disalbe Right click

Friday, June 10, 2016

இடதுகை பழக்க குழந்தைகள்


இடதுகை பழக்க குழந்தைகள் - என்ன செய்ய வேண்டும்?

இடது கைகாரர்களுக்கு இவ்வளவு பிளஸ்ஸா…?
இந்தியாவின் நடசத்திர கிரிக்கெட் வீரர்களான கங்குலி, யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை உற்று கவனித்திருப்பவர்கள் ஒரு விஷயத்தைப் பார்த்திருக்கக் கூடும். இவர்கள் இருவருமே இடதுகை ஆட்டக்காரர்கள் என்பதுதான் இவர்களுக்கான ஸ்பெஷாலிட்டி. இவர்களைப் போலவே இடது கையை சாதனை கையாக மாற்றியிருக்கும் சாதனையாளர்கள் பலர். இத்தனை சாதனையாளர்கள் இருந்தும் நம் சமூகத்தின் பார்வையில் இடது கைப்பழக்கம் என்பது அருவருப்பாகவே பார்க்கப்படுகிறது.


” என் பையனுக்கு சாப்பிடுறது தொடங்கி எழுதறது வரைக்கும் எல்லாத்துக்குமே இடதுகைப் பழக்கம்தான். இவ்வளவு ஏன் வீட்டுக்கு வரவங்களுக்கு டாடா சொல்றதுக்கும் அதே கையைதான் தூக்கறான். பார்க்கறவங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியல. சாப்பிடுறதையாவது மாத்துனு என் அப்பா, அம்மா தொடர்ந்து சொல்லிட்டே இருக்காங்க” என்றவர்களின் குழப்பங்களுக்கு பதில் அளிக்கிறார் கரூரைச் சேர்ந்த மனநல மருத்துவர் செந்தில் வேலன்.

”இடது கைப் பழக்கம் தவறு என நினைப்பவர்களிடம் ஒரு கேள்வி கேட்க நினைக்கிறேன். இடது கால் இல்லாமல் வெறும் வலது காலை வைத்து நடக்க முடியுமா? உங்கள் உடலில் வலது பாகம் மட்டும் இருந்தால் போதுமா? அப்படியிருக்க இடது கைப் பழக்கத்தை மட்டும் ஏன் அருவருப்பாக பார்க்கிறீர்கள்?
Image result for இடது கைகாரர்களுக்கு இவ்வளவு பிளஸ்ஸா…?

ஏன் இந்த இடதுகைப் பழக்கம்?
மூளையின் இடது, வலது பாகங்கள்தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடது பக்க மூளை உடலின் வலது பாகத்தையும், வலது பக்க மூளை உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்தும். இதன்படி பார்த்தால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு இடது பக்க மூளை அதிக செயல்பாட்டில் இருப்பதால்தான் வலது கை பழக்கம் ஏற்படுகிறது. ஆனால் மிகச் சிலருக்கு இடது பக்க மூளையைக் காட்டிலும் வலதுப்பக்க மூளையின் செயல்பாடு சற்று அதிகமாக இருப்பதன் விளைவுதான் இடது கை பழக்கம். அதன் காரணமாக அதன் காரணமாக இடது கை பழக்கம் ஏற்படுகிறது.

இடது கை பழக்கமுள்ள குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 


பெற்றோர்களுக்கு..
* சிறு வயதில் பேச்சு வருவதில் சற்று தாமதம் ஆகலாம். அதற்காக பயம் வேண்டாம். பேச்சிற்கான கட்டுப்பாடு மையம் இருக்கும் மூளையின் இடது அரைக்கோளத்தின் செயல்பாடு, இவர்களில் சற்று குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.
Image result for இடது கைகாரர்களுக்கு இவ்வளவு பிளஸ்ஸா…?

* சாப்பிடுவது, எழுதுவது, கைகுலுக்குவது என எந்த விஷயத்தையும் இடதிலிருந்து வலது கை பழக்கத்திற்கு மாற்ற வேண்டாம். நீங்கள் மாற்ற முயற்சித்தாலும் அவர்கள் இயல்பாக பந்தை உதைக்க கூட இடது காலையும், பந்தை எடுக்க இடது கையையும்தான் உபயோகிப்பார்கள்.

* இடது கையால் சாப்பாட்டை எடுத்து சாப்பிடுகிறார்களா..? கவலையை விடுங்கள். வளார்ந்ததும் அவர்களாக சாப்பிடுவதை வலது கைக்கு மாற்றி கொள்வார்கள். அதற்காக மற்றவர்கள் முன் மட்டம் தட்டுவது, அருவருப்பாக பார்ப்பது எல்லாம் வேண்டவே வேண்டாம்.

ஆசிரியர்களுக்கு
* இடது பழக்கம் உள்ள பிள்ளைகள் மற்ற பிள்ளைகளுடன் உட்கார்ந்து எழுதுவதில் இடிப்பது போன்ற சிரமம் ஏற்படும். எனவே அவர்களை பெஞ்சின் கார்னரில் அமர வைத்தால் எழுந்து போவதற்கும், எழுதுவதற்கும் எளிதாக இருக்கும்.

* வரைவதில் ஆரம்பத்தில் சிக்கல் ஏற்படும். எனவே சிறு வட்டம் வரைந்து, அதில் ஓவியங்களை வரைய பழக்கப்படுத்துங்கள்.

* பள்ளிகளில் ”லெஃப்ட்” என பட்டப்பெயர் வைத்து மன ரீதியாக கிண்டல் அடிப்பதை நிறுத்துங்கள். சக மாணவர்களுக்கு இதுவும் நார்மலான விஷயமே என்பதை புரிய வையுங்கள்.
இடது கை பழக்கத்தால் என்ன பிளஸ்?
வலது பக்க அரைக்கோளத்தின் அதிக செயல்பாடு என்னவெல்லாம் செய்கிறது என்று பாருங்களேன்..

* நீண்ட நாட்களுக்கு முன்னால் பார்த்த எந்த ஓர் இடத்தையும், நபரையும்  சட்டென நினைவுக்குக் கொண்டு வரும் சக்தி, வலது கை பழக்கம் உள்ளவர்களை விட இவர்களுக்கு ஜாஸ்தி.

* இசை, ஓவியம் போன்ற கலைகளில் அதீத ஆர்வத்துடன் இருப்பார்கள்.

* கண்ணால் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பொருளை எங்கே வைத்தால் சரியாக இருக்கும், இரண்டு பொருட்களுக்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு என எளிதாக சொல்லி விடுவார்கள். சாலையில் செல்லும்போது கூட இரண்டு வண்டிகளுக்கு இடைப்பட்ட இடைவெளி எவ்வளவு, அதில் வண்டியை நுழைக்க முடியுமா என்பதை துல்லியமாக கணக்கிடும் பார்வை திறனும் அதிகம் உண்டு.

* வரைபடங்கள் தொடர்பான அறிவும் நிறையவே இருக்கும்.

* நம்மையெல்லாம் ஒரு மனித முகத்தை வரைய சொன்னால் தலை, கண், மூக்கு என வரைவோம். ஆனால் இடது கை பழக்கமுள்ளவர்கள் ஒரு கிறுக்கலை வரைந்து அதையே முகமாக விவரிக்கும் கற்பனை திறனுக்கு சொந்தக்காரர்கள்.

* அதிகப்படியான கற்பனை சக்தி இருக்கும்.


குழந்தைகள் பயன்படுத்தும் கை எதுவாக இருந்தால் என்ன, அவர்களின் மீது நம்பிக்கையை வைத்து திறமைகளை மட்டும் ஊக்குவியுங்கள். உங்கள் குழந்தைகளும் ஜொலிப்பார்கள்” என்று சொல்லி முடித்தார் மருத்துவர் செந்தில்வேலன்.

நன்றி : விகடன் செய்திகள் - 06.06.2016

Thursday, June 9, 2016

ஃபைப்ராய்ட்ஸ் தடுக்க, கர்ப்பப்பை காக்க


ஃபைப்ராய்ட்ஸ் தடுக்க, கர்ப்பப்பை காக்க 
என்ன செய்ய வேண்டும்?
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவரும் நிஷாவுக்கு, மாதவிலக்கு நேரத்தில் அதிகப்படியான உதிரப்போக்கு, தாங்க முடியாத வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படவே மகப்பேறு மருத்துவரை அணுகினார். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்தபோது, நிஷாவின் கர்ப்பப்பையில் கிரிக்கெட் பந்து அளவுக்குக் கட்டி. 

