ குறைபாடு காணப்பட்டால், அதை மேம்பாட்டாளர், தன் சொந்த செலவில், 30 நாட்களுக்குள் சரி செய்து தர வேண்டும்.
இந்த சட்டத்தின் கீழ், பல்வேறு அபராதங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீட்டில், 10 சதவீதம் அபராதம் அல்லது மூன்றாண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 24.06.2017

உங்கள் ஆதார்கார்டு செல்லாமல் போக வாய்ப்பிருக்கு!

உங்கள் ஆதார்கார்டு செல்லாமல் போக வாய்ப்பிருக்கு!
இந்தியாவில் இப்போது ஆதார் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக அனைவரும் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறலாம். ஆம், இன்று அரசு மானியங்கள் முதல் நிதி பரிவர்த்தனைகள் என அனைத்திற்கும் ஆதார் கட்டாயம் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.
சரி, உங்களிடம் ஆதார் கார்டு இருந்தாலும் அது செல்லாத கார்டாக மாற வாய்ப்புள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே எதனால் உங்கள் ஆதார் கார்டு செல்லா கார்டாக மாறும்?, எப்படி அதனை மீண்டும் முறையாக இயங்க வைப்பது? என்று இங்குப் பார்ப்போம்.
எப்போது உங்கள் ஆதார் கார்டு செயல்படாமல் போகும்?
உங்கள் ஆதார் கார்டை தொடர்ந்து மூன்று வருடங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அதாவது வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு, குடும்ப அட்டை உள்ளிட்டவையில் இணைக்கப்படாமல் இருந்தால் அல்லது பிஎப் உள்ளிட்ட கணக்குகளில் இணைக்காமல் இருந்தால் ஆதார் கார்டு செயல்படாது.
ஆதார் கார்டு செயல்படுகின்றதா என்பதை எப்படிச் சரிபார்ப்பது?
முதலில் ஆதார் இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். அதில் ஆதார் சேவைகள்(Aadhaar services) டேபின் கீழ் உள்ள ஆதார் எண்ணைச் சரிபார்க்கவும்(Verify Aadhaar Numbe) என்ற தெரிவை தேர்வு செய்ய வேண்டும்.
ஆதார் இணையதளம் செல்ல இங்குக் கிளிக் செய்க. www.uidai.gov.in
செயல்படுகின்றதா என்று சரிபார்த்தல்
ஆதார் எண்ணைச் சரிபார்க்கும் பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சாவை உள்ளிட்டுச் சரிபார்க்கும் என்ற பொத்தானை அலுத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது ஆதார் எண் செயல்படும் போது பச்சை நிற டிக் மார்க்கும் இதுவே இயங்கவில்லை என்றால் சிவப்பு நிற கிராஸ் மார்க்கும் வரும்.
ஆதார் கார்டு செயல்படவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் ஆதார் கார்டு செயல்படவில்லை என்றால் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் சரியான ஆவணங்களுடன் செல்ல வேண்டும். உங்களுக்கு அருகில் எங்கு ஆதார் மையம் உள்ளது என்று கண்டறிய இங்குக் கிளிக் செய்க. www.uidai.gov.in
இங்கு என்ன செய்வார்கள்?
ஆதார் கார்டினை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்த பிறகு உங்கள் பையோமெட்ரிக் தரவுகளை உள்ளிட வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
ஆதார் கார்டின் விவரங்களைப் புதுப்பித்துச் செயல்படுத்த 25 ரூபாய்க் கட்டணமாக வசுலிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் ஆதார் விவரங்களைப் புதுப்பித்துச் செயல்படுத்த விரும்பும் போது சரியான் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
கண்டிப்பாக ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டுமா?
ஆம், முன்பே நாம் அளித்த பையோமெட்ரிக் விவரங்களும், இப்போது புதிதாக நீங்கள் அளிக்கும் பையோமெட்ரிக் விவரங்களுடன் பொருந்துவதை வேண்டும். அப்படியானால் நீங்கள் கண்டிப்பாக ஆதார் உள்ளிட்டு மையத்திற்குச் செல்ல வேண்டும்.
நன்றி : குட்ரிட்டர்ன்ஸ் - தமிழ் - செய்திகள் - 23.06.2017

10: நண்பனாய் இருப்பது தகுதி அல்ல!

10: நண்பனாய் இருப்பது தகுதி அல்ல!

கல்யாணத்தில் ஜோடி சேர்வதைப் போலத்தான் வியாபாரத்தில் பங்குதாரரைத் தேர்வு செய்தல். பார்ட்னரைத் தேர்ந்தெடுத்தல் தொழில் ஆரம்பிக்கும்போது கவனமாகச் செய்ய வேண்டிய ஒன்று. முதலில் நீங்கள் உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி: எதற்காக இந்தப் பார்ட்னர்ஷிப்?
வியாபாரமும் நட்பும் சிக்கலில்
தனியாக ஆரம்பிக்க பயமாக இருக்கிறது. கூட ஒரு ஆள் இருந்தா சவுகரியம். நல்லது கெட்டதில் சம பங்கு இருக்கும் என்று நினைத்தால் உங்களுக்குத் தொழில் பற்றிய பாதுகாப்பின்மை உள்ளது. வாரன் பஃபே பங்குச் சந்தை வெற்றிக்குச் சொல்வது என்னைப் பொறுத்தவரை எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும். அவர் சொல்வது இதைத்தான்: “உங்கள் முடிவுகள் பயத்தாலோ பேராசையினாலோ எடுக்கப்பட்டு இருந்தால் நீங்கள் வெற்றி பெற முடியாது!”
அதனால் பயத்தினால் பார்ட்னர் தேடுவது நல்லதல்ல. ஆனால் படிக்கும் காலம் தொட்டே நமக்குக் கூட்டாளிகளோடு இருப்பது இயல்புதான். நண்பர்கள் சேர்ந்து வியாபாரம் தொடங்குவதும் இப்படித்தான். ஆனால் நண்பர்களைக் கொண்டு தொழில் தொடங்குதல் உங்கள் வியாபாரம், நட்பு இரண்டையும் பாதிக்கக் கூடியது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் சுற்று வட்டாரத்திலேயே பார்த்திருப்பீர்கள் ஆரம்பித்துச் சில காலத்தில் பிய்த்துக் கொண்டு போவதை. நண்பர்களைத் தொழிலில் பங்குதாரராய்ச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதல்ல என் வாதம். நண்பர்கள் என்பது மட்டும் தகுதி ஆகிவிடக் கூடாது. அது தான் முக்கியம்!
முழு முதலாளி ஆகியிருக்கலாமே?
என் நண்பர் ஒரு சேவை நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தார். கையில் பணமில்லை. நண்பர் ஒருவர் உதவவந்தார். ரூபாய் ஐந்து லட்சம் வரை கொடுத்துப் பார்ட்னரானார். தடபுடலாக ஆஃபீஸ் போட்டு பப்ளிசிட்டி செய்தார்கள். மெல்லத் தொழில் வளர்ந்தது. முதலாமவர் முழு உழைப்பில் காசு வர ஆரம்பித்தது. எதிர்பாராத வகையில் முதல் வருட லாபமே ரூபாய் பத்து லட்சத்தை தொட்டது. இப்போது நம் நண்பர் எதற்கு அந்த நண்பரை பார்ட்னராய்ச் சேர்த்தோம் எனப் புலம்ப ஆரம்பித்தார். “ரூபாய் ஐந்து லட்சத்தைக் கடன் வாங்கிப் போட்டிருந்தால் முழு முதலாளி ஆகியிருக்கலாமே? இவர் ஒரு முறை முதலீடு செய்துவிட்டு வேலை செய்யாமல் லாபம் பார்க்கிறாரே” என்று பேச ஆரம்பித்துவிட்டார்.
“நான் அந்த நேரத்தில் கொடுத்து உதவாவிட்டால் இப்படி வளர்ந்திருக்க முடியுமா? தவிர, நஷ்டம் அடைந்தால் நானும் தானே பாதிக்கப்பட்டிருப்பேன்?” என்று எதிர் வாதம் செய்தார் அவருடைய நண்பர். சில காலத்தில், ஏகப்பட்ட மனக்கசப்புகள், கடன், கெட்ட பெயருடன் அவர்கள் பார்ட்னர்ஷிப் முறிந்தது.
அந்நியராகப் பாவிப்பது நல்லது
எதற்குத் தொழிலில் பங்குதாரர் வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பணத்தேவை என்பதற்காகவா, அவரின் நேரம் மற்றும் பங்களிப்புக்காகவா, அவரின் சிறப்புத் தகுதிக்காகவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஒரு நெடுங்காலத் திட்டம் அவசியம். இன்றைய தேவைக்கு என்று நிறைய பேரைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம். ஆட்கள் சேரச் சேர ஒருங்கிணைப்புக்கான நேரமும் சக்தியும் அதிகம் முதலீடு செய்ய வேண்டும்.
உறவினர்களைப் பங்குதாரர்கள் ஆக்குவதிலும் கவனமாக இருங்கள். காரணம் அங்கு வியாபாரத்துடன் உங்கள் குடும்ப உறவும் சேர்ந்து பாதிக்கப்படும். ஆனால் யாராக இருந்தாலும் அந்நியர் போலப் பாவித்துச் சில புரிதல்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.
வெற்றி நழுவியது ஏன்?
அதேபோல கம்பெனியில் பங்கு உரிமை உள்ளது என்பதற்காக நிர்வாகத்தில் தலையிட வேண்டிய அவசியமில்லை. எனக்குத் தெரிந்து பத்துப் பேர் சேர்ந்து ஆரம்பித்த ஒரு வியாபாரம், அவர்களில் ஒருவர் மட்டுமே நிர்வாகம் செய்யச் செழிப்பாக வருகிறது. அதிலும் நிர்வாக இயக்குநர் என அந்த ஒருவர் இருந்தாலும் தலைமை செயல் அதிகாரி என வெளியாள் ஒருவர் புரபெஷனலாக நடத்திக் கொண்டிருக்கிறார். அத்தனை பங்குதாரர்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தவறாமல் சந்தித்து வியாபாரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டி வைத்துப் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், வியாபார முடிவுகள் அந்த ஒருவரிடம்தான். அதை நடத்திக் கொடுக்க ஒருவர் இருக்கிறார். அவர் தலைமையில் நிர்வாகம் உள்ளது.
தமிழகத்தில் உள்ள சில பொறியியல் கல்லூரிகள் வெற்றியடையாமல் போனதற்குக் காரணம் பணம் போட்ட குடும்பத்தினர் நேரடியாக நிர்வாகத்தில் தலையிட்டதுதான்.
நிறுவன உறவுகள் முக்கியம்
என்னிடம் ஒரு பேராசிரியர் சொன்னார்: “மாதம் ரூபாய் மூன்று லட்சம் கொடுத்து ஒரு பெரிய பேராசிரியரைப் பணிக்கு அமர்த்த முடிகிறது இவர்களால். ஆனால் அவரை எப்படிச் சிறப்பாகப் பணி செய்யவைப்பது என்ற நிர்வாகத் திறன் இல்லை. பணம் கொடுக்கிறோம் என்று இஷ்டத்துக்கு வளைத்ததால் அவர் வந்த வழியே போய்விட்டார்!”
வியாபாரத்தில் பங்குகொள்வது வேறு. நிர்வாகம் செய்வது வேறு. யார் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆவதற்குச் சில அடிப்படை நோக்கங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். விழுமியங்கள் ஒத்துப் போக வேண்டும், கலாச்சார ஒற்றுமைகள் வேண்டும். எல்லாவற்றையும் பேசி, எழுத்து மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். யார் பிரிந்து செல்ல நேரிட்டாலும் கவுரவம் கெடாமல் வெளியேற இடம் தர வேண்டும். உங்களின் நல்லுணர்வு தூதுவராக அவர் வெளியில் பேசும் அளவுக்கு உங்கள் நிறுவன உறவுகள் இருக்க வேண்டும்.
ஊர் கூடித் தேர் இழுப்பது போல, கூட்டுறவு செயல்பாடு போல, பலர் சேர்ந்து தொழில் தொடங்குவது சிறப்புதான். ஆனால் கூட்டின் கட்டுமானம் திடமாகத் தெளிவாக இருந்தால்தான், அதன் மேல் எழுப்பப்படும் வியாபாரம் பிரம்மாண்டமாக ஓங்கி வளரும்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 11.04.2017

