disalbe Right click

Friday, February 23, 2018

கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கிக்கு அபராதம்

தமிழ்நாட்டில் கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்.முத்தழகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2011 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்காக போளூர் தாலுகாவைச் சேர்ந்த கேளூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் கல்விக்கடன் கோரி நான் விண்ணப்பித்தேன். வங்கி நிர்வாகம்  எனக்கு  கல்விக்கடன் வழங்கவில்லை. ஆகவே கனம் நீதிபதி அவர்கள் எனக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்
தனி நீதிபதி அளித்த தீர்ப்பு
இதனை விசாரித்த தனிநீதிபதி அவர்கள், மாணவியின் கோரிக்கையை பரிசீலித்து, அவருக்குக் கல்விக்கடன் வழங்க வங்கி நிர்வாகத்துக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்
மேல்முறையீடு செய்த வங்கி
இந்த உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை (23.02.2018) விசாரணைக்கு வந்தது
வங்கியின் வாதம்
ஷை வங்கியின் சார்பாக ஆஜரான  வழக்கறிஞர், கடன் கோரிய மானவியின் படிப்பு கடந்த 2015ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டதால், வழக்கு காலாவதி ஆகிவிட்டது. ஆகவே இந்த வழக்கில் தனி நீதிபதி அவர்கள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
முடிவில் நீதிபதிகள், எந்தவித நிபந்தனையும் இன்றி, உத்தரவாதமும் இன்றி கோடீஸ்வர தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் வாரிக் கொடுக்கின்ற வங்கிகள், ஏழை மாணவர்கள் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்தால் அவர்களை அலைகழித்து வருகின்றனர். அது போல  ஏழைகளுக்கு கல்விக்கடன் வழங்காமல் மறுக்கப்படுவதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியான போக்கையும், ஏழைகளுக்கு வேறு மாதிரியான போக்கையும் வங்கி நிர்வாகம் கடைபிடிப்பது கண்டனத்துக்குறியது. வழக்கைத் தொடர்ந்த மாணவி ஆர்.முத்தழகி-க்கு படிப்பை முடிக்கும் வரை கடன் வழங்காமல் இழுத்தடித்து இந்த வழக்கை வங்கி செல்லாததாக ஆக்கிவிட்டது
ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ. 48 ஆயிரம் கோடி வரை வாங்கிய கடனை முறையாக வங்கியில் திருப்பிச் செலுத்தாத நிலையில், கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என இதுவரை எந்த புகாரும் நீதிமன்றத்திற்கு வந்தது இல்லை
இதுபோல உரிய நேரத்தில் கல்விக்கடன் மாணவ, மாணவியர்களுக்கு மறுக்கப்படுவதால், நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய மிகச்சிறந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கிடைக்காமல் போய் விடுகின்றனர். இதனால் அவர்களுடைய சேவை நாட்டுக்கு கிடைக்காமல் போகிறது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
 வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
ஆகவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கி நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது
இந்த தொகையை மனுதாரருக்கு இரண்டு வாரத்துக்குள் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 24.02.2018. 

Personnel

5,80,000 க்கும் அதிகமான பார்வையாளர்கள் 1400 க்கும் அதிகமான பயனுள்ள பதிவுகள் மற்றும் பல பயனுள்ள இணையதள இணைப்புகள் கொண்ட எனது இணையதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 23.02.2018

Thursday, February 22, 2018

எதிரிடை அனுபவப் பாத்தியம்


எதிரிடை அனுபவப் பாத்தியம்
அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி பல ஆண்டுகளாக  சிலர் குடியிருந்து வருவார்கள். திடீரென்று, ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற நடவடிக்கையினை அரசு மேற்கொள்ளும்போது அவர்களது வீடு அகற்றப்படும். அவர்கள் இதுபோன்ற வேறு இடங்களைத் தேடிச் சென்று வீடு கட்டிக் கொள்வார்கள். 
எதிரிடை அனுபவப் பாத்தியம்
இதுபோல அரசு நிலங்களை அல்லது தனியார் நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்து வீடு கட்டி வாழ்ந்து வருபவர்கள் அந்த நிலத்தினை தங்களுக்கு பாத்தியம் ஆக்கிக் கொள்ள முடியுமா? என்றால் முடியும்! இது போன்ற அனுபவப் பாத்தியத்திற்கு சட்டத்தில் எதிரிடை அனுபவப் பாத்தியம் என்று பெயர். 
சட்டம் இதைப் பற்றி என்ன சொல்கிறது?
ஒருவர் தனக்கு பாத்தியமில்லாத பிறருடைய சொத்தை, அந்த சொத்தின் உரிமையாளருக்குத் தெரிந்தே, ஊரறிய, எந்தவிதமான ஆட்சேபனை மற்றும் தடை இன்றி பல வருடங்களாக இடைவெளி ஏதுமின்றி அனுபவித்து வந்தார் என்றால், அவர் அந்த நிலத்திற்கு பாத்தியம் கோரலாம். இதைத்தான்  சட்டமானது எதிரிடை அனுபவப் பாத்தியம் என்று சொல்கிறது.
தனியாருக்கு சொந்தமான சொத்து என்றால்....?
மேற்கண்டவாறு ஒருவர் அனுபவித்து வருகின்ற சொத்து தனியாருக்குச் சொந்தமானது என்றால், அவர் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் அதனை அனுபவித்து வந்திருக்க வேண்டும்.  குத்தகையின் பெயரிலோ, அனுமதியின் பெயரிலோ, வாடகை கொடுத்து வந்தோ அதனை அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடாது. இதனை நிரூபிக்க ஆவணங்கள் மிகவும் அவசியம். இது போன்ற பாத்தியத்தை நீதிமன்றம் மூலமாக மட்டுமே பெற முடியும். 
அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்து என்றால்....?
மேற்கண்டவாறு ஒருவர் அனுபவித்து வருகின்ற சொத்து அரசாங்கத்துக்குச் சொந்தமானது என்றால், அவர் தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் அதனை அனுபவித்து வந்திருக்க வேண்டும்.