ரிப்போர்ட்டைக் கையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்வதற்குள், 

‘இது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமோ... 

கர்ப்பப்பையை அகற்றிவிடுவார்களோ... 

நீண்ட நாள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டுமோ... 

அதிக செலவாகுமோ... 

வேலைக்கே போக முடியாத நிலை வருமோ, 

குழந்தைகளைக் கவனிக்க முடியாமல் போய்விடுமோ’ 

என்று நிஷாவின் மனதுக்குள் மிகப்பெரிய பூகம்பமே வெடித்துவிட்டது. ‘இதை எல்லாம் மிகச் சாதாரணமாகக் குணப்படுத்திவிட முடியும் என்பதால், பயப்பட ஒன்றும் இல்லை’ என்று ஒரு வரியில் சொல்லி அனுப்பிவிட்டார் மருத்துவர்.

நிஷாவுக்கு மட்டும் அல்ல... நிஷாவைப்போல ஏராளமான பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னை ஃபைப்ராய்டு கட்டி. உலக அளவில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும். பலருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், எளிய சிகிச்சை முறைகள் மூலமாகவே இதைச் சரிப்படுத்தும் அளவுக்கு மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. 

ஃபைப்ராய்டு என்றால் என்ன?
ஃபைப்ராய்டு (Fibroid) என்பது, கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய தசைக்கட்டி. இது புற்றுநோய்க் கட்டி இல்லை. பொதுவாக, இது குழந்தைப்பேறுக்குத் தயாராக உள்ள காலகட்டத்தில் ஏற்படும். இந்தக் கட்டி கர்ப்பப்பையின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். இந்தக் கட்டிகளை அது தோன்றும் இடத்தைப் பொருத்து மூன்று விதமாகப் பிரிக்க முடியும். 

சப்செரோசல் ஃபைப்ராய்ட்ஸ் (Subserosal fibroids): கர்ப்பப்பையின் வெளிப்புறச் சுவரில் வரக்கூடிய கட்டி.  55 சதவிகிதக் கட்டிகள் கர்ப்பப்பையின் வெளிப்பகுதியில்தான் வருகின்றன. 

இன்ட்ராமியூரல் ஃபைப்ராய்ட்ஸ் (Intramural fibroids): இது, கர்ப்பப்பையின் வெளி மற்றும் உள் சுவருக்கு இடைப்பட்ட தசைப்பகுதியில் ஏற்படக்கூடியது. 40 சதவிகிதக் கர்ப்பப்பைக் கட்டிகள் இந்தப் பகுதியில்தான் ஏற்படுகின்றன.

சப்மியுகோசல் ஃபைப்ராய்ட்ஸ் (Submucosal fibroids): இது, கர்ப்பப்பையின் உள் சுவர் பகுதி. இந்தப் பகுதியில் கட்டிகள் வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. 5 சதவிகித கர்ப்பப்பை கட்டிகள் இங்கு ஏற்படுகின்றன. கர்ப்பப்பை உள் சுவரில் கட்டி ஏற்பட்டால், அதிகப்படியான உதிரப்போக்கு இருக்கும். கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை ஏற்படலாம்.

எதனால் வருகிறது?
எதனால் கர்ப்பப்பை கட்டி ஏற்படுகிறது என்பதற்குத் தெளிவான முடிவுகள் இல்லை. இருப்பினும், மரபணு, ஹார்மோன், சுற்றுப்புறச் சூழல் தாக்கம் காரணமாக கர்ப்பப்பை கட்டிகள் ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  பரம்பரையால் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவே, இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

சாதாரணமாக 20-40 வயது வரை உள்ள பெண்களுக்குத்தான் இந்தக் கட்டிகள் அதிகமாக வருகின்றன. மெனோபாஸ் அடைந்துவிட்டால், கர்ப்பப்பை கட்டி வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு.

அறிகுறிகள் என்னென்ன?
மாதவிலக்கு சமயத்தில் அதிக வலி, அதிக ரத்தப்போக்கு இருக்கும். ரத்தப்போக்கு மூன்று நாட்களுக்கு பதில் ஏழு நாட்கள் வரைகூட இருக்கலாம்.

எந்தத் தொந்தரவும் இல்லாமலே குழந்தைப்பேறு தடைப்படலாம்.

பெரிய கட்டியாக இருப்பின் பக்கத்து உறுப்பில் அழுத்தம் ஏற்பட்டு, அதனால் சில தொந்தரவுகள் ஏற்படலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு, மலச்சிக்கல் ஏற்படும். 

கீழ் முதுகு, கால் வலி ஏற்படலாம்.

மூன்று வகைக் கட்டிகளில், எந்த வகைக் கட்டி  எனக் கண்டறிந்த பின், கர்ப்பப்பையில் எந்த இடத்தில், எவ்வளவு பெரிதாக இருக்கிறது எனக் கண்டறிவதன் மூலம் இந்தக் கட்டிகள் எந்த அளவுக்குத் தொந்தரவு தரும் எனத் தீர்மானிக்க முடியும். 

யாருக்குக் கட்டிகள் வரலாம்?
குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு ஃபைப்ராய்டு கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுபோல, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொண்ட பெண்களுக்குக் கட்டிகள் வரலாம்.  இவர்களுக்கு, ‘ஹார்மோன் மாறுதல்’ அதிகமாக இருக்கும் என்பதால், கட்டிகள் உருவாக வாய்ப்புகள் அதிகம்.

குழந்தைப்பேற்றைப் பாதிக்கும் கட்டிகள் எவை?
குழந்தைப்பேறு இல்லை என்று சிகிச்சைக்கு வரும் பெண்களில் 5-10 சதவிகிதம் பேருக்கு குழந்தையின்மைக்குக் காரணமாக இருப்பது இந்தக் கர்ப்பப்பை கட்டிகள்தான். ஸ்கேன் பரிசோதனை செய்யும்போதுதான் இது வெளிப்படும்.

பொதுவாக, குழந்தைபேற்றைப் பாதிப்பது உள் சுவரில் ஏற்படும் சப்மியுகோசல் வகை கட்டிகள்தான். மேலும், இன்ட்ராமியூரல் கட்டிகள் பெரிதாக இருந்தாலும் கர்ப்பம் தரிப்பதில் பாதிப்பு ஏற்படும். மற்ற கட்டிகள் குழந்தைப்பேற்றைப் பாதிக்காது. 

சிகிச்சைகள் என்னென்ன?
மருந்து, மாத்திரைகளால் இந்தக் கட்டிகளை கரைக்க முடியாது, தானாகவும் இந்தக் கட்டி கரையாது. சப்செரோசல் கட்டிகள், குழந்தையின்மையைப் பாதிக்காது. அதற்கு சிகிச்சையும் தேவை இல்லை. இந்தக் கட்டிகளால் ஏதாவது தொந்தரவுகள் வந்தால் மட்டுமே இதனைக் கவனிக்க வேண்டும். மற்றபடி இந்தக் கட்டிகளுக்குக் கவலை வேண்டாம்.

இன்ட்ராமியூரல் கட்டிகளை லேப்ராஸ்கோப்பிக் மயோமக்டெமி (Myomectomy) மூலமாக எளிதில் அகற்ற முடியும். லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவைசிகிச்சையில் சிறிய துளைகள் இடப்படுவதால், பெரிய காயம், தழும்பு தவிர்க்கப்படும். குணமடைந்து வீடு திரும்பும் காலமும் விரைவாகும். 

சப்மியுகோசல் கட்டிகளை அகற்ற, ஹிஸ்ட்ரோஸ்கோபிக் (Hysteroscopic) மயோமக்டெமி என்ற சிகிச்சை செய்யப்படும். ஒரு நாளிலேயே இந்த சிகிச்சையைச் செய்து கொள்ள முடியும். வலியே இருக்காது. சிகிச்சையால் பாதிப்புகள் எதுவும் கிடையாது. இந்த சிகிச்சைகளுக்குப் பிறகு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.