09: இதில் எந்த துரோகமுமில்லை!

09: இதில் எந்த துரோகமுமில்லை!

நீங்கள் என்ன தொழில் செய்யலாம் என்று முடிவுசெய்துவிட்டீர்கள். அதற்குத் தேவையான ஆராய்ச்சி எல்லாம் செய்துவிட்டீர்கள். சந்தை நிலவரம், தொழில் வாய்ப்பு பற்றியெல்லாம் தெரிந்துகொண்டுவிட்டீர்கள். பணம் கிடைத்தவுடன் தொழில் ஆரம்பிக்கலாம். பெயர், இடம், நல்ல நேரம் என யோசிக்கிறீர்கள். அப்புறம் என்ன, “ஸ்டார்ட் மியூசிக்” என்று ஆரம்பிக்க வேண்டியது தானே?
300 சதவீதம் லாபமா?
கொஞ்சம் பொறுங்கள்! உங்கள் ஆராய்ச்சி எப்படி நடந்தது என்று முதலில் கூறுங்கள்! “கூகுள் பண்ணினேன், பத்திரிகைகளில் இது பற்றி படித்தேன், தெரிந்த சில பேரிடம் பேசினேன், அப்புறம் என்ன..” என்கிறீர்களா? இது போதாது. உங்கள் தொழில் பற்றிய சமீபத்திய வெள்ளை அறிக்கைகள் ஏதேனும் உண்டா? உங்களுக்குக் கிடைத்த எண்கள் நம்பத்தகுந்தவையா? இந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை.
என் நண்பர் ஒருவர் சொன்னார்: “ஓட்டல் பிசினஸில் 300 சதவீதம் லாபம்னு எல்லாரும் சொன்னாங்க. கையில் உள்ளதைப் போட்டுப் பெரிசா ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் கொடுத்த தரத்தை நாளடைவில் கொடுக்க முடியலை. ஆட்கள் கிடைப்பது இவ்வளவு கஷ்டம்னு ஆரம்பத்துல தெரியலை. தொடர்ந்து வந்த போட்டிகள்ல விற்பனை நிறைய குறைஞ்சு போச்சு. இப்ப மெஸ்ஸா மாத்தலாமான்னு யோசிக்கிறேன். இவ்வளவு இண்டீரியர்ஸ் பண்ணி வச்சிருக்கேன். எப்படிப் பிசினஸையே மாத்தறதுன்னு தெரியலை. இப்படி ஆகும்னு நினைக்கல!”
ஆராய்ந்ததும் ஆரம்பித்ததும்
எங்கு தவறு நடந்தது? அவர் `எஃப் அண்ட் பி’ மேகசின்ஸ் (உணவு வணிகம்) நிறைய படித்திருக்கிறார். பல நாட்டு ரெஸ்டாரெண்ட் அதிபர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. கையில் பணம் இருந்ததால் யாரிடமும் கடன் கேட்கவில்லை.
இந்தத் தொழிலில் இருந்த ஆர்வத்திலும் நம்பிக்கையிலும் எல்லாப் பணத்தையும் இதில் முடக்கியிருக்கிறார். ஆனால், இவர் ஆராய்ந்த ஓட்டல்களும் இவர் ஆரம்பித்த ஓட்டலும் வேறு வேறு பிசினஸ் மாடல்கள் கொண்டவை. ஒரு வங்கியிடம் போய்க் கடன் கேட்டிருந்தால்கூட ஆயிரம் கேள்விகளில் ஒன்றிலாவது இவர் அதை உணர்ந்திருப்பார். சொந்தக் காசு. கேள்வி கேட்கப் பார்ட்னரும் இல்லை. மிகப் பிரமாதமாய் ஆரம்பித்துத் தற்போது பெரும் குழப்பத்தில் இருக்கிறார். “300% லாபம் வரும் என்ற சொன்னவர்களைத் தேடிப் போய் உதைக்கப் போகிறேன்” என்றார் விரக்தியுடன்.
போட்டியாளரிடம் வேலை பாருங்கள்
இதற்குத்தான் நான் ஒரு ஆலோசனை சொல்வேன். உங்கள் போட்டியாளர்களை நன்றாக ஆராயுங்கள். முடிந்தால் அங்கு வேலைக்குச் சேருங்கள். ஒரு வருடமாவது வேலை பாருங்கள். தொழிலில் யாரும் சொல்லாத நெளிவு சுளிவுகள் புரியும். பிறரிடம் தொழில் கற்கச் சம்பளம் வேறு கிடைக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள். சம்பளத்துக்கு மேல் வேலை செய்யுங்கள். இதில் எந்தத் துரோகமுமில்லை. நம்மிடம் பணியாற்றுபவர்கள் நம்மிடம் தொழில் கற்றுப் பிரிந்து போவது எல்லாத் தொழில்களிலும் நடப்பவைதானே? ஆனால் வாங்கும் சம்பளத்துக்கு நியாயமாய் நேர்மையாய் இருப்பது அவசியம்.
நீங்கள் வேலை செய்யத் தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் உங்களுக்கு நிகரானவராக இருக்கணும். அளவில் ஓரளவு சமமாக இருக்கணும். மிகப்பெரிய போட்டியாளரிடம் சென்றால் அவர் பிரச்சினைகள் வேறாக இருக்கும். மிகக் குறைந்த இடத்திலும் உங்களுக்கான கற்றல் இருக்காது.
கேட்டு வாங்குங்கள்
உங்களுக்குப் போட்டியாளரிடம் வேலை செய்வதில் சிரமம் உள்ளதென்றால், அவசியம் ஒரு மார்க்கெட் ரிசர்ச் (சந்தை ஆராய்ச்சி) செய்யுங்கள். இதற்கு நீங்கள் பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்குச் சென்று தொழில் மூலதனத்தில் பாதியை ஃபீஸாகக் கொடுக்க வேண்டும் என்று பொருளில்லை. உங்கள் வசதிக்கு ஏற்ப ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்து அந்தப் பொறுப்பை ஒப்படையுங்கள். சில நிர்வாகப் பள்ளிகள் இதை இலவசமாகக்கூடச் செய்து தரலாம். ஆனால், உங்களுக்குத் தேவையான அனைத்து விபரங்களையும் பட்டியல் இடுங்கள். அவை அனைத்தையும் கேட்டு வாங்குங்கள்.
இந்தத் தொழிலின் வளர்ச்சி விகிதம் என்ன? தொழில் சார்ந்த சட்டங்கள், வரிகள் என்ன? தொழில் விரிவாக்க வாய்ப்புகள் உள்ளனவா? போட்டியாளர்கள் யார்? பணியாளர் செலவு எவ்வளவு இருக்கும்? லாப விகிதம் எப்படி இருக்கும்? தொழிலில் ஆபத்துகள் என்ன? இதற்குக் கடன் அளிப்பவர்கள் யார்? அரசு உதவி உண்டா? மூலதனமாகத் தேவதை முதலீட்டாளர்கள் (ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ்) வரச் சாத்தியம் உள்ளதா? அரசின் கொள்கை மாறுதல்களால் பாதிப்புகள் வருமா? இப்படி நிறைய கேள்விகளை முதலிலேயே கேட்பது நல்லது.
ஆழம் தெரியாமல்…
சந்தை ஆராய்ச்சி என்பது பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. எல்லாத் தொழில் முனைவுகளுக்கும் இது அவசியம். ஒரு தொழில் முனைவரால் எல்லாத் துறைகளிலும் நிபுணத்துவத்துடன் இருக்க முடியாது. அதனால் உங்கள் தொழில் பற்றிய எல்லா விதக் கேள்விகளையும் அந்தந்தத் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு நம்பத்தகுந்த ஆய்வு செய்து பதில்களை அறிவது நல்லது.
பலர் இதை ஒரு செலவாக நினைத்து ஓரம் கட்டிவிடுகிறார்கள். பெரிய தொழில் முதலீட்டில் இது ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும். ஒரு காப்பீடு போல நினைத்து இதைச் செய்ய வேண்டும். மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன் ஒரு ஹெல்த் செக் அப் நல்லதில்லையா?
‘ஆழம் தெரியாமல் காலை விடாதே’ என்பது எப்பேர்ப்பட்ட அனுபவ மொழி. என்ன நீச்சல் தெரிந்தாலும் ஆழம் அறிதல் அவசியம். தொழில் முனைவு என்பது காலை விடுதல் மட்டுமல்ல, உள்ளே குதித்தல். ஆழ அகலம் தெரிவது நல்லது. நீங்கள் ஆரம்பிக்க நினைக்கும் தொழிலைப் பற்றி அறிய முயற்சி எடுங்கள். அதற்குச் செலவாகும் பணம், நேரம், உழைப்பு அனைத்தும் மூலதனம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 04.04.2017