********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.02.2018 

Wednesday, February 21, 2018

காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

வழக்கு விசாரணை தினத்தன்று வேறு பணி கூடாது! 
உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராக வேண்டிய போலீஸ் அதிகாரிகளுக்கு அன்றைய தேதிகளில் வேறு பணிகளுக்கு அனுப்பக் கூடாது! என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமர்வு நீதிமன்றத்தில்.....
சென்னை உயர் நீதிமன்றத்தில் 20.02.2018 அன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு ஆட்கொணர்வு மனுக்களை விசாரித்தது.  மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாயமான வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி அன்றைய தினம்  ஆஜராகவில்லை. அவர் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பணிக்குச் சென்றிருப்பதாக அரசு தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். இதே போல வேறொரு ஆட்கொணர்வு வழக்கிலும் ஆஜராக வேண்டிய விசாரணை அதிகாரி ஆஜராகவில்லை. அந்த வழக்கிலும் பாதுகாப்பு பணிக்குச் சென்று விட்டதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது
கோபமடைந்த நீதிபதிகள்
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், 'உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் ஆட்கொணர்வு மனுக்கள் உள்ளிட்ட வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராக வேண்டிய போலீஸ் அதிகாரிகளை விசாரணை நாள்களில் எக்காரணம் கொண்டும் வேறு பணிகளுக்கு அனுப்பக்கூடாது. விசாரணை தேதிகளில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்
எதிர்காலத்திலும் இந்த உத்தரவு பொருந்தும்.
இந்த உத்தரவு இப்போதுள்ள காவல்துறை இயக்குநருக்கு மட்டுமல்ல, வரும் காலங்களில் பணிபுரிய இருக்கின்ற காவல்துறை இயக்குநர்களுக்கும் இந்த உத்தரவு  பொருந்தும். இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த உத்தரவை டிஜிபி அறிவுறுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 22.02.2018 

காசோலை வழக்கு - காலவரையறை

ஒரு காசோலையினை அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் இருந்து 90 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும் என்றும், அப்படி பயன்படுத்தவில்லை என்றால், அந்தக் காசோலை செல்லாது என்று (Banking Regulations Act), சட்டம் சொல்கிறது. ஆனால், 90 நாட்களுக்குப் பின் பயன்படுத்தப்பட்ட காசோலை பற்றிய வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பு சற்று மாறுபடுகிறது. அது என்ன என்று  பார்க்கலாம் வாருங்கள்.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.02.2018 

கலிமுல்லா என்பவர் ரூ 4 லட்சத்தை இராஜசேகர்மூர்த்தி என்பவரிடம் கடனாக பெற்றிருந்தார். அந்த கடனை திருப்பி செலுத்தும் விதமாக ஒரு காசோலையை 13.5.2015 ஆம் தேதியிட்டு இராஜசேகர்மூர்த்திக்கு கொடுத்திருந்தார்
அந்த காசோலையை இராஜசேகர்மூர்த்தி பணம் பெறுவதற்காக அவருடைய வங்கி கணக்கில் 13.8.2015 ஆம் தேதி தாக்கல் செய்தார். ஆனால் கலிமுல்லாவின் வங்கி கணக்கு முடிக்கப்பட்டு விட்டதாக திருப்பப்பட்டு விட்டது
அதனால், காசோலைக்குறிய தொகையை கேட்டு இராஜசேகர்மூர்த்தி கலிமுல்லாவுக்கு அறிவிப்பு அனுப்பினார். அதன்பிறகும் கலிமுல்லா பணம் தராததால் இராஜசேகர்மூர்த்தி ஒரு காசோலை மோசடி வழக்கை கலிமுல்லா மீது தாக்கல் செய்தார்.
வழக்கில் ஆஜரான கலிமுல்லா காசோலையை நான் 13.5.2015 ஆம் தேதியிட்டு கொடுத்துள்ளேன். ஆனால் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (Banking Regulations Act), ஒழுங்குமுறை எண். 35A ல் கூறப்பட்டுள்ளதற்கு முரணான வகையில் 90 நாட்களுக்கு பின்னர் 13.8.2015 ஆம் தேதி அந்த காசோலை பணம் பெறுவதற்காக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி ஒரு மெமோ தாக்கல் செய்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட விசாரணை நீதிமன்றம், " எக்கான் ஆன்ரி லிட் Vs ரோம் இன்டஸ்ட்ரீஸ் லிட் (2013-3-DCR-417) (AIR-2013-SC-3283)" என்ற வழக்கில்  உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டி, வழக்கு காசோலையானது மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138ல் கூறப்பட்டுள்ள காலவரையறைக்குள் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறி கலிமுல்லா தாக்கல் செய்த மெமோவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவை எதிர்த்து கலிமுல்லா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. ஜான் மைக்கேல் குன்ஹா விசாரித்தார்.
காசோலை கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் பணம் பெறுவதற்காக வங்கியில் செலுத்த வேண்டும் என்று மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138(a) ல் கூறப்பட்டுள்ளது. ஆனால் மேலே சொல்லப்பட்ட தீர்ப்பில் உச்சநீதிமன்றம், புகார் தாக்கல் செய்வதற்கான வழக்கு மூலம் ஏற்பட்ட நாளினை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் 30 நாட்கள் காலவரையறையை கணக்கிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
எனவே ஒரு காசோலை குறித்த காலவரையறையை கணக்கிடும் போது வழக்கு மூலம் ஏற்பட்ட நாளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் காலவரையறையை கணக்கிட வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
Criminal Petition No - 1979/2016 dt- 17.3.2017
கலிமுல்லா Vs இராஜசேகர்மூர்த்தி 2017-ACD-468