தடுக்கும் முறைகள் உண்டா?
இந்தக் கட்டிகள் வராமல் இருக்க தடுப்புமுறைகள் எதுவும் கிடையாது. ஆனால், ஆரோக்கிமான உணவுகள் உண்டு, போதுமான உடலுழைப்பு இருந்தால், பொதுவாகவே கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். கீரைகள், பழங்கள், நட்ஸ், லோ கலோரி உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம். இதனுடன், உடற்பயிற்சியும் அவசியம். எண்ணெய் உணவுகள், துரித உணவுகள், அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

--------------------------------------------------------------------ப்ரீத்தி

அறுவைசிகிச்சை இன்றி கட்டியைப் பொசுக்கலாம்
எம்.ஆர்.ஐ துணையோடு செய்யும் சிகிச்சை ஃபோக்கஸ்டு அல்ட்ரா சவுண்ட். இந்த சிகிச்சையில், எம்.ஆர்.ஐ கருவியினுள் நோயாளி அனுப்பப்படுவார். அப்போது, கட்டி எங்கே இருக்கிறது, எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை நிபுணர்கள் வெளியே இருந்து துல்லியமாகப் பார்த்து சிகிச்சையைத் திட்டமிடுவார்கள்.

 பின்னர், ஃபோக்கஸ்டு அல்ட்ரா சவுண்ட் ஒலி அலை செலுத்தப்படும். பொதுவாக, அல்ட்ரா சவுண்ட் ஒலி அலையானது ஒரு மையத்தில் இருந்து வெளிபட்டு, விரிவடைந்து செல்லும். அது செல்லும் இடத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறியலாம். ஆனால், இந்த அல்ட்ராசவுண்ட் சிகிச்சையில், மிக அகன்ற பகுதியில் இருந்து ஒலிஅலை செலுத்தப்படும். அதன் குவி மையம் கர்ப்பப்பை கட்டி மீது இருக்கும்படி வல்லுநர்கள் திட்டமிடுவார்கள். 

இந்தக் குவிமையத்தில் சேரும் ஒலி அலை கட்டி திசுவைப் பொசுக்கும். இதனால், மற்ற உறுப்புக்களுக்கு, ஆரோக்கியமான திசுக்களுக்குப் பாதிப்பு இருக்காது. புறநோயாளியாக வந்தே சிகிச்சை பெற்று வீடு திரும்பலாம். ஆனால், இது 100 சதவிகிதம் துல்லியமான தீர்வைக் கொடுக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. சில ஃபைப்ராய்டு கட்டிகள் இந்த சிகிச்சையால் சரியாகலாம். அதனால், எந்த மாதிரியான கட்டிக்கு, என்ன மாதிரியான சிகிச்சை என்பதை டாக்டரிடம் கலந்து ஆலோசித்து முடிவு பெற வேண்டும்.

நன்றி : டாக்டர் விகடன் - 16.06.2016

Tuesday, June 7, 2016

தமிழில் பிரதமர் அலுவலக இனையதள சேவை


தமிழில் பிரதமர் அலுவலக இனையதள சேவை 
என்ன செய்ய வேண்டும்? 

தமிழ், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்கம், மராத்தி ஆகிய 6 பிராந்திய மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதள சேவை மே 29 அன்று தொடங்கப்பட்டது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புதிய சேவைகளை தொடங்கிவைத்தார்.
இதற்கு முன்பு 
என்ற பிரதமர் அலுவலக இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் இடம்பெற்றன. இனி, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் பிரதமர் அலுவலகச் செய்திகளை அறிந்து கொள்ள முடியும். பிரதமர் அலுவலக இணையதளச் சேவையை முக்கிமான பிராந்திய மொழிகளிலும் வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தகுந்தது.
தி இந்து தமிழ் நாளிதழ் - 08.06.2016

வங்கி தீர்ப்பாயத்தில் புகார் செய்ய


வங்கி தீர்ப்பாயத்தில் புகார் செய்ய என்ன செய்ய வேண்டும்?
சென்னை: வங்கி தீர்ப்பாயம்(Ombudsman - ஓம்பட்ஸ்மேன்) என்பது வங்கி சேவைகள் குறித்து வாடிக்கையாளர்கள் செய்யும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் சேவை. 

இந்த வங்கி தீர்ப்பாயம் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இது திட்டம் ஒரு சட்ட ரீதியிலான அமைப்பாகும். 

இந்த அமைப்பு வங்கி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துகிறது. வங்கி வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்களை ஏற்று அவற்றை சரி செய்கிறது. மத்திய ரிசர்வ் வங்கியால் நியமனம் செய்யப்பட்ட மூத்த அதிகாரிகள் இந்த அமைப்பில் இருக்கின்றனர். இவர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை ஏற்று அவர்களின் புகார்களை சரி செய்ய ஆவன செய்கின்றனர். 

இந்த அமைப்பு அனைத்து வர்த்தக வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகிய அனைத்து வகை வங்கிகளையும் கட்டுப்படுத்துகிறது. 

தீர்ப்பாயம் ஏற்கும் புகார்கள் எப்படிப்பட்ட புகார்களை வங்கி வாடிக்கையாளர்கள் இந்த தீர்ப்பாயத்தில் தெரிவிக்கலாம் என்பதைப் பார்ப்போம் 

1. வங்கிகள், வங்கி வாடிக்கையாளர்களுக்கு செக்குகள், ட்ராப்ட்ஸ் மற்றும் பில்கள் போன்றவற்றிற்கான பணத்தை செலுத்தாத போது அல்லது பணத்தைச் செலுத்த கால தாமதம் செய்யும் போது இந்த அமைப்பில் புகார் தெரிவிக்கலாம். 

2. வாடிக்கையாளர்கள் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வழங்கும் போது, அதை சரியான காரணங்கள் இல்லாமல் வங்கிகள் மறுக்கும் போது அல்லது அதற்காக கமிஷன் வாங்கும் போது 

3. வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தை எடுக்க விடாமல் செய்வது அல்லது தாமதமாக்குவது

 4. ட்ராப்டுகள், பே ஆர்டர்கள் அல்லது வங்கி செக்குகளை அனுப்பாத போது அல்லது அனுப்ப கால தாமதம் செய்யும்போது

 5. வேலை நேரத்தில் வங்கி வாடிக்கையாளரின் தேவைகளை கவனிக்காமல் இருக்கும்போது 

6. வங்கியால் அல்லது வங்கி முகவர்களால் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட வசதிகளை வழங்காதபோது அல்லது அதை வழங்க கால தாமதம் செய்யும்போது 

7. வைப்பு நிதிகளை சரியான நேரத்தில் திரும்ப செலுத்தாத போது அல்லது ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களை கடைபிடிக்காதபோது 

8. இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு வங்கிகளிடமிருந்து முறையாக சேவைகள் கிடைக்காவிட்டால் அவர்களும் இந்த அமைப்பில் புகார் தெரிவிக்கலாம். 

9. சரியான காரணம் இல்லாமல் டெப்பாசிட் அக்கவுண்டுகளை தொடங்க வங்கிகள் மறுக்கும்போது 

10. முன்னறிவிப்பின்றி வாடிக்கையாளரிடமிருந்து கட்டணங்கள் வசூலிக்கும்போது 

11. ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு ஆகியவற்றைக் கையாள்வதில் ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களை வங்கிகள் அலட்சியப்படுத்தும்போது 

12. ஓய்வூதியத்தை உரிய வாடிக்கையாளர்களிடம் வழங்காதபோது அல்லது அதை வழங்க கால தாமதம் செய்யும்போது 

13. வரி செலுத்தும்போது அதை வங்கிகள் மறுக்கும்போது அல்லது அந்த தொகையை வாங்க கால தாமதம் செய்யும்போது 

14. அரசு வழங்கும் சலுகைகளை வழங்க மறுக்கும்போது அல்லது அதை வழங்க கால தாமதம் செய்யும்போது 

15. சரியான காரணம் இல்லாமல், முன்னறிவிப்பு இல்லாமல் வைப்பு நிதி கணக்குகளை வலுக்கட்டாயமாக முடிக்கும்போது 

16. கணக்குகளை முடிக்க மறுக்கும்போது அல்லது முடிக்க கால தமாதம் செய்யும் போது 

17. வங்கிகள் சட்டத்தின்படி, வெளிப்படையாக வங்கிகள் செயல்படாதபோது 

18. வங்கி கடன்கள் வழங்குவதில் குறைகள் இருந்தாலும் புகார் செய்யலாம் 

19. வட்டி வசூலிப்பதில் ரிசர்வ் வங்கியின் நடைமுறைகளைப் பின்பற்றாதபோது

 20. வங்கிக் கடனை சரியான நேரத்தில் வழங்காதபோது அல்லது கால தாமதம் செய்யும்போது

 21. சரியான காரணம் இல்லாமல் வங்கிக் கடனுக்கான விண்ணப்பங்களை நிராகரிக்கும்போது 

ஆனால் தீர்ப்பாயத்தில் புகார் செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட வங்கிகளில், வாடிக்கையாளர்கள் அது சம்பந்தமாக புகார் தெரிவித்திருக்க வேண்டும். 