08: தோல்வி அவமானம் அல்ல!

08: தோல்வி அவமானம் அல்ல!

தொழில் செய்து தோற்றால் எப்படி உணர்வீர்கள்?
இதற்கான பதிலில் உங்களுக்குத் தொழில் ஒத்து வருமா என்று சொல்லிவிடலாம்.
யார் மீது பழி போடலாம்?
உங்களுக்குத் தெரிந்து தொழில் செய்து தோற்றவர்களைக் கேளுங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று. “ஃபைனான்ஸ்தான் பிரச்சினை. தொடர்ந்து கொட்டப் பணமில்லை.” “பார்ட்னர் ஏமாத்திட்டாரு.” “பேமென்ட் நிறைய நின்னுப்போச்சு. காசு திரும்ப வாங்கறதுக்குள்ள உயிர் போச்சு” “ஃபாரின் மார்க்கெட் விழுந்ததில நமக்குப் பெரிய அடி!” “கஸ்டமர் டேஸ்ட் மாறிப்போச்சு!”
இப்படி வெளிப்புறக் காரணிகளைக் குறை கூறுவோர் பொதுவாகத் தொடர்ந்து தொழில் செய்தாலும் தோல்வியைத்தான் தழுவுவர். ஆனால் தோல்விக்கு முழுதாகத் தான் பொறுப்பேற்கும்போது தோல்வியில் கிடைக்கும் பாடங்களைச் சுலபமாக உள்வாங்க முடியும்.
தோல்விக்கு யார் மீது பழி போடலாம் என்ற எண்ணம் தன்னம்பிக்கையின்மையால்தான் வரும். தன் மீது தவறில்லை என்பதை நிலைநாட்ட எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உண்மையைச் சந்திக்கும் தைரியமின்மையைத்தான் காட்டும். அதற்குப் பதில் ‘என்ன செய்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்?’ என்று யோசிக்கையில் நம் பொறுப்புகள் புரியும்.
எங்கே கணக்கு?
எனக்கு நேர்ந்த வியாபார அனுபவம் இது. ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் தொடர்ந்து சில ஆண்டுகளாகப் பயிற்சியும் தனிநபர் ஆலோசனைகளும் நடத்திக்கொண்டிருந்தேன். அனைவரும் பாராட்டும்விதமாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது, எப்போதும் பேமெண்ட் சற்றுத் தாமதமாகத்தான் வரும். துறைத்தலைவர் தெரிந்தவர். அதனால் எதையும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
ஒரு நாள் அந்தத் துறைத்தலைவர் வேலையை விட்டுச்சென்றார். அடுத்து வந்தவர் என் ஆறு மாதப் பேமெண்ட்டை நிலுவையில் வைத்தார். நேரில் சென்று கேட்டபோது, கடந்த ஆறு மாதங்களாக நீங்கள் அக்ரிமெண்ட்டை ரென்யூ செய்யவில்லை என்றார் (அதெல்லாம் அவசரமில்லை என்று சொல்லியிருந்தார் பழைய துறைத் தலைவர்!). புதியவர் என்னைப் பார்த்துக் கேட்டார், “எந்தக் கணக்கில் இதை நான் கொடுப்பது?” அப்போது, அவர் மீது மிகுந்த ஆத்திரம் வந்தது. சாட்சிக்கு ஆயிரம் பேரைக் கூட்டினாலும் இருக்க வேண்டிய முக்கிய ஒப்பந்தம் கையில் இல்லை. கேஸ் நிக்காது. சில லட்சங்கள் நஷ்டம்.
படிப்பினைக்கு ஃபீஸ்
திரும்பி வருகையில் ஒன்று புரிந்தது. அந்த ஆளை, பழைய ஆளை, கம்பெனியைக் குற்றம் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. சரியான ஒப்பந்தம் இல்லாமல் வாய் வழியாக வேலையை ஏற்றுக்கொள்வது எவ்வளவு பேராபத்து என்பதை உணர்ந்தேன். இந்தப் படிப்பினைக்கு நான் கொடுத்த ஃபீஸ் அந்தச் சில லட்சங்கள். மனம் மிகவும் லகுவானது. என்னால் மீண்டு வரக்கூடிய தொகையில், விலையில் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டேனே என்று நன்றியோடு எண்ணிக்கொண்டேன். அதனால் தான் இன்று பன்னீரில் நனைத்துப் பேசி அழைத்தாலும் ஒப்பந்தம் போடாமல் ஒரு நாள் கூட வேலை செய்வதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துள்ளேன்.
எங்கு, எப்படித் தோற்றோம்!
இப்படி ஒவ்வொரு தோல்வியிலும் நாம் கற்க வேண்டிய பாடங்கள் உள்ளன. பல பாடங்கள் பிஸினஸில் இருந்தே கற்றுக்கொள்ள வேண்டிவரும். வெகு சில நேரம் அது உங்கள் தொழிலையே ஒரு ஆட்டு ஆட்டும். தொழிலைவிட்டே வெளியே வரும் சூழல் வரலாம். அதுவும் ஒரு தொழில் முடிவுதானே தவிரத் தனிப்பட்ட தோல்வி என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
முதல் தொழிலே பெரும் வெற்றியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. கமல் பாடியது போல, “ஒண்ணு இரண்டு எஸ்கேப் ஆன பின்னே, உன் லவ்தான் மூணா சுத்துல முழுமை காணுமேடா!” என்பது உண்மையாகலாம்.
இங்கு பிஸினஸில் தோல்வி என்று குறிப்பிடுவதை அவமானமாக நினைக்கிறார்கள். எம்.பி.ஏ. போன்ற படிப்புகளுக்கு உங்கள் வியாபார அனுபவம் மிகப்பெரிய பிளஸ். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் பலவற்றில் உங்கள் வெற்றியடையாத் தொழில் முனைவுகளுக்கு மதிப்பு தந்து அட்மிஷனில் முன்னுரிமை தருகிறார்கள். தொழிலே செய்யாதவனை விடத் தொழில் செய்து தோற்றவனுக்குக் கண்டிப்பாகப் பிஸினஸ் கற்கும் ஆர்வம் அதிகம் இருக்கும். எங்கு எப்படித் தோற்றோம் என்று அறியத்தான்!
ஆங்க்ரி பேர்ட் கதை தெரியுமா?
பணம் கிடைத்தவுடன் கடின உழைப்பில் சில காலத்தில் ஒரே ஒரு உற்சாகப் பாட்டில் தொழிலில் வெற்றி பெற்று நிலைக்கலாம் என்பது விடலை லட்சியம். உங்களுக்கு உங்களைப் பற்றித் தெரியவே ஒரு சில தொழில் முனைவுகள் தேவைப்படலாம். அதனால்தான் எடுத்தவுடன் அகலக்கால் வைக்க வேண்டாம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
ஆங்க்ரி பேர்ட் என்ற மொபைல் விளையாட்டு எவ்வளவு பிரபலம் என்று உங்களுக்குத் தெரியும்? ஆனால் அவர்கள் அதற்கு முன் நூற்றுக்கு மேற்பட்ட விளையாட்டுகளை ஆப்களாக வெளியிட்டு அனைத்தும் தோல்வியைத் தழுவ, கம்பெனியை மூடும் சமயம் வெளிவந்ததுதான் ஆங்க்ரி பேர்ட். பின் லாபம் கொழிக்கும் மிகப் பெரிய நிறுவனமானது அது.
நாம் செய்வது தவறா சரியா என்று செய்யும்போது உணர முடியாது. அதனால் தான் தொழில் முனைவோர் எல்லா நேரத்திலும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
தோல்வி என்பது ‘இது வேலை செய்யாது’ என்ற கற்றலையும் வெற்றி என்பது ‘இது வேலை செய்கிறது’ என்ற கற்றலையும் தருபவையே. இரண்டுக்கும் நான் பொறுப்பு என்ற மனநிலை வருகையில் நீங்கள் தொழில் முனைவராகத் தகுதி அடைந்து விடுகிறீர்கள்.
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 28.03.2017