நன்றி : முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான திரு Dhanesh Balamurugan 

பட்டா - உட்பிரிவு - என்ன செய்ய வேண்டும்?

ஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு  இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது பல வாரிசுகளுக்குச் சொந்தமாகும். அவர்கள் அந்த நிலத்தை பங்கு போடும்போது தங்களுடைய பங்கை, அவர்களுடைய  பெயருக்கு பட்டா மாற்றினால்தான் நல்லது. இல்லையென்றால், அவர்களுக்குப் பின் வருகின்ற வாரிசுதாரர்களுக்கு அது சிக்கலையும், வீண் அலைச்சலையும் ஏற்படுத்திவிடும். 
என்ன செய்ய வேண்டும்?
ஒரே பட்டாவாக உள்ள நிலத்தை அளந்து சப்டிவிஷன் செய்ய முதலில் கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் நாம் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சர்வேயரை அழைத்து வந்து உடன் இருந்து அந்த நிலத்தை முதலில் அளப்பார். நமக்குரிய பங்கையும் தனியாக அளந்து கல் ஊன்றுவார்கள். அதனையே நாம் நான்குமாலாக வைத்துக் கொள்ள வேண்டும்.  அதன்பிறகு, வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நமக்குரிய நிலத்திற்கு பட்டா எண் தனியாக வழங்குவார்கள்.  அதில் பழைய பட்டா எண்ணைக் குறிப்பிட்டு உட்பிரிவு எண்ணும் குறிக்கப்பட்டு இருக்கும்.
வட்டாட்சியர் அலுவலக நடவடிக்கை
இது போன்று உட்பிரிவு செய்து ஒருவருக்கு பட்டா வழங்கும்போது, அந்த கூட்டுப்பட்டாவில் உள்ள மற்ற பங்குதாரர்களுக்கும், சர்வேயர் அவர்கள் தலையாரி மூலம் கடிதம் கொடுத்தனுப்பி அழைப்பு அனுப்புவார்கள். கடிதத்தை மற்ற பங்குதாரர்கள் பெற்றுக் கொண்டதற்கான கையெழுத்தையும் ஒரு ஆவணத்தில் பெற்றுக் கொள்வார்கள். மற்ற பங்குதாரர்களுக்கு இதில் ஆட்சேபனை இருந்தால், அதனை நிலத்தை  அளந்து சப்டிவிஷன் செய்வதற்கு முன் எழுத்து மூலமாக சர்வேயர்  அவர்களிடம் நாம் தெரிவிக்க வேண்டும்.  அவர் அதற்குரிய நடவடிக்கை எடுப்பார்.  அதன்பிறகே நிலத்தை அளந்து சப்டிவிஷன் செய்வார். 
தன்னிச்சையாக சப்டிவிஷன் செய்தால்....?
மேற்கண்டவாறு மற்ற பங்குதாரர்களுக்கு அழைப்பு அனுப்பாமல், சர்வேயர் தன்னிச்சையாக சப்டிவிஷன் செய்தால் அது செல்லாது. அதற்கு ஆதாரமாக கீழே வருவாய் கோட்டாசியர் அவர்களின் உத்தரவு நகல் இணைக்கப்பட்டுள்ளது.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 21.02.2018 
குறிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ள ஆவண உதவி “ ஆவணக் காப்பகர்”  A Govindaraj Tirupur 


Image may contain: text
Image may contain: text


இந்த ஆவணத்தில் நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் 2002 என்று வருடம் தவறாக அச்சிடப்பட்டுளது. அதனை 2007 என்று திருத்தி வாசித்துக் கொள்ளவும். நன்றி!