அவ்வாறு புகார் தெரிவித்து 1 மாதத்திற்கும் மேலாக அதன் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அல்லது வங்கிகள் எடுக்கும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்றால் வாடிக்கையாளர்கள் தீர்ப்பாயத்தில் புகார் செய்யலாம். 

எழுத்து மூலமாக புகார்களைத் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைன் மூலமாக அதாவது 

https://secweb.rbi.org.in அல்லது BO/compltindex.htm 

என்ற இணையதளத்திற்குள் சென்று புகார் தெரிவிக்கலாம். அல்லது இமெயில் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். எனினும் புகார் தெரிவிக்க முறையான படிவம் எதுவும் வழங்கப்படவில்லை.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் - 04.04.2013

குறிப்பு:

E-mail address of Ombudsman officer 

http://www.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=164#

பள்ளிக் குழந்தைகளை பக்குவமாக வளர்க்க


பள்ளிக் குழந்தைகளை பக்குவமாக வளர்க்க
என்ன செய்ய வேண்டும்?

" அப்பாடி... இத்தனை நாள் இந்த பிள்ளைங்களை வீட்டுல வைச்சுகிட்டு நாங்க பட்டப்பாடு இருக்கே.... இனிமே 3 மணி நேரம் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கலாம்" என்று பெருமூச்சு விடும் கே.ஜி பெற்றோரா நீங்கள்? இந்த வயதில்தான் உங்கள் செல்லங்களின் ஒவ்வொரு அசைவும் உங்களுக்கு மிக முக்கியமானது.
அவர்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்களுக்கு சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் யமுனா.

1. என்ன காரணம் சொன்னாலும் காலையில் வயிற்றுக்கு சாப்பாடு கொடுத்த பிறகே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். காலை உணவை தவிர்க்கவிடவேக் கூடாது.

2) படுக்கையை விட்டு எழுந்ததும், 'ஸ்கூல் கெளம்பு... நேரமாச்சு' என்று படுத்தாமல், அவர்களுக்கு விரும்பியதை அரை மணி நேரம் செய்யவிட்டு, பிறகு அன்றாட பழக்கவழக்கங்களை முடித்துவிட்டு பள்ளிக்கு அனுப்பினால்தான் ஸ்கூல் போகிற மனநிலை வரும்.

3) ஒரு நாள் அம்மா, ஒரு நாள் அப்பா என்று பெற்றோர் இருவரும் ஒரு நாள்விட்டு ஒரு நாள் குழந்தையை பள்ளிக்கு தயார் செய்து அனுப்புங்கள். அப்போதுதான் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குழந்தை அழாமல் சமர்த்தாக ஸ்கூல் கிளம்புவார்கள். 

4) ''இவளோ லேட்டா எழுந்திரி, வேன் போயிடும்", ''போ போய் மிஸ் கிட்ட அடி வாங்கு" என்று காலையில் சுப்ரபாதம் பாடி எழுப்பாமல், ''சீக்கிரம் எழுந்தா உன் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் கூட போய் கிளாஸ் ஆரம்பிக்கிற வரைக்கும் ஜாலியா விளையாடலாம்ல" என்று பாசிட்டிவாக பேசுங்கள்.

5) கேஜி முதல் 3ம் வகுப்புக்குள் படிக்கின்ற குழந்தைகளிடம், இந்த வயதிலேயே மதிப்பெண்களை எதிர்பார்க்கக் கூடாது. அதற்கு பதில் அவர்கள் படிப்பை எப்படி  புரிந்து கொள்கிறார்கள் என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். 

6) புதிய சூழ்நிலைக்குத் தயாராவது எப்படி? புதிய நபர்களிடம் எப்படிப் பழக வேண்டும், நண்பர்களை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து,  அந்தந்த சூழ்நிலைகளில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள். 

7) எந்தப் பள்ளிக்கூடமும் நூறு சதவிகிதம் சிறந்தது கிடையாது. எனவே குழந்தைகள் முன்பாக அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தைத் தரக்குறைவாகப் பேசக்கூடாது. அப்படி பேசும்பட்சத்தில் குழந்தைகளுக்குப் பள்ளியின் மீது உள்ள ஈர்ப்புக் குறையத் தொடங்கி, படிப்பு மீதே வெறுப்பு ஏற்படும்.

8) ''ஹோம் ஒர்க் பண்ண வர்றியா இல்லியா...? முதல்ல உன் கையெழுத்தை மாத்து" என்று எப்போதும் மிலிட்ரி கமாண்டராக இருக்காமல் ''டேய் இன்னிக்கு என்ன ஹோம் வொர்க்...? வா வா ஓடிவா பார்க்கலாம்" என்று சின்ன சுவாரஸ்யத்தை கூட்டுங்கள். இந்த வயசுல ஹோம் வொர்க் எல்லாம் எதுக்கு என்று அசால்டாகவும் இருக்கக் கூடாது. அவர்களுடன் நீங்கள் உட்காரும் பட்சத்தில் வளரும் போது அவர்களாகவே ஹோம் வொர்க்கை முடித்துவிடுவார்கள்.

9) தினமும் மாலை வீட்டுக்கு வந்ததுமே படி என்று சொல்லாமல், கொஞ்ச நேரமாவது விளையாட விடுங்கள். அப்போதுதான்  அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.

10) இந்த வயதில் மோஷன் போறதுல பிரச்னை இருக்கத்தான் செய்யும்.எனவே குழந்தை ஸ்கூலில் மோஷன் போய்விட்டால் திட்டாதீரக்ள். அதே போல் மோஷன் போறதில் பிரச்னைகள்  இருந்தால்  அதை பள்ளியில் தெரிவித்து விடுங்கள்.

11) குழந்தைப் பருவத்தில் ஜலதோசம், இஃன்பெக்ஷன், அனீமியா இதெல்லாம் வருவது சகஜம்தான். எனவே மாதா மாதம் உடம்பை செக் பண்ணுங்கள். சின்னக் குழந்தைக்கு ஒரு வருடத்தில் 6-7 முறை உடல்நிலை பாதிக்கப்படுவது இயல்பானது. உடம்பு சரியில்லாத பட்சத்தில், குழந்தைகளை ஸ்கூலுக்கு 100% அட்டென்டென்ஸுக்காக அனுப்பக்கூடாது.

12) ''அம்மா அந்தப் பையன் என்னைக் கடிச்சிட்டான், அடிச்சிட்டான்" அப்படின்னு குழந்தை சொல்லும் போது, உடனே "நீ ஏதாவது பண்ணுனியா..?" அப்படின்னு கேட்கக் கூடாது. பதிலா "அதுக்கு முன்னாடி என்ன நடந்தது...?" அப்படின்னு கேட்கணும். அப்பதான் குழந்தைங்க உண்மையை சொல்வார்கள்.

13 ) மதியச் சாப்பாட்டு தொடர்ந்து திரும்ப அப்படியே வருகிறது என்றால்  அவர்களுக்கு பிடித்த சாப்பாட்டை கொடுத்தனுப்புங்கள். அதை விடுத்து நீங்கள் செய்வதைத்தான் சாப்பிட வேண்டுமென்று கமாண்ட் செய்யாதீர்கள்.