07: மனோ நிலைதான் முக்கிய மூலதனம்

07: மனோ நிலைதான் முக்கிய மூலதனம்

பலர் பிஸினஸில் ஜெயிக்காததற்கு முக்கிய காரணம், பணம் பற்றிய தவறான அல்லது குழப்பமான எண்ணங்கள்தான். தொழில் செய்யப் பணம் வேண்டும். பணம் செய்யத் தொழில் வேண்டும். அதனால் இவ்விரண்டைப் பற்றிய ஆதார எண்ணங்கள் உங்கள் ஒவ்வொரு முடிவையும் பாதிக்கும்.
நம் பிரச்சினை பணம் பற்றிய எண்ணங்கள். ‘பணம் என்ன மரத்திலா காய்க்கிறது வாரி இறைக்கிறதுக்கு?’
இப்படி சொல்லி வளர்க்கப்பட்டிருந்தால் ஒரு பற்றாக்குறை மனோபாவம் சுலபமாக வந்துவிடும். பணம் வந்தால் முடக்க வேண்டும். அடுத்து என்னாகும் என்று தெரியாது. இருப்பதை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். கொடுக்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். இப்படி நினைத்தால் முதலீடு செய்யவோ, தொழிலில் செலவு செய்யவோ, கடன் வாங்கவோ தைரியம் வராது. இவர்கள் தொழிலுக்கு வரமாட்டார்கள். வந்தாலும் முதல் தேக்கத்தில் வெளியேறிவிடுவார்கள்.
மாஸ் ஹீரோவின் வசனம்!
“பணம் அளவா இருக்கற வரைக்கும் தான் நிம்மதி. அளவுக்கு மேல் வந்தால் பிரச்சினை.”
எல்லா மாஸ் ஹீரோவும் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு பேசும் வசனம் இது. மதங்களும் காசு மனிதனை பாவம் செய்யத் தூண்டும் என்று போதிக்கிறது. ஆனால் பெரும்பாலான ஆலயங்களில் உண்டியலில் வசூலிக்கிறார்கள். பணக்கார வழிபாட்டு தலங்களில்தான் அதிக கூட்டமே சேருகிறது. அதேபோல பணக்காரர் ஆனால் நோய்கள் பெருகுமாம். ஏழைகளின் ஆரோக்கியத்துக்கு பங்கம் வராதாம். சம்பாதித்தால் வரி கட்டணும். சம்பாதிக்காவிட்டால் சலுகைகள் கிடைக்கும். இப்படி சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு தேக்க மனோபாவம் தொழில் செய்வதில் பெரிய தடையாக இருக்கும்.
“பணக்காரன் அயோக்கியன். தவறு செய்யாமல் பெரிய தொழிலதிபர் ஆக முடியாது!”
நம் ஏழை மாஸ் ஹீரோ பணக்கார வில்லனுடன் மோதுவதை எத்தனை ஆயிரம் முறை பார்த்திருக்கிறோம். (ஆனால், பணக்கார வில்லனின் மகள் ஓ.கே.!).
பலர் தோற்க சிலர் ஜெயிப்பது
பலரை ஏமாற்றிவிட்டுத்தான் சிலர் முன்னேற முடியும் என்ற கருத்து இங்கு தொடர்ந்து சொல்லப்படுகிறது. அதனால்தான் பணம் வைத்திருப்பவர் மேல் ஒரு வன்மம் வருகிறது. ஆனால், நம்மிடமிருந்து பணத்தாசையும் விலகுவதில்லை. அதனால்தான் நாம் பணம் சம்பாதிக்கும்வரை சம்பாதிப்பவரை நமக்குப் பிடிப்பதில்லை. பலர் தோற்க சிலர் ஜெயிப்பது என்பது வாழ்வின் எல்லா துறையிலும் நிகழ்பவை. இருந்தும் தொழிலதிபர் என்றாலே மோசமாக சித்தரிக்கப்படுகிறது. இதனால் நல்ல முறையில் தொழில் செய்து பணம் சேர்க்க முடியும் என்ற அடிப்படை எண்ணம் அடிபட்டுப் போய்விடுகிறது.
“பணம் வரும் போகும். பிஸினஸ் எல்லாம் சூதாட்டம் மாதிரிதான்!”
தொழிலின் நிலையில்லாத் தன்மை பற்றி கூறுவது போலத் தெரிந்தாலும் அடிப்படையில் சொல்லப்படும் செய்தி இதுதான்: “ நீ என்ன செய்தாலும் வந்தா வரும். போனால் போகும்!” இது ஒரு நம்பிக்கையில்லா மனநிலையை உருவாக்கும். இதற்கு நூறு உதாரணங்கள் கண்ணில் தென்படும். நமக்கு இதெல்லாம் அவசியமா என்ற கேள்வி வரும். அதீத பாதுகாப்பு உணர்வுதான் மிஞ்சி நிற்கும். நமக்கு சரிப்படாது என்று விலகி நிற்க வைக்கும்.
மனசு போல வாழ்க்கை!
“நம்ம ராசி, உப்பு விக்க போனா மழை வரும். உமி விக்கப் போனா காத்தடிக்கும்!”
நான் பல முறை எழுதிய விஷயம்தான். மனசு போல வாழ்க்கை! எந்த எண்ணம் வலுவாக உள்ளதோ, அது நிஜம் என்று நிரூபிப்பது போன்ற காரியங்கள் நிகழும். ராசி என்பார்களே அது இப்படித்தான் நிகழும். வெற்றிகள் வெற்றியை கவர்வதும் தோல்விகள் தோல்விகளை கவர்வதும் இதனால்தான். ஒருவர் தொடர்ந்து தோல்விகளை எதிர்கொள்கிறார் என்றால் நிச்சயம் அவர் எண்ணங்கள் தோல்விகளுக்காக வடிவமைக்கப்பட்டவை என்று புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக பயம், சந்தேகம், குரோதம், நம்பிக்கையின்மை என்று எதிர்மறை எண்ணங்கள் வலுவாக உள்ளவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது கடினம்.
தொழில் பற்றி ஆலோசனைக்கு வருவோர் பலருக்கு நிஜமான தேவை தொழிலதிபருக்கான உளவியல் ஆலோசனைதான். முதலாளி எடுக்கும் ஒரு முடிவு அவரை, அவர் சம்பந்தப்பட்டோரை, சம்பந்தப்பட்ட தொழிலை முழுமையாக பாதிக்கும். அதனால் தொழில்முனைவோரின் மனோ நிலைதான் ஒரு தொழிலின் முக்கிய மூலதனம்!
பணத்தை மதிக்க வேண்டும்
பணம் பற்றி நேர்மறையான எண்ணங்கள் தொழில் புரிய அவசியம். பொருள் ஈட்டுவதும், லாபமடைவதும், பிறரை வளர்ப்பதிலும் மகிழ்வு கொள்பவர்களுக்கு தொழில் சிறக்கும். செல்வம் ஈட்ட, கடினமாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். பிறருடன் சேர்ந்து பணம் போடவும், பணம் பெருக்கவும், பணத்தைக் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். பணம் தரும் தொழில் சார்ந்த செயல்கள் மட்டும் செய்ய கவனக்குவிப்பு வேண்டும்.
முக்கியமாக பணத்தை மதிக்க வேண்டும்.தொழில் கூடத்தில் கடவுள் உருவப்படம் எதற்கு? செல்வம் தெய்வீகமானது என்று உணர்த்தத்தான். பணம் பலரின் வாழ்க்கை பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியது. பல வளர்ச்சித் திட்டங்களுக்கு உயிர் கொடுக்கக் கூடியது.
எந்த இனம் செல்வத்தை தெய்வமாக மதித்து, அதை சரியான வழியில் பராமரித்து, அதன் பலனை மொத்த சமுதாயத்துக்கு பங்கிட்டுத் தருகிறதோ அதுவே செழிக்கும் என்பது உலக வரலாறு. பிறரை சுரண்டிச் சேர்க்கும் காசு காலப்போக்கில் புரட்சி மூலம் சமநிலைப்படும். ஆனால் நல்ல வழியில், கடின உழைப்பில், சமூக நோக்கில் செய்யப்படும் தொழில்கள் காலம் காலமாக தழைத்து நிற்கும். அனைவரின் கடின உழைப்பால், தியாகத்தால், சிறப்பான நிர்வாகத்தால், மக்களின் திறனால், அனைவரின் ஒத்துழைப்புடன் மட்டுமே லாபமான தொழிலை நிலைக்கச் செய்ய முடியும். இதற்கு குறுக்கு வழிகள் இல்லை. இதை நிரூபிக்க ஆயிரம் தொழில் கதைகள் உள்ளன. ஆனால், அவை அனைத்தையும் அண்ணாந்து பார்க்கத் தேவை நம்பிக்கை.
பணம் பற்றிய நம்பிக்கை. தொழில் பற்றிய நம்பிக்கை. வாழ்க்கை பற்றிய நம்பிக்கை. தன்னம்பிக்கை!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 21.03.2017

06: உடைத்துப் பேசுவது நல்லது!

06: உடைத்துப் பேசுவது நல்லது!

சொந்தத் தொழில் செய்வது என்பது வாழ்க்கையின் முக்கிய முடிவு. அதனால் உங்கள் குடும்பத்தின் ஆதரவும் புரிதலும் உங்களுக்கு நிச்சயம் தேவை. முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு இது அத்தியாவசியம். சொந்தத் தொழில் பற்றி ஒவ்வொரு குடும்பத்துக்கும் கலாசாரம் சார்ந்த பார்வை ஒன்று உண்டு. “இந்தத் தொழில் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமா?”, “இந்தத் தொழில் செஞ்சா உனக்குப் பொண்ணு குடுக்க யோசிப்பாங்க!” போன்ற கேள்விகள் வரும்.
எதிர்பார்ப்புகள் உடையும்!
அதேபோல உங்கள் வாழ்க்கை முறையை முழுவதும் மாற்றக்கூடியது உங்கள் தொழில். அதை உங்கள் குடும்பத்தினர் புரிந்துகொள்ள வேண்டும். பாரம்பரியமாகத் தொழில் புரிபவர் வீட்டில் இது இயல்பாக நடக்கும். “அவரு கடையை மூடிட்டு வீட்டுக்கு வர ராத்திரி 11 ஆகும்!”, “வெளியூர் போகறதுன்னா நிறைய பிளான் பண்ணனும்!” “சதா செல்ஃபோன்லதான் இருப்பார். ஏன்னா கஸ்டமர் எப்ப கூப்பிட்டாலும் எடுக்கணும்!”
ஆனால் வேலைக்குச் செல்பவர்கள் வீட்டிலிருந்து புதிதாக ஒருவர் தொழில் செய்ய ஆரம்பிக்கும்போது நிறைய எதிர்பார்ப்புகள் உடைந்துபோகும். “வியாழன் பண்டிகை லீவு. வெள்ளி லீவு போட்டா சனி, ஞாயிறு சேத்து நாலு நாள் ஃப்ரீ. எங்காவது போகலாம்” என்று நினைப்பது வேலை பார்ப்பவர் மனோபாவம். “பண்டிகை, மழை, லீவு நாள் எல்லாம் சேத்து 21 நாள்தான் இந்த மாசம் புரொடக்ட்டிவா இருக்கு. அதுக்குள்ள டார்கெட்ட முடிக்கணும்” என்று நினைப்பது தொழில் செய்பவர் எண்ணம்.
அதிலும் தமிழ் சமூகத்தில் பாராட்டுதல் முக்கியம். சொந்த வீடு இருக்கணும். செய்யும் வேலை அல்லது தொழில் பெருமையாய்ச் சொல்லிக் கொள்வதாய் இருக்கணும். இப்படி நிறைய சொல்லலாம். அதனால்தான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ஹோம் லோன் போட்டு ஃப்ளாட் வாங்கி ‘ஈஎம்ஐ’யால் நம்மைச் சிறைப்படுத்திக் கொள்கிறோம். நாம் செய்ய முடியாதவை அனைத்துக்கும் இதைக் காரணமாகச் சொல்வோம். “மாசாமாசம் முப்பதாயிரம் ஈஎம்ஐ. இது முடியாம வேற எந்த ரிஸ்கும் எடுக்க முடியாது!”
வீட்டிலேயே ஐடியா இருக்கும்
வட மாநிலத்தைச் சேர்ந்த பெரிய வியாபாரிகளை சென்னையில் பார்த்திருப்பீர்கள். அவர்கள் வசிப்பிடத்தைப் பார்த்திருக்கிறீர்களா? குறுகலான சவுகார்பேட்டைத் தெருக்களில் கூட்டுக் குடும்பமாக வாடகை வீட்டில் வசிப்பார்கள். வீடு, ஆஃபீஸ், கார் என்பதில் பகட்டு இருக்காது. மொத்தக் கவனமும் தொழிலில் மட்டும்தான்.
நம் சமூகம் அப்படியில்லை. தொழில் ஸ்திரப்படும் முன்னே ஆபீஸ் வைக்கப் பிரமாதமாய்ச் செலவு செய்வார்கள். விசிட்டிங் கார்டை அசத்தலாக அச்சிடுவார்கள். புதுமனை புகு விழா போல ஊரை அழைத்துச் சொல்வார்கள். பாங்க் லோனையும் தெரிந்தவர்களிடம் கடனையும் கிடைத்த மட்டும் வாங்குவார்கள். வருமானம் வருவதற்கு முன்பே செலவுகளை ஏற்றிக்கொள்வது காலில் கல்லைக் கட்டிக்கொண்டு ஓடுவது போலத்தான்.
முதலாவதாக, உங்கள் குடும்பத்தினரிடம் நீங்கள் அவசியம் பேச வேண்டும். பெற்றோர், வாழ்க்கை துணை, பிள்ளைகள் எல்லோரும் அவசியம். என்னிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களைப் பெரும்பாலும் குடும்பமாகத்தான் வரச்சொல்வேன். அவர்கள் பின்புலம் அறிய மட்டுமல்ல, தொழிலால் ஏற்படக்கூடிய குடும்பச் சிக்கல்களையும் ஆரம்பக் காலத்திலேயே சரி செய்யத்தான். பல நேரங்களில் வீட்டிலேயே நல்ல பிஸினஸ் ஐடியாக்கள் இருக்கும். ஆனால் அவற்றைக் குறைத்து மதிப்பிட்டு விடுவோம். அதே போலச் சில நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை முதலிலேயே விவாதிக்காமல் விட்டுவிடும் அபாயமும் உண்டு.
எல்லாவற்றையும் உடைத்துப் பேசுவது நல்லது. மூன்று வருடங்கள் போராடினால்தான் ‘பிரேக் ஈவன் வரும். அதாவது, போட்ட முதலுக்கு இணையான வருமானம் கையில் கிடைக்கும். வருமானம் வந்தாலும் அதை மீண்டும் முதலீடு செய்ய வேண்டிவரும். அதுவரை பொருளாதாரச் சுமை இருக்கும். சொந்தக் காரியத்துக்கு வெளியூர் பிரயாணம் முடியாது. குடும்பச் செலவுகூடக் குறைக்க வேண்டியிருக்கும். இது புரிதலுக்கும் திட்டமிடலுக்கும் கவனக் குவிப்புக்கும் உதவும்.
இது வேலை நேரம்
வீட்டிலேயே கொஞ்சக் காலம் ஆபீஸ் நடத்த வேண்டி வரலாம். அப்போது கட்டுப்பாடுகள் மிக அவசியம். உங்கள் கட்டுப்பாடுதான் உங்கள் குடும்பத்தினரிடமும் கட்டுப்பாட்டை வரவழைக்கும். நேரங்காலமின்றி வீட்டிலேயே புதிய தொழிலுக்கான திட்டமிடலை நடத்தும்போது, ஆரம்பத்தில் உங்கள் குடும்பத்தினருக்குப் புரிய வாய்ப்பு இல்லை. நீங்கள் ஒரு முக்கிய வியாபார வியூகம் அமைக்கச் சிந்திக்கையில், “கொஞ்சம் ஃப்ரீயா இருந்தா கடைக்குப் போய்க் கொஞ்சம் வெங்காயமும் தக்காளியும் வாங்கிட்டு வாங்களேன்” என அனுப்பப்படலாம்.
அதனால் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் இருந்தால், நீங்கள் வியாபார வேலை செய்கிறீர்கள் என்பதை உணர்த்த வேண்டும். இன்று தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் பல தொழில்களுக்கும் ஆரம்பப் பொருள் சார்ந்த மூலதனம் ஒரு கணினிதான். உங்கள் நேரமும் இயக்கமும்தான் அறிவு சார்ந்த மூலதனம். அதனால் அதற்குப் பங்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பல தொழில்களில், ஒரு அலுவலகம் அமைக்கும் அவசியம் வரும் வரை வீட்டிலிருந்து செயல்படலாம். ஆனால் குடும்ப உறவுகளையும் தொழில் இயக்கத்தைச் சரிவரச் சமாளிக்கத் தெரியாமல்தான் பலர், பள பளா ஆபீஸ் போட்டுத் தனியாக உட்கார்ந்து வேலை செய்கின்றனர்.
குடும்பத்தாருக்குப் புரியவையுங்கள்!
ஆகவேதான், முதலில் குடும்பத்துடன் பேசித் தொழில் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும். வீடா தனி அலுவலகமா என்பதல்ல இங்குப் பிரச்சினை. உங்களுடைய தொழிலுக்கு உங்கள் குடும்பம் முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறதா என்பதுதான் கேள்வி. நீங்கள் தளரும் போது உங்களைத் தாங்கிப் பிடிக்கும் சக்தி கொண்டது உங்கள் குடும்பம்.
“இவ்வளவு கஷ்டம் எதுக்கு? ஒரு வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க முடியாதா?” என்ற கேள்வி வந்தால் உங்கள் தன்னம்பிக்கை கண்டிப்பாக அடிபடும். “எது ஆனாலும் பரவாயில்லை. சமாளிக்கலாம்.” என்று சொல்லும் வகையில் இருந்தால் உங்கள் சிந்தனை தொழிலில் ஜெயிப்பதில் மட்டும் இருக்கும். குடும்பத்தைச் சரிக்கட்டுவதில் இருக்காது.
சிலருக்குக் குடும்பத்தை மீறித் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கலாம். இது அவர்களுக்கான ஆலோசனை அல்ல. ஆனால் பெரும்பாலானவர்கள் குடும்ப ஆதரவு பெற வாய்ப்பு உள்ளது. அதேநேரம் குடும்பத்தினரைத் தொழிலில் முழுமையாக ஈடுபடுத்தலாமா என்றால், அது வேறு விஷயம். அதைப் பற்றி பிறகு விரிவாகப் பேசலாம்.
ஆக, தொழில் எண்ணம் வந்தவுடன் முதலில் பேச வேண்டியது உங்கள் குடும்பத்துடன். ஒரு முதலீட்டாளருக்குப் பிரசன்டேஷன் செய்ய வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்வீர்களோ அதே சிரத்தையுடன் எல்லாவற்றையும் குடும்பத்தினரிடம் சொல்லுங்கள்.
முதலில் உங்கள் வாழ்க்கை இணையைச் சம்மதிக்க வையுங்கள். பிற்காலத்தில் கஸ்டமர்களைச் சம்மதிக்க வைப்பதில் பெரிய சிரமம் தெரியாது!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 14.03.2017