14)  தினமும் பள்ளி முடிந்து வந்ததும்  அன்று என்ன நடந்தது என்று கேளுங்கள். அப்புறம் கேட்டுக்கலாம்   என்றால், அவர்களுக்கு மறந்து போய்விடும். வெளிப்படையாக பேசினால் மட்டுமே எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும்.

15) சின்ன சின்ன எமோஷன்களுக்கு பதிலளியுங்கள். அப்போதுதான் பென்சில் காணாமல் போனதிலிருந்து மனக் காயம் வரை எல்லாவற்றையும் சொல்வார்கள்.

16) "ஸ்கூல்ல டீச்சர் திட்டிட்டாங்க..." ன்னு வந்து சொன்னா, "கவலைப்படாத சரியாகிடும், நான் கூட இருக்கே"ன்னு சொல்லணும். நீங்களும் சேர்ந்து திட்டுனா, அவங்க உங்ககிட்ட எதுவுமே ஷேர் பண்ணிக்க மாட்டாங்க.

17) பிரச்னை என்று அழுதால், உடனே அவர்களுக்கு பிடித்த பொருளை கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பிறகு எல்லா பிரச்னைகளுக்கும் எதையாவது ஒன்றை நீங்கள் தர வேண்டியது இருக்கும். 

18) அவர்கள் முன்னால் நீண்ட நேரம் சீரியல் பார்ப்பது, அவர்களை திட்டுவது, அவர்கள் முன்னால் ஸ்மார்ட் போனை சதா பார்த்துக் கொண்டே இருந்தால் அவர்களும் அதை திரும்பச் செய்வார்கள்   என்பதை மறந்துவிடாதீர்கள்.

-தொகுப்பு: லோ. சியாம் சுந்தர்
(மாணவப் பத்திரிகையாளர்

நன்றி : விகடன் செய்திகள் - 07.06.2016

Monday, June 6, 2016

காசோலை குளறுபடி


காசோலை குளறுபடி -  என்ன செய்ய வேண்டும்?

இன்று எனது நண்பர் அவருடைய நண்பர் ஒருவரை (அ என்று பெயரிட்டு கொள்வோம்) சட்ட ஆலோசனை வேண்டி என்னிடம் கூட்டி வந்தார். 
.
அ –க்கு சூரத் (குஜராத்) நகரில் இருந்து செக் மோசடி வழக்குக்கான ஒரு சட்டப்படியான அறிவிப்பு வந்துள்ளது. அதில் அ வழங்கிய ரூ.1,56,000 மதிப்பிலான காசோலைக்கு வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டதாகவும், அதற்கான பணத்தை அந்த அறிவிப்பு கண்ட 15 நாட்களுக்குள் வழங்காவிட்டால், சூரத் நகர் குற்றவியல் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த்து. 
.
” நான் சூரத்தில் உள்ள யவருக்கும் காசோலை வழங்கவில்லை. இந்த அறிவிப்பை அனுப்பியவர் யார் என்றே எனக்கு தெரியவில்லை. மேலும் இவர்களிடம் நான் எந்தவித தொழில்ரீதியான வர்த்தகமும் செய்யவில்லை. இவர்கள் ஏன் எனக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்கள் என்று புரியவில்லை” என்று அ கூறினார்.
.
நான் அவரிடம் ” அது சரி, ஆனால் நோட்டிஸில் குறிப்பிட்டுள்ள காசோலை எண் உங்கள் காசோலைதானா? மேற்படி தொகைக்கு யாருக்காவது காசோலை வழங்கினிர்களா? என்று கேள்வி எழுப்பினேன். 
.
அதற்கு அவர் “ சார், காசோலை விபரம் சரிதான். ஆனால் இந்த காசோலையை நான் வழக்கமாக துணி கொள்முதல் செய்யும் கோயம்புத்துார் வியாபாரிக்குதான் வழங்கினேன். ஆனால் சூரத்தில் உள்ளவர் கைக்கு இந்த காசோலை ஏன் போனது, அவர் ஏன் எனக்கு வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்புகின்றார்? என்று கேள்வி எழுப்பினார். 
.
இப்போது, எனக்கு முழு விபரமும் புரிந்துவிட்டது. 
.
பின்னர் அ க்கு விளக்கமாக சிறு பாடம் எடுத்தேன். 
.
”சார் நீங்கள் கோயம்புத்துார் வியாபாரிக்கு கொடுத்த காசோலையை அவர் மேல் எழுதி (endorsement) செய்து சூரத் வியாபாரிக்கு கொடுத்துள்ளார். சூரத் வியாபாரி அவரது வங்கியில் வசூலிக்க போட்டதில் அந்த காசோலை திரும்பிவிட்டது. அதனால் உங்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். 
.
சார், நான் என்ன செய்ய வேண்டும்? ஒரு டி.டி. எடுத்து அவர்களுக்கு அனுப்பிவிடவா?
.
”இல்லை. வங்கியில் அந்த காசோலை மறுபடியும் திரும்பாத அளவிற்கு பணத்தை போட்ட பின்னர் நோட்டிஸ் அனுப்பியவர்களுக்கு அந்த காசோலையை திரும்பவும் வங்கியில் வசூலுக்காக போடச்சொல்லுங்கள், என்று அறிவுறுத்தினேன்.
.
பின்னர் அ விடம், ”காசோலை வழங்கும்போது Cross பண்ணி கொடுத்தீர்களா? என்று கேட்டதற்கு 
”ஆம் சார், இரு இணை குறுக்கு கோடுகள் போட்டுதான் கொடுத்தேன் என்றாா். 
.
சார், நீங்கள் வெறும் இரண்டு இணை குறுக்கு கோடுகள் போட்டதாலே, அந்த காசோலையை உங்களிடம் பெற்ற நபர், மேல் எழுதி மற்றவருக்கு வழங்கியுள்ளார். இனிமேல், இரண்டு இணை குறுக்கு கோடுகளுக்கு இடையே “Account Payee என்றும் அந்த வார்த்தைக்கு கீழே Not Negotiable” என்று மறக்காமல் எழுதுங்கள். முடிந்தால் இதற்கு ஒரு Rubber Stamp செய்து வைத்து காசோலையில் முத்திரை இடுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன்.

By  Leenus Leo Edwards, Advocate.

LAW ON BANK AND INSURANCE Group in FACEBOOK - 06.06.2016

Sunday, June 5, 2016

வெளிநாட்டுக் கல்வி


வெளிநாட்டுக் கல்வி - என்ன செய்ய வேண்டும்?
வெளிநாட்டுப் படிப்பு... நில்... கவனி... புறப்படு!
வெளிநாட்டுக்குச் சென்று படிக்க விரும்புகிறவர்கள் இன்றைக்கும் நிறையவே இருக்கிறார்கள். இவர்கள் என்ன மாதிரியான விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று சன்சீ சர்வதேச கல்லூரியின் நிர்வாக இயக்குநர் ரவிசாகரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

1. நீங்கள் படிக்கப் போகும் கல்வி நிறுவனம் அந்த நாட்டின் அரசால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள். உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்கக் கல்வித் துறை அல்லது உயர் கல்வி அங்கீகரிப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும். அரசினால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறதா என்பதைப் பார்ப்பதுடன் எந்த நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும். பல நாடுகளில் போலி அங்கீகரிப்பு நிறுவனங்கள் வழங்கிய அங்கீகாரத்தை வைத்துக்கொண்டு கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.  இதுமாதிரியான நிறுவனங்களின் பட்டியலை அமெரிக்க அரசாங்கம் ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறது. மற்ற நாடுகள் என்றால், நீங்கள்தான் விசாரித்தறிய வேண்டும்.

2. இந்திய வங்கிகள் ஏதாவது ஒன்று, நீங்கள் படிக்கப்போகும் வெளிநாட்டில் கிளை வைத்திருக்கிறதா என்று பாருங்கள். அப்படி ஒரு வங்கி இருந்தால், அதன் மூலமாக இந்தியாவிலிருந்து பணம் செலுத்த முடியும். செலுத்தப்படும் பணம் நீங்கள் இருக்கும் நாட்டின் கரன்சியாக வங்கியே மாற்றித்  கொடுக்கும். இப்படி வேறு நாட்டில் உள்ள வங்கிக் கிளைக்குப் பணம் அனுப்ப குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். குறைவான கட்டணத்தில் தரமான சேவை வழங்கும் வங்கி எது என்பதை அறிந்து, அதில் கணக்கைத் தொடங்கலாம்.

3. வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும்போது யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மாணவர் அடையாள அட்டையை வைத்திருப்பது பல நேரங்களில் உதவியாக இருக்கும். இந்த அட்டை 133 நாடுகளில் செல்லுபடியாகும். இந்த அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க
http://www.isic.co.in/identity-cards-request-form.php
என்கிற லிங்கை க்ளிக் செய்யலாம். இந்த அட்டையைப் பயன்படுத்திப் பல பிராண்டட் கடைகளில் செய்யும் பர்சேஸ்களுக்கும், ஹோட்டல் பில் களுக்கும் சலுகை பெறலாம். தவிர, இது ஒரு சர்வதேச போட்டோ ஐடியாகவும் பயன்படும்.

4. சர்வதேச இளைஞர் பயண அட்டையையும் மேற்கூறிய லிங்கிலேயே விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்வது நல்லது. இதனால் பயணக் கட்டணங்கள் சலுகைக் கட்டணத்தில்  கிடைக்கும். இந்த அட்டையை 12 -30 வயதுள்ளவர்கள் மட்டுமே வாங்க முடியும். பல நாடுகளில் உள்ள அருங்காட்சியகம், கலாச்சார மையங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்பிடங்களைக் குறைந்த கட்டணத்தில்  சுற்றிப் பார்ப்பது, பல நாடுகளின் உள்நாட்டுப் போக்குவரத்துகளில் பயணச் சலுகைகள், ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் கட்டணச் சலுகை இதன் மூலம் கிடைக்கும்.

5. வெளிநாடுகளில் படிப்புக்கு செலவழிக்கும் தொகையில் பாதிக்கு மேல் தங்கும் இடம் மற்றும் உணவுக்கு மட்டுமே செலவாகும். நீங்கள் கல்லூரி விடுதியில் தங்க விரும்பினால், அதற்கான கட்டணம் அதிகமாகவே இருக்கும். ஆனால், கல்லூரிக்கு வெளியே டார்மெட்ரியில் (dormitory)  தங்கினால், கல்லூரி விடுதியை விடக் குறைந்த வாடகையே ஆகும். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்குவதற்காக மேன்ஷன் போன்ற அமைப்புகளும் இருக்கும். எடுத்துக்காட்டாக, நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூருக்கு அருகில் பிரின்ஸ் ஜார்ஜ் பார்க் என்கிற இடத்தில் 2000-க்கும் மேற்பட்ட நல்ல டார்மெட்ரிகள், குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது.

6. நீங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரி, தொலை பேசி எண் போன்றவைகளைக் கூகுள் ட்ரைவில் பதிந்து கொள்ளுங்கள். ஒருவேளை தற்செயலாக உங்கள் உடமைகள் தவறினாலும் இன்டர்நெட் மூலம் முகவரியைக் கண்டுபிடிக்க முடியும். இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குப் போனவுடன் அந்த நாட்டின் சிம் கார்டை பயன்படுத்தத் தொடங்கி விடுவீர்கள். ஆகையால் நிரந்தரமாக உங்களைத் தொடர்புகொள்ள உங்கள் மெயில் ஐடிகளே உதவும்.

7. நீங்கள் படிக்கச் செல்லும் நாட்டின் அடிப்படை சட்ட திட்டங்களைக் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக, சிங்கப்பூரில் சூயிங்கம் மென்றுதுப்ப தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதியை மீறினால் 500 டாலர் அபராதம் விதிக்கப்படும்.

8. பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் கல்விக்கு ஸ்காலர்ஷிப்களை வழங்கி வருகின்றன. அதில் நீங்கள் படிக்கப் போகும் கோர்ஸ்களுக்கு  ஸ்காலர்ஷிப் கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பது நல்லது. சில ஸ்காலர்ஷிப்கள் முதுகலை படிப்புக்கும் கிடைக்கிறது எனவே, இளங்களைப் படிப்பில் சிறப்பாகச் செயல்பட்டாலே முதுகலைப் படிப்பை இலவச மாகப் படிக்கலாம். ஸ்காலர்ஷி பற்றிய விவரங்களை அறிய
http://www.abroadplanet.com/scholarships/
லிங்கை சொடுக்குங்கள்.

9.வெளிநாட்டுப் படிப்புகளுக்குக் கல்விக் கடன் கிடைக்கிறது. இந்த வெளிநாட்டுக் கல்விக் கடனுக்குக் கட்டும் வட்டியை 80 E பிரிவின் கீழ் காட்டி வருமான வரிச் சலுகை பெறலாம். சில வங்கிகள் கல்விக் கட்டணத்தின் முழுத் தொகையையும் கடனாக வழங்குகிறது. சில வங்கிகள்  30 லட்சம் ரூபாய், 50 லட்சம் ரூபாய் என்று ஒரு குறிப்பிட்ட அளவு வரை மட்டுமே கடனாக வழங்குகிறது. சில வங்கிகள் விமானப் பயணத்துக்கும் சேர்த்து கடன் வழங்குகிறது. வெளிநாட்டுக் கல்விக் கடனை வாங்கும்போது எத்தனை வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும், படிப்பு முடிந்தபின் எத்தனை வருடம் வரை வட்டி கணக்கிடப்படாது என்பது போன்ற தகவல்களை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.

10. உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விசா காலத்துக்கு ஒரு குறிபிட்ட காலம் ஸ்டே பேக் காலமாக வழங்கப் பட்டிருக்கும். படிப்பு முடிந்த உடன் ஊருக்கு வந்துவிடாமல் அந்த ஸ்டேபேக் காலத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டிலேயே வேலை தேடுங்கள். அதோடு இருக்கும் காலத்தில் நிரந்தர அட்டை வாங்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் ஆலோசியுங்களேன். 

மு.சா.கெளதமன்

நன்றி : நாணயம் விகடன் - 03.05.2015

காலரா நோய் - வராமல் தடுக்க


காலரா - என்ன செய்ய வேண்டும்?
காலரா என்பது என்ன?
'விப்ரியோ காலரே' எனும் பாக்டீரியா கிருமியால், தண்ணீர் மூலம் பரவும் தொற்று நோய் காலரா. 

இந்நோய் தொற்று எவ்வாறு பரவுகிறது?
காலராவால் பாதிக்கப்பட்ட நோயாளி, திறந்த வெளியில் மலம் கழிப்பதால், அதில் உட்காரும் ஈக்கள், காலரா கிருமிகளை சுமந்து குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களில் உட்காரும். இந்த உணவுகளையும் தண்ணீரையும் பயன்படுத்தும் போது காலரா பரவுகிறது. 

காலராவின் அறிகுறிகள் என்ன?
கடுமையான வாந்தி, பேதி, வயிற்றுப் போக்கு. இதனால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். காலரா தீவிரமடைந்தால், சிறுநீர் குறைவாக வெளியேறும். மயக்கம் வரும். 

காலராவிற்கு தடுப்பு மருந்து உள்ளதா?
வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிர்த் தடுப்பு மருந்து உள்ளது. காலரா தடுப்பு மருந்தை குழந்தை 

பருவத்தின் போதே கொடுக்க வேண்டுமா?
காலரா தடுப்பு மருந்தை சிறுவயதிலேயே பொதுவாக கொடுப்பதில்லை. ஆனால், காலரா பரவும் காலத்தில் இதை போட்டுக் கொள்ளலாம். மேலும் காலரா பாதிக்கும் ஆபத்துள்ள இடங்களில் வாழும் மக்களுக்கு இது போடப்படுகிறது. 

காலரா பரவாமல் தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
கழிவுநீர் கால்வாய், சாக்கடைகளை சுத்தம் செய்து, பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிக்கக் கூடாது. தேவையான இடங்களில் போதுமான கழிப்பறைகளை, அரசு கட்டித் தர வேண்டும்.

காலரா வராமல் தடுக்க, வீடுகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
கழிப்பறை சென்று வந்ததும், நன்றாக கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து, ஆற வைத்து, குடிக்க வேண்டும். 