Friday, June 23, 2017

அரசு நிறுவனங்களுக்கு ஐகோர்ட் அறிவுரை

அரசு நிறுவனங்களுக்கு ஐகோர்ட் அறிவுரை
சென்னை: 'ஒரு வழக்கை தாக்கல் செய்வதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும்' என, அரசு நிறுவனங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 

சென்னையை சேர்ந்த, 15 வயதான மணிகண்டன், அரசு போக்குவரத்துக் கழக பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தான். ஆறு லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, மணிகண்டனின் தாயார் விசாலாட்சி வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம், 10.48 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது. 
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், போக்குவரத்துக் கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், 'அதிகபட்சமாக, இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, நீதிபதி விமலா பிறப்பித்த உத்தரவு:
விபத்தில், மணிகண்டனின் இடுப்பு எலும்பு முறிந்தது. மேலும், சிறுநீர் பையிலும் பாதிப்பு ஏற்பட்டதால், சிறுநீர் வருவதை அடக்க முடியாத நிலை ஏற்பட்டது. சிறுநீர் கழிக்க பொருத்தப்பட்ட குழாயை, மாதம் இரு முறை மாற்ற வேண்டி உள்ளது. இந்த பாதிப்பினால், மணிகண்டன் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பாதிக்கும் திறனை முழுமையாக இழந்துள்ளான்.
எனவே, மணிகண்டனுக்கு, இழப்பீட்டு தொகையை, 25 லட்சமாக வழங்க வேண்டும். அந்த தொகையை, வட்டியுடன் சேர்த்து, 'டிபாசிட்' செய்ய வேண்டும். மாநில போக்குவரத்து கழகம், அரசின் வழக்காடும் கொள்கையை பின்பற்றி இருந்தால், இந்த மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருக்காது. மனுதாரர் கோரிய தொகையை விட, கூடுதலாக தீர்ப்பாயம் வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலையை, போக்குவரத்து கழகம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
இனி மேலாவது, மாநில அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், ஒரு வழக்கை, குறிப்பாக மேல் முறையீட்டு வழக்கை தொடர்வதற்கு முன், இரண்டு முறை யோசிக்க வேண்டும். 
இந்த மேல் முறையீட்டு வழக்கில், போக்குவரத்து கழகம் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல், மேலும் கூடுதலாக இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டி உள்ளது. நீதிமன்றத்தில் வழக்குகளின் பெருக்கத்திற்கு வழி வகுக்காமல், அரசு துறைகள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 24.06.2017

05: முதல் முறை என்ன தேவை?

05: முதல் முறை என்ன தேவை?

ஒரு தொழில் செய்வதற்கு முன் சின்னதாய் ஒரு ஆராய்ச்சி அவசியம்.
கண்ணில் படும் வாய்ப்புகளெல்லாம் கவர்ச்சியாகத் தெரியும். குறிப்பாக ‘ஸ்டார்ட் அப்’ பற்றி வரும் செய்திகள் ரொம்பவும் தெம்பு கொடுக்கும். குறுகிய காலத்தில் இத்தனை கோடி வருமானம், இத்தனை கோடி முதலீடு, இவ்வளவு பெரிய வளர்ச்சி என்று படிக்கையில் நாமும் அப்படி ஒன்று தொடங்கினால் என்ன என்று தோன்றும்.
ஆனால் முழு பக்க விளம்பரம் தரும் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன என்றால் நம்புவீர்களா? முதலீடு செய்யப் பெரும் தந்திரம் தெரிந்த பலர் வியாபாரம் மூலம் பணம் பண்ண முடிவதில்லை. அதைவிடவும் முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து கம்பெனியின் மதிப்பை ஏற்றி, நல்ல நிலையில் உள்ளபோது தங்கள் பங்குகளை விற்று வெளியேறி வேறு தொழிலில் செட்டில் ஆவார்கள். Golden Tap எனும் புத்தகத்தைப் படிக்கையில் இந்த வியாபாரச் சூழல் புரியும்.
சந்தை ஆராய்ச்சி அவசியம்
அதனால் நீங்கள் ஆரம்பிக்கும் தொழிலின் சந்தை பற்றியும், அதில் ஏற்கெனவே உள்ள கம்பெனிகளின் நிலை, சந்தையின் வளர்ச்சி விகிதம், முக்கிய சவால்கள் என அனைத்தையும் ஆராயுங்கள். கட்டிடம் கட்டி விற்பது என்று முடிவெடுத்தால், ரியல் எஸ்டேட் பற்றிய ஆய்வுகள், அறிக்கைகள், அரசாங்கத் திட்டங்கள், முக்கியப் போக்குகள் எல்லாவற்றையும் படியுங்கள். எல்லாப் பெரிய நிறுவனங்களும் இப்படி ஒரு சந்தை ஆராய்ச்சி செய்யாமல் எந்தப் புதிய தொழிலிலும் இறங்குவதில்லை.
என்னைக் கேட்டால் பெரிய நிறுவனங்கள் செய்வதைவிட முதல் முறை தொழில் செய்ய நினைப்பவர்கள், இப்படி ஆராய்ச்சி செய்வது அத்தியாவசியம். தொழில் ஆலோசகர்களை நாடி அவர்களின் உதவியுடன் இதைப் புரஃபெஷனலாகச் செய்வது நல்லது.
எனக்குத் தெரிந்த ஒரு ஆடிட்டர் தன் மகனுக்குக் கார் பொட்டீக் (காரின் உள்புற வேலைப்பாடுகளுக்காக) ஒன்று வைத்துக் கொடுத்தார். வெறும் பிஸினஸ் மாடல் மட்டும் போட்டுப் பார்த்து, கையில் உள்ள பணத்தால் நல்ல இடத்தில்தான் தொழில் ஆரம்பித்தார். ஆனால் இரு ஆண்டுகள் ஆகியும் போதிய வியாபாரம் ஆகவில்லை. தொழிலை நடத்தவே மாதா மாதம் பணம் செலவானது. முதலில் சந்தை ஆராய்ச்சி செய்ய யோசித்தவர் தற்போது ‘பிஸினஸ் டயக்னாஸ்டிக்ஸ்’காக என்னிடம் வந்தார். கட்டிடம் கட்டுவதற்கு முன் பிளான் போடுவதற்கும் கட்டி முடித்த பின் மாற்றியமைக்கப் பிளான் போடுவதற்கும் எவ்வளவு வித்தியாசம்?
இதற்கு இன்னொரு சிறந்த வழி தொழிலுக்கு வங்கி அல்லது தனியாரிடம் கடன் கேட்டுச் செல்வது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்கள் வேண்டுமென்றால் நிச்சயம் ஒரு ஸ்டடி செய்வது நல்லது.
குறை சொல்பவர்கள் வேண்டும்
பாஸிடிவாக யோசிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் தொழிலில் நெகடிவாக உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்வது. குறை கண்டு பிடிப்பதுகூட இங்குப் பெரும் திறன். அதனால் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கியவர்களைத் தேடிப் பிடித்து உங்கள் ஐடியாவைச் சொல்லுங்கள். நீங்கள் பார்க்காத பல அபாயங்களை அவர்கள் பார்க்கலாம். அதற்காகத் தொழிலைக் கைவிட வேண்டாம். உங்கள் திட்டத்தை இன்னமும் வலுப்படுத்திக் கொள்ளலாம்.
பலரின் கேள்விகளாலும் புறக்கணிப்புகளாலும் உங்கள் தொழில் எண்ணம் மெருகேறும். இளைஞர்களுக்கு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் தொடர்ந்து அளித்துவரும் நான் பிஸினஸ் என்று ஆலோசனைக்கு வருகையில் மட்டும் முதலில் அவர்கள் திட்டத்திலுள்ள குறைகளுடன்தான் செஷனை ஆரம்பிப்பேன். பிழை நீக்க மட்டுமல்ல, அவர்கள் இந்தத் தொழிலில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்று அறியவும் இதைச் செய்வேன்.
உங்களுடைய முடிவுதான்!
பல திரைப்பட இயக்குநர்களுக்கு முதல் படம் தரும் வெற்றி இரண்டாம் தராது. காரணம் என்ன? ஒரு கதையை வருடக்கணக்கில் யோசித்து, நூற்றுக்கணக்கான கம்பெனிகள் ஏறி இறங்கிக் கதை சொல்லி, அவர்களில் பலர் கதையை நையப்புடைத்து, ஆயிரம் கேள்விகள் கேட்டு, பலரின் யோசனைகள் கேட்டு, பல பல மாறுதல்கள் செய்து, கடைசியாக ஒரு புரொடியூசர் சிக்குகையில் ஒரு காவியம் தயாராக இருக்கும்! அதனால்தான் சினிமாவில் கதை எழுதுவதைவிடக் கதையை விவாதிப்பார்கள். தயாரிப்பாளர் முதல் கடைசி அசிஸ்டெண்ட்வரை கருத்து சொல்லலாம். முதல் பட வெற்றிக்குப் பிறகு உடனடியாக அட்வான்ஸ் வாங்கித் தனியாகக் கதை யோசித்து அவசரமாக எடுக்கையில் படம் படுக்க வாய்ப்புகள் அதிகம்.
எத்தனை பேர் கருத்து சொன்னாலும் கடைசியாக எதை எடுப்பது, எதை விடுப்பது என்பது இயக்குனரின் தேர்வு. அது போலதான் தொழில் ஆலோசகர், வங்கி மேலாளர், முதலீட்டாளர், கடன் தரும் நண்பர் என யார் என்ன சொன்னாலும் கடைசியாக இந்தத் தொழிலை எப்படி நடத்துவது என்பது உங்களுடைய முடிவுதான்! பின் ஏன் இதை எல்லோரும் செய்வதில்லை? அவசரம் தான். தனக்கு நிறைய தெரியும் என்ற எண்ணம். பிறரைக் கேட்டால் குழப்பி விடுவார்கள் என்ற பயம். இப்படி நிறைய இருக்கும்.
ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?
பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு கார்ப்பரேட் ஃபிலிம் எடுத்த போது படத்தைத் தொகுத்துக் கொண்டிருந்த எடிட்டர் சொன்னார்: “எஃப்.சி.பி. தான் இனி மேல் எல்லாம். ஒரு கம்ப்யூட்டரும் இந்த சாஃப்ட்வேரும் வாங்கிப் போட்டா அந்தக் காசை மூணு பட எடிட்டிங்கில எடுத்துடலாம். தவிர சீரியல் ஒண்ணு கையில் இருந்தா ரொம்ப சேஃப். அஞ்சு லட்சம் ரூபாய் போதும். அதிகப் பட்சம் ஆறு மாசத்துல பெரிசா லாபம் பார்க்கலாம்!”
தொழில் ஆரம்பித்த பின்புதான் எப்படித் தடாலடியாக தொழில்நுட்பத்தின் விலை குறையும், படங்கள் உள்ளே வருவதில் எவ்வளவு சிக்கல், சீரியலில் பேமெண்ட் வாங்குவதில் எவ்வளவு தாமதம் என எல்லாம் தெரிந்தது. சொன்ன நண்பர் ஆறு மாதத்தில் கம்பி நீட்டிவிட்டார். கடைசியாக மொத்தத்தையும் பாதி விலைக்குக் கொடுத்து வெளியே வந்தேன்.
“என்ன சார் நீங்க போய் இப்படிப் பண்ணீட்டீங்க? என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?” என்று விஷயம் கேள்விப்பட்ட திரைப்படம் சார்ந்தவர்கள், ஒரு டஜன் பேராவது என்னிடம் கேட்டிருப்பார்கள். ஆனால், தொழில் தொடங்க நினைத்த போது யாரிடமும் ஆலோசனை கேட்கும் மனநிலை எனக்கு இல்லை.
பிறரிடம் ஆலோசனையோ உதவியோ கேட்கத் தயங்குபவர்கள் தொழிலில் ஜெயிப்பது சிரமம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 07.03.2017