யாருக்கெல்லாம் காலரா வரும் அபாயம் உண்டு?
சுகாதாரமில்லாத இடங்களில் வசிப்பவர்களுக்கும், உணவை உண்பவர்களுக்கும் காலரா பாதிக்கும் அபாயம் அதிகம். 

காலரா பாதித்தவர் என்ன மாதிரியான உணவு வகைகளை உண்ண வேண்டும்?
பொதுவாக எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை உண்ண வேண்டும். அரிசி கஞ்சி. பார்லி கஞ்சி கொடுக்கலாம். நீர் ஆகாரங்களை, குறிப்பிட்ட இடைவெளியில் குடிக்க வேண்டியது அவசியம்.

காலராவிற்கு சிகிச்சை என்னென்ன?
காலரா பாதிப்பு இருப்பது தெரிந்தால், தாமதிக்காமல் மருத்துவ மனையில் அனுமதிக்க வேண்டும். சிறுநீரின் அளவை கண்காணிக்க வேண்டும். மலத்தில் உப்பு சத்து அதிகமாக வெளியேற வாய்ப்புள்ளதால், உப்பு சத்து குறையும் ஆபத்து உள்ளது. எனவே அதையும் சமன் செய்ய பொட்டாசியம் என்ற உப்பை மருந்து வடிவில் ஏற்ற வேண்டும். குழந்தைகள் முதியோர் சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு, மேற்சொன்ன ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு அதிக கண்காணிப்பு தேவை.

- எஸ்.சுப்ரமணியன்
தொற்று நோய் சிறப்பு நிபுணர், சென்னை.
044 - 22777000

நன்றி : தினமலர் நாளிதழ் - 25.05.2016

Saturday, June 4, 2016

நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மேற்படிப்பு படிக்க


நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மேற்படிப்பு படிக்க 
வழியில்லையா,  என்ன செய்ய வேண்டும்?

ஏழை மாணவர்கள் வாழ்க்கையில் 
ஆனந்தம்,ஆனந்தம்,ஆனந்தமே...

இது கொஞ்சம் வித்தியாசமான ஆனால் ஆரோக்கியமான முயற்சி.

ஒவ்வொரு வருடமும் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் ஏழரை லட்சம் பேரில் எப்படிப்பார்த்தாலும் ஒரு லட்சம் பேர் உயர்படிப்பு படிக்கமுடியாமல் திணறுகின்றனர்.

இந்த திணறுலுக்கு சந்தேகமில்லாமல் வறுமைதான் காரணம்.

1200க்கு 1150ற்கு மேல் வளமையான மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும்,உயர்கல்வி படிக்கும் கனவுகள் சுமந்திருந்தாலும்,உண்மையில் அதற்கான கல்லுாரியில் சேர்வதற்கான விண்ணப்ப மனு வாங்கத்தேவையான இருநுாறு முன்னுாறு ரூபாய் பணம் கூட இல்லாத கொடுமை இவர்களுடையது.

இவர்களில் சிலர் 
அப்பா,அம்மா இல்லாதவர்கள்

உடுத்த மாற்று ஆடை கூட இல்லாதவர்கள்
ஒரு வேளை மட்டுமே சாப்பிடுபவர்கள்

பகலில் பள்ளிக்கு போய்விட்டு இரவு வீட்டு வேலை பார்ப்பவர்கள்

செருப்பு வாங்கக்கூட காசு இல்லாதவர்கள்
என்று வறுமையின் உச்சகட்டத்தில் இருந்தாலும் எப்படியோ தட்டுத்தடுமாறி பிளஸ் டூ முடித்துவிடுகின்றனர்,அதுவும் நல்ல மதிப்பெண்களோடு.

உயர்கல்வி மட்டுமே இவர்களையும், இவர்களைச் சார்ந்தவர்களையும் மாற்றிப்போடும் என்ற நிலையில் யார் இந்த மாணவர்களுக்கு உதவுவர்,அதுவும் மெடிக்கல்,என்ஜீனிரிங் போன்ற அதிகம் செலவாகும் படிப்புகளுக்கு..

பாங்க லோன் என்பது இத்தகைய மாணவர்களுக்கு கிடைக்காது என்பதுதான் கசப்பான உண்மை.ஒன்று யாராவது உதவி செய்தால் படிப்பார்கள் அல்லது டீகடையில் கிளாஸ் கழுவுதல் உள்ளீட்ட கிடைத்த வேலைகளை பார்த்துக்கொண்டு முடங்கிப்போவர்.

இப்படிப்பட்ட மாணவ,மாணவியரை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான கல்வியை முழுமையாக தரும் அறக்கட்டளைதான் ஆனந்தம் இளைஞர் நல அமைப்பு.

பணம் புகழ் சம்பாதிப்பது அல்ல வாழ்க்கை, அதையும் தாண்டி நாம் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எனது எண்ணத்தோடு ஒத்த கருத்து கொண்ட நண்பர்களுடன் துவங்கப்பட்டதுதான் இந்த ஆனந்தம் அமைப்பு. ஆரம்பத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடத்தினர். 

ஆனால் தேவைக்கு அதிகமான விழிப்புணர்வுடன் இருந்த அந்த கிராமப்புற மாணவர்களுக்கு தேவைப்பட்டது எல்லாம் கல்லுாரியில் சேர்வதற்கான பணம்,பணம் மட்டுமே.

அவர்களில் மெடிக்கல்,என்ஜீனிரிங் சீட்டு கிடைத்தும் பணம் கட்டாமல் இருந்த மாணவர்களில் சிலரை தேர்வு செய்து நான்கு வருட படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டு படிக்கவைக்க முடிவு செய்தனர்.

இதைக்கேட்டதும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், உற்றோர், நண்பர்கள் மட்டுமல்ல, மொத்த கிராமமே கையை காலாக நினைத்து நன்றி கூறுகிறோம் என்றனர்.அன்று தொட்டு இன்று வரை இந்த தொண்டு தடையின்றி தொடர்கிறது.

கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள்.

பெற்றோரை இழந்த அல்லது இல்லாத மாணவர்கள்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள்.

குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருக்கப்போகிறவர்கள்.

உயர்கல்வியில் தகுதி அடிப்படையில் சேர்வதற்கான மதிப்பெண் பெற்றவர்கள்.

இப்படிப்பட்ட மாணவ,மாணவியரை பற்றி பள்ளி தலைமையாசிரியருக்குதான் நன்கு தெரியும் ஆகவே அவர் முதலில் சிபாரிசு செய்யவேண்டும்,பின்னர் ஆனந்தம் குழு நேரிடையாக போய் விசாரித்து உண்மையை உறுதி செய்யும்

இவர்களில் முப்பது பேர் தேர்வு செய்யப்பட்டதும் அவர்கள் விரும்பும் படிப்பு படிக்கலாம்.கல்வி தொடர்பான அனைத்து செலவுகளையும் படித்து முடிக்கும் காலம் வரை ஆனந்தம் ஏற்கும்.

தேர்ந்து எடுக்கப்படும் ஒவ்வொரு மாணவரையும் ஆனந்தம் அமைப்பை சார்ந்தவர் படித்து முடிக்கும் காலம் வரை வழிகாட்டியாக இருந்து உதவுவார்.

படிப்பு மட்டுமின்றி உடல்நலம்,மனநலம்,ஆளுமைத்திறன் மற்றும் வாழ்விற்கு தேவையான நற்பண்புகளை மேம்படுத்துவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

மேலும் அவர்களை பட்டதாரியாக்கியதோடு நிறுத்திவிடாமல் வாழ்வின் சவால்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு ஆனந்தமாகவும்,சமூக அக்கறையோடும் வாழக்கூடிய சிறந்த மனிதர்களாக உருவாக்குதல்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த இந்த சேவையின் காரணமாக இப்போது பலர் இன்போசிஸ்,டிசிஎஸ் போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனர்.சிலர் டாக்டர்களாக வரவிருக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் காரணமாக முப்பது மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்து படிக்கவைக்கின்றனர்,நீங்க சரியா செய்றீங்க உங்க நோக்கமும் செயல்பாடும் தெளிவா இருக்கு, உங்ககிட்ட கொடுக்கிற ஒவ்வொரு பைசாவும் மாணவர்களுக்கு மட்டுமே பயன்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது ஆகவே எங்களது நன்கொடையையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என பலர் இப்போது மனமுவந்து ஆனந்தம் அமைப்பிற்கு உதவ தயராகிவருகின்றனர்.இதன் காரணமாக இன்னும் கொஞ்சம் கூடுதல் மாணவர்களை படிக்கவைத்து அவர்களது இல்லத்திலும்,உள்ளத்திலும் விளக்கு ஏற்றிவைக்க ஆனந்தம் அமைப்பு விரும்புகிறது.