04: ஏதாவது செய்ய முடியுமா?

04: ஏதாவது செய்ய முடியுமா?

தொழில் தொடங்கும் புள்ளி என்று எதைச் சொல்லலாம்? தொழில் எண்ணம் கொண்டவர்களுக்குச் சந்தையில் நிறைய வாய்ப்புகள் கண்ணில் தென்படும். ‘இதைச் செய்தால் காசு வரும்’ என்று தோன்றக்கூடிய பத்து ஐடியாக்களையாவது நீங்கள் தாண்டி வந்திருப்பீர்கள். தொழில் முனைவோரின் ஆதாரத் தகுதி சந்தை வாய்ப்புகளைக் கண்டு கொள்வதுதான்.
ஆரம்பிக்கலாம், பண்ணலாம், தரலாம்!
பிறர் கண்களுக்குத் தெரியாத தொழில் வாய்ப்புகளை நீங்கள் உணர்வீர்கள். மனம் ஒட்டுமொத்த வியாபாரச் சுழற்சியையும் ஒரு முறை நடத்தி ஒத்திகை பார்க்கும். பிறரிடம் சொல்லி சிலாகித்துக்கொள்வீர்கள்.
“சுத்து வட்டாரத்துல ஓட்டலே கிடையாது. இவ்வளவு கவர்மெண்ட் ஆஃபீஸ்கள் இருக்கு. ஒரு டிஃபன் சென்டர் போடலாம்!”
“நாங்க குடியிருக்குற ஃப்ளாட்ல மட்டும் 250 குடும்பங்கள் இருக்கு. நிறைய வயசானவங்க தனியா இருக்காங்க. அவங்களுக்கு தேவையான எல்லா வெளி வேலைகளையும் பாக்க ஒரு சர்வீஸ் ஏஜென்சீஸ் ஆரம்பிக்கலாம்!”
“ஃபைனல் இயர் படிக்கிற பசங்களுக்கு இண்டெர்ன்ஷிப் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு ஆப் (App) செஞ்சு காலேஜ் பசங்களையும் இண்டஸ்ட்ரி ஹெச். ஆர். எல்லாம் கனெக்ட் பண்ணலாம்!”
“எல்லாருக்கும் இயற்கை உணவு மேலதான் இப்ப கவனம் வந்திருக்கு. ஆனா போய் வாங்கத்தான் சிரமப்படறாங்க. அதனால் ஹோம் டெலிவரி செய்யலாம். ஆர்டரின் பேரில் வாங்கித் தரலாம்!”
இதில் எதுவும் பூமியைப் புரட்டிப் போடும் புதிய சிந்தனை இல்லை. இந்தத் தேவைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதை ஒரு வியாபாரமாக உருவாக்குவதுதான் தொழில் முனைவோரின் திறமை.
விரக்தி உருவாக்கியத் துறை
கண்ணில் படும் தேவையை வைத்துப் பிஸினஸ் மாடல் பிடிக்கலாம். ரெட் பஸ் போல. தீபாவளிக்கு முன் இரவு நாலைந்து மணி நேரங்கள் அலைந்தும் பஸ் கிடைக்காமல் விரக்தியோடு திரும்பியவர் மனதில் உதித்தது இதுதான். பல பிரயாணிகளுக்கு எந்தப் பஸ்ஸில் இடம் உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் பண்டிகை நாளில்கூடச் சில பஸ்கள் முழுக்க நிரப்பப்படாமல் புறப்படுகின்றன. காரணம் இந்தத் தகவல் இரண்டு பக்கமும் இல்லை. இதைப் பூர்த்தி செய்ய ஒரு தகவல் தொடர்பு சேவை இருந்தால்? இந்த எண்ணம் ஒரு கம்பெனியை மட்டும் உருவாக்கவில்லை. ஒரு துறையையே உருவாக்கியுள்ளது.
நடந்தபடியே பாட்டுக் கேட்போமா?
எல்லாத் தேவைகளும் கண்ணில் படுமா? வாடிக்கையாளர்களுக்கே தெரியாத தேவைகள் நிறைய உள்ளன. அவர்கள் அதைக் கேட்க மாட்டார்கள். கொடுத்தால் ஆர்வமாக வாங்கிக் கொள்வார்கள். உதாரணம் வாக் மேன்.
மியூசிக் சிஸ்டம் என்றால் வரவேற்பு அறையில் உட்கார்ந்து அமைதியாகக் கேட்பது என்பதுதான் உலகம் முழுதும் நடைமுறை. சாலையில் நடந்து போகும்போது இசை கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்? சோனி நிறுவனர் அகியோ மொரீடோவுக்கு இப்படி ஒரு எண்ணம். ஆனால் இப்படி ஒரு தேவை இருப்பதாக எந்த சந்தை ஆய்வும் சொல்லவில்லை. யாரும் கடை தேடி வந்து கேட்கவும் இல்லை. ஒரு அனுமானம்தான் இருந்தது முதலாளிக்கு. போர்ட் உறுப்பினர்களிடம் சொன்ன போது யாரும் இதைப் பெரிதாக வரவேற்கவில்லை. மனம் தளராத மொரீடா இதைத் தன் ஆர் & டி பணியாக எடுத்துச் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு நாள் அதைச் சிறிய அளவில் வெளியிட்டார். வாக் மேன் என்று பெயரிட்டார். “என்ன பெயர் இது? நடக்கவும் உதவவில்லை. ஆண்களுக்கானதுமில்லை. ப்ராடெக்டும் புதுசு” என்று எல்லோரும் புருவம் உயர்த்தப் பெயரை மட்டுமாவது மாற்றலாமா என்று யோசித்தார். ஆனால் அதற்குள் இது பரபரப்பாக விற்பனை ஆனது, வாடிக்கையாளர்களிடம் பதிந்துவிட்ட பெயரை மாற்ற வேண்டாம் என்று அப்படியே விட்டு விட்டார் அகியோ மொரீடா. வாக் மேன் ஒரு தலைமுறையையே தன் கட்டுக்குள் வைத்திருந்தது.
யாருக்கும் தெரியாத தொழில் தேவையை எப்படிக் கண்டு பிடித்தார்? அதனால்தான் அவர் தொழில் மேதை. சோனி நிறுவனம் நுழையாத துறை இல்லை எனும் அளவுக்கு வளர, இந்தக் குணம்தான் காரணமாக இருந்தது.
முதலீட்டுக்கும் முன்னால்
உங்களைச் சுற்றி, உங்களுக்குத் தெரிந்து, உங்களால் செய்ய முடியும் என்று நீங்கள் நம்பக்கூடிய தொழில் தேவைகளைப் பட்டியல் இடுங்கள். கண்ணில் படும் எல்லாத் தேவைகளையும் நம்மால் பூர்த்தி செய்ய முடியாது. நூற்றுக்கணக்கான ஐடியாக்களில் சரியானதைத் தேர்வுசெய்வதில்தான் பாதி வெற்றி உள்ளது.
என்னிடம் தொழில் ஆலோசனை கேட்டு வரும் பலர் இந்த முதல் படியையே தாண்டுவதில்லை.
ஏதாவது தொழில் செய்யணும் சார். கொஞ்சம் பணம் இருக்கு. என்ன செஞ்சா நல்லா பெரிய லெவலுக்கு வரலாம்னு சொல்லுங்க!” என்று யாராவது கேட்டால் அவர்கள் பிஸினஸுக்கு இன்னமும் தயாராகவில்லை என்றுதான் பொருள்.
நூறு தொழில் யோசித்து, பத்துத் தொழில் ஆராய்ந்து, ஓரிரு தொழிலுக்கு மாதிரி தயாரித்து, ஆலோசனை கேட்டுவிட்டுப் பணம் முதலீடு செய்வது நல்லது. பணத்தைப் போட்டு ஆரம்பித்த பின் யோசித்தால் அதைக் காப்பாற்ற நிறைய செலவு செய்ய வேண்டிவரும்.
மறைந்த திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ராம நாராயணன் ஒரு கருத்தைச் சொன்னார், “ பேப்பரில் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதி எழுதிக் கிழித்துப் போடலாம்; ஆனால் ஃபிலிமில் எடுத்து வெட்டி வெட்டி எறியக் கூடாது!”
ஒரு இயக்குநர் என்பதை விடப் படத்தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் மீது அளப்பரிய மரியாதை உண்டு எனக்கு. பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்கும் திரைப்படத் துறையிலேயே பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் லாபகரமாகப் படங்கள் எடுத்தவர் அவர். அவர் சொன்னது சினிமாவிற்கு மட்டுமல்ல. எல்லாத் தொழிலுக்கும் பொருந்தும்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 28.02.2017

03.காதலும் தொழிலும் எப்படி ஒன்றாகும்?

03.காதலும் தொழிலும் எப்படி ஒன்றாகும்?
தொழில் செய்ய என்னதான் தகுதி வேண்டும்? ஆசை வேண்டும். ஒரு தொழிலை உருவாக்கி, பின் ஸ்திரப்படுத்தி அதைத் தொடர்ந்து லாபகரமாக நடத்தும் ஆசை வேண்டும். நம்மில் பலருக்குத் தொழிலில் வரும் பணம் மீது ஆசை இருக்கிறது. ஆனால் அதைத் தொழிலாக நடத்தும் முனைப்பு இல்லை.
பிறர் சொல்லிக் காதல் வருமா?
பெட்டி கடை போட்டவரெல்லாம் மாடி வீடு கட்டிட்டார் என்று பொறாமைப்படாமல் மட்டும் போதாது. காலை 6 முதல் இரவு 10 வரை கடையில் உட்கார்ந்து பொருள் வாங்குவது முதல் விற்பது வரை செய்யும் அந்த முனைப்பு இருக்க வேண்டும். தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத் பாராமல், தொழிலே உலகம் என வாழும் அளவு முனைப்பு உள்ளதா!
தானாகத் தன்னை இயக்கிக் கொள்ளும் உந்துசக்தி தொழில் முனைவோருக்கு அத்தியாவசியம். தொழில் முனைவோர் என்றாலே சொந்தமாக ஆசைப்பட்டுத் தனியாகத் தொழில் செய்போர் என்று பொருள் கொள்ளலாம். பிறர் சொல்லிக் காதல் வருமா? அது போலத்தான் சொந்தத் தொழிலும்.
பலருக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் கண்ணில் படும். அற்புதமாக ஐடியாக்களை அள்ளிக் கொட்டுவார்கள். ஆனால் முதல் அடி எடுத்து வைக்காதவரை இவர்கள் எல்லாம் நாற்காலி ஆலோசகர்கள்தான். காலம் கடந்த பின்பு இவர்கள் சொல்வார்கள், “நிறைய ஐடியாக்கள் இருந்துச்சு. ஆனால் கை தூக்கி விட ஆளில்லை!”. தூக்கி விட ஆள் தேடுபவர்கள் சொந்தமாகத் தொழில் ஆரம்பிப்பது கடினம். ஆரம்பித்தாலும் அதைத் தக்க வைப்பது மிகக் கடினம்.
முனைப்பு வேண்டும்
நம் கல்வி அமைப்பு பணியாளர்களுக்கான மன நிலையை உருவாக்குவதிலும், ஒரு அமைப்பு சார்ந்து இயங்குவதை ஆதரிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறது. கம்பெனிக்கு ஆள் எடுக்கக் கொண்டு வந்ததுதானே மெக்காலே திட்டம்! இதனால்தான் சுயச் சிந்தனை, கேள்வி கேட்கும் சுதந்திரம், ஆய்வு மனப்பான்மையைத் தேட வேண்டியுள்ளது.
தொழில் நிர்வாகத்துக்குப் படிக்கும் எம்.பி.ஏ. மாணவர்களில் 5 சதவீதத்துக்கும் குறைவானோர் மட்டுமே தனியாகத் தொழில் செய்ய விரும்புவதாகச் சமீபத்திய நிர்வாகக் கல்வி ஆய்வு தெரிவிக்கிறது. இதனால்தான் தீவிரத் தொழில் முனைவு எண்ணம் கொண்டவர்கள் பாரம்பரியக் கல்வி முறையை விரைவில் துறந்துவிடுகின்றனர். படித்து விட்டு ஸ்திரமான வேலையில் உட்கார்ந்து சொன்ன வேலையைச் செய்யும் மனோபாவம் சொந்தத் தொழில் ஆரம்பிக்க உதவாது.
ரிஸ்கை சமாளி!
முதல் தேவை முனைப்பு என்றால் இரண்டாம் தேவை ரிஸ்க் எடுக்கும் மனோபாவம். “எனக்கு ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்று உங்களால் சொல்ல முடியுமா? ஏனென்றால், ரிஸ்க் என்பது பணயம் வைப்பது போல. ஒரு ஸ்பெகுலேஷன் தன்மை உண்டு. வந்தால் வரும். வராமலும் போகும். பாதுகாப்பின்மையை எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதுதான் risk taking-ன் அடி நாதம். முதலீடு போடுகிறோம். எவ்வளவு திரும்ப வரும் என்று தெரியாது. துணிந்து முதலீடு செய்ய முடியுமா? இதுதான் ரிஸ்க்.
“40 வயசு வரை சம்பாதிச்சிட்டு, ஈ.எம்.ஐ. இல்லாம இருந்து, வீட்டில் இன்னொரு வருமானம் இருந்து, குடும்பத்தை எதுவும் பாதிக்காதுன்னா நானும் தொழில் செய்வேன்” என்று நீங்கள் சொன்னால் உங்களுக்குப் பாதுகாப்பு உணர்வு மிக அதிகம். ரிஸ்க் எடுக்க மாட்டீர்கள் என்று பொருள். சொந்தத் தொழில் என்று நினைப்பவர்கள் இந்தப் பாதுகாப்பின்மையை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதில்தான் தொழில் பற்றிய முடிவு இருக்கும். தங்கள் பாதுகாப்பு, வசதி, சவுகரியம், கவுரவம் என்று எதையும் விடத் தயாராகாதவர்கள் சொந்தத் தொழில் செய்வது கடினம்.
எல்லாவற்றையும் இழக்கும் அபாயத்தில், அகலக் கால் வைத்து ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால், “அவசியம் இல்லை”தான். கணக்கிட முடியாத ரிஸ்க் அவசியமில்லை. ஆனால் calculated risk இல்லாமல் பிஸினஸ் இல்லை.
ஒரு பாட்டில் ஆவதல்ல!
தொழில் செய்ய மற்றொரு ஆதாரக் குணம் கடின உழைப்பு. ஆரம்பக் காலத்தில் மட்டுமல்ல. வெற்றி பெற்ற பின்னும் இந்த உழைப்பு அவசியம், தொழிலைத் தக்க வைக்க. உழைப்பின் வடிவமும் வீச்சும் மாறலாம். ஆனால் என்றும் உழைப்பு தேவை. நினைத்துப் பார்க்காத வேலையை, நினைத்துப் பார்க்காத சமயத்தில் தீவிரமாகச் செய்ய நேரிடலாம். அந்தத் தயார் நிலை அவசியம்.
முக்கியமாக ஈகோ பார்க்காமல் வேலை செய்வது, சமரசங்களுடன் வாழப் பழகுவது, எதிர்பாராத சூழலைச் சமாளிப்பது, என்றும் ஒரு மாணவனைப் போலக் கற்றுக் கொள்ளும் மன நிலையோடு தொடர்ந்து உழைப்பது என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆக, ஒரு பாட்டில் கோடீஸ்வரர் ஆக முடியாது.
இத்தனைக்குப் பிறகும் ‘சொந்தத் தொழில்’ என்று உறுதியுடன் நிற்பவர்களுக்கு நான் சொல்லும் முல்லா கதை இதோ: சூஃபியான முல்லா பேச்சைக் கேட்கப் பெரும் கூட்டம் வந்திருந்தது. அவர் வர ஒரு மணி நேரம் தாமதமாகச் சிலர் வெளியேறினர். வந்தவர் குடித்து விட்டு வந்ததால் வேறு சிலரும் புறப்பட்டனர். பேசத் தொடங்கியதும் தகாத சொற்களால் திட்டியதால் பெரும்பாலானோர் மனம் வெறுத்துக் கிளம்பினர். அதற்குப் பிறகும் வெகு சிலர் உட்கார்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்த முல்லா, “நீங்கள்தான் என் பேச்சைக் கேட்க வந்தவர்கள்” என்று சொல்லி அற்புதமான உரையை நிகழ்த்தினாராம்.
முல்லா உரை போலதான் சொந்தத் தொழிலும். எல்லாச் சோதனைகளையும் தாண்டி முனைப்புடன் உள்ளவர்களுக்குத் தேடி வந்தது கை கூடும்!
“எல்லாம் எனக்குப் பொருந்துகிறது. எல்லாவற்றுக்கும் நான் தயார். என்ன தொழில் என்று முடிவு எடுப்பதில்தான் சிக்கல் உள்ளது!” என்று கூறுகிறீர்களா?
உங்களுக்கு ஏற்றத் தொழில் எது என்று எப்படிக் கண்டு பிடிப்பது?
கண்டு பிடிப்போம். நாம் சேர்ந்து கண்டு பிடிப்போம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 21.02.2017