கொடுக்கும் பணத்திற்கு கணக்கு காட்டுவதுடன் உங்கள் பணத்தால் எந்த மாணவன் எந்த மாணவி படித்துக்கொண்டு இருக்கிறார்,எங்கு படித்துக்கொண்டு இருக்கிறார்,என்ன செய்கிறார் என்பது உள்பட எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் தெளிவான நடைமுறையை ஆனந்தம் மேற்கொண்டு வருகிறது.

சந்திராயன் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை,சொல்வேந்தர் சுகிசிவம்,யுசிஜி துணைத்தலைவர் எச்.தேவராஜ்,சரவணா ஸ்டாக்ஸ் நிர்வாக இயக்குனர் டி.சத்யமூர்த்தி உள்ளீட்டோர் ஆனந்தம் அமைப்பின் செயல்பாடுகளை நேரில் பார்த்து பாராட்டி அவர்களது தொண்டுக்கு தோள்கொடுத்து வருகின்றனர்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாயினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல் என்று முழங்கிய பாரதியின் வரிகளை நிஜமாக்க நம்மில் பலருக்கு மனமும் உண்டு பணமும் உண்டு.

அப்படி பணமும் மனமும் கொண்ட உங்களாலும், உங்களுக்கு தெரிந்தவர்களாலும் இது போன்ற மாணவர்களுக்கு தேவைப்படும் கல்வித்தொகை கிடைத்தாலும் ஆனந்தமே.

உங்களுக்கு தெரிந்த வறுமையில் வாடும் கிராப்புற அறிவுபூர்வமான மாணவர்கள் பற்றி அமைப்பினருக்கு தகவல் தந்தாலும் ஆனந்தமே.

இதைப்படித்துவிட்டு உங்களது கருத்துக்களை அமைப்பின் நிறுவனர் தலைவர் எஸ். செல்வகுமாரிடம் 

எண்:98410 13532

பகிர்ந்து கொண்டாலும் ஆனந்தமே.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

நன்றி : தினமலர் நாளிதழ் - 04.06.2016

Friday, June 3, 2016


அமெரிக்கா சென்று படிக்க என்ன செய்ய வேண்டும்?

அமெரிக்காவில் படிக்க செல்லும் மாணவர்கள் எளிதில் விசா பெறுவது குறித்து சென்னையில் உள்ள அமெரிக்கா தூதரக தலைமை விசா அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தலைமை விசா அதிகாரி சார்லஸ் லூவோமா ஓவர்ஸ்டீரிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவில் கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மொத்தம் 4 ஆயிரத்து 700 உள்ளன. அவற்றில் இந்திய மாணவ- மாணவிகள் ஒரு லட்சத்துக்கு 30 ஆயிரம் பேர் படிக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து 72 ஆயிரம் மாணவ- மாணவிகள் அமெரிக்காவிற்கு படிக்க சென்றுள்ளனர்.

இந்திய மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களில்தான் 78 சதவீதம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த அளவு இந்திய மாணவர்கள்தான் அமெரிக்காவில்  படித்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 4 மடங்காக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாடு உள்பட இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்கள் அங்குதான் படிக்க வேண்டும் என்பதை உறுதி செய்த பின்னர் 
ustraveldocs.com 
என்ற இணையதளத்திற்கு சென்று அமெரிக்காவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளை தேர்ந்தெடுங்கள். உங்கள் வசதிக்கு ஏற்ப தகுதியான கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள். 

 அமெரிக்காவில் கல்விக்கான வகுப்புகள் தொடங்குவதற்கு முன் 120 நாட்களுக்கு முன்பாக விசாவுக்கு அழைக்க மாட்டோம் . விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விசாவுக்கான நேர்முகத் தேர்வுக்கான நேரம் குறிப்பிட்டு தெரிவிக்கப்படும். விசா நேர்முகத் தேர்வுக்கு உங்களுக்கு ஒதுக்கிய நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக வாருங்கள். உண்மையான சான்றிதழை காண்பியுங்கள். போலி சான்றிதழ்களை காண்பிக்காதீர்கள். பொய் சொல்லாதீர்கள். உங்களால் கல்வி கட்டணம் செலுத்த முடியுமா? சிலர் தொழிலதிபராக இருப்பார்கள். கல்வி கட்டணம் செலுத்துவதற்கு அவர்களுக்கு எளிதாக இருக்கலாம். சிலர் வங்கிகளில் கடன் பெறலாம். சிலர் குடும்ப நண்பர்கள் அல்லது உறவினவர்கள் மூலம் பணம் செலுத்தலாம். எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லுங்கள். இவைகள்தான் முக்கிய அம்சங்கள். இவ்வாறு செய்தால் விசா பெறுவது எளிது" என்று தெரிவித்தார்.
நன்றி :  விகடன் செய்திகள் - 22.04.2016


Thursday, June 2, 2016

வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள்


வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி 
உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?
வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறான உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சில, மிகவும் முக்கியமானவை. அதைப்பற்றி அறிந்துகொள்வது, வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
பிரிட்டன்
BRITISH CHEVENING SCHOLARSHIPS
இது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு உதவித்தொகையாகும். இந்த உதவித்தொகையைப் பெற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சாராத, இதர 116 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான விபரங்களுக்கு www.chevening.org
COMMONWEALTH SCHOLARSHIPS
இந்த உதவித்தொகை, காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து, பிரிட்டனில், உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.
டியூஷன் கட்டணம், வாழ்க்கைச் செலவினங்கள், விமானப் போக்குவரத்து கட்டணம் மற்றும் கல்வி ஆதாரங்களுக்கான கட்டணம் உள்ளிட்ட முக்கிய கட்டணங்கள், இந்த உதவித்தொகைக்குள் அடங்கும்.
இதைப்பற்றிய விபரங்களுக்கு www.cscuk.dfid.gov.uk
அமெரிக்கா
USA FULBRIGHT SCHOLARSHIPS
சர்வதேச மாணவர்களுக்காக, அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித்தொகை இது. படிப்பு காலத்தில், ஒரு மாணவருக்கு ஆகும் அனைத்து செலவினங்களையும் உள்ளடக்கியதுதான் இந்த உதவித்தொகை.
இதுபற்றிய முழு விபரங்களுக்கு www.iie.org/en/Fulbright
ROTARY FOUNDATIONS AMBASSADORIAL SCHOLARSHIPS
தனியார் பங்களிப்பின் மூலமாக, இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்கல்வி மேற்கொள்ளும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய உதவித்தொகை திட்டங்களுள் இதுவும் ஒன்றாகும்.
விரிவான விபரங்களுக்கு www.rotary.org/en/studentsandyouth/educationalprograms/
ambassadorialscholarships/Pages/ridefault.aspx
ஆஸ்திரேலியா
AUSTRALIA AWARDS SCHOLARSHIPS
திறமையும், தகுதியும் வாய்ந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு AusAID -ஆல் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விரிவான விபரங்களுக்கு www.australiaawards.gov.au
இதர உதவித்தொகை திட்டங்கள்
IELTS SCHOLARSHIPS
ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட நாடுகளில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை ரூ.3 லட்சம் மதிப்பிலானது மற்றும் டியூஷன் கட்டணத்தை ஈடுசெய்வதற்கானது இது.
மேலதிக விபரங்களுக்கு www.britishcouncil.in/exam/ielts/scholarships
TOEFL SCHOLARSHIPS
நல்ல அகடமிக் செயல்பாடும், சிறந்த ஆங்கில புலமையும் உடையவர்களுக்காக, ETS -ஆல் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவிற்காக 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய 20 உதவித்தொகைகளும், 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒரு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
விரிவான விபரங்களை அறிய www.ets.org/toefl/scholarships.

நன்றி : தினமலர் - கல்வி மலர் - 03.06.2016