disalbe Right click

Wednesday, October 5, 2016

பழைய நிறுவனத்தின் மாற்றப்படாத பி.எஃப் கணக்கு!


 பழைய நிறுவனத்தின் மாற்றப்படாத பி.எஃப் கணக்கு!
என்ன செய்ய வேண்டும்?

மாத சம்பளம் வாங்கும் ஊழியரா நீங்கள், பல நிறுவனங்களில் பணி புரிந்தும் உங்கள் பிஎப் கணக்கை புதிய நிறுவனத்தின் பிஎப் கணக்குடன் இணைக்கவில்லையா?

அப்படியானால் அதுவும் நல்லது தான். 

நம்மில் பலர் பிஎப் கணக்கை மாற்றம் செய்து கொள்வது மற்றும் கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெறுவது பெறும் சிரமம் என்று நினைக்கின்றனர்.

நீங்கள் பிஎப் கணக்கை இன்னும் மாற்றவில்லை மற்றும் திரும்பப் பெறவில்லை என்றால் பின் வருவனவற்றைக் கண்டிப்பாக படியுங்கள். 

இங்கு நாம் பிஎப் கணக்கை எப்படி புதிய நிறுவனத்திடன் இணைப்பது? மற்றும் பிஎப் கணக்கில் உள்ள பணத்திற்கு எப்படி உரிமைகோருவது என்று இங்கு பார்ப்போம்.

செயலற்ற கணக்கு 

நீங்கள் மூன்று வருடத்திற்கு மேல் உங்கள் பிஎப் கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால் அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு வட்டி ஏதும் கிடைக்காது. 

கணக்கைச் செயல்படுத்தாமல் இருப்பது மற்றும் பணத்தை அதிக வட்டிக்காக எடுக்காமல் விடுவது போன்ற காரணங்களுக்காக இது போன்ற செயல்படாத கணக்குகளுக்கு வட்டி அளிப்பதை 2011 ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு நிறுத்திவிட்டது.  

இரட்டிப்பு லாபம் வீணாகிவிடும் 

ஒரு வேலை உங்கள் பிஎப் கணக்கில் 1 லட்சம் இருந்தால் 10 வருடம் வரை நீங்கள் எடுக்காமல் இருந்தால் 8.5 சதவீதம் வட்டி விகதத்திற்கு அப்படியே இரட்டிப்பாகி 2.26 லட்சம் வரை நீங்கள் பெற இயலும். 

அதுவே இது போன்று செயல்படாத கணக்கில் வைத்திருந்தால் உங்களால் லாபம் ஏதும் ஈட்ட இயலாது.

யுனிவர்சல் கணக்கு எண் 

நிறுவனம் மாறி வேலைக்குச் சேர்ந்தவுடன் உங்களிடம் பழைய நிறுவனத்தின் யுனிவர்சல் கணக்கு எண்(UAN) வைத்திருந்தால் உடனே அந்த எண்ணை உங்கள் புதிய நிறுவனத்தில் நீங்கள் அளிப்பதன் மூலம் அளிதாக உங்கள் பழைய பிஎப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்

ஆன்லைன், ஆப்லைன் முறைகள் 

புதிய நிறுவனத்தில் வேளைக்குச் சேரும் போது ஆன்லைன், ஆப்லைன் என இருவழியாகவும் பிஎப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

 ஆன்லைன் மூலம் மாற்ற உங்கள் பழைய நிறுவனம் பிஎப் அலுவலகத்தில் டிஜிட்டல் கையொப்பத்தைச் சமர்ப்பித்து இருத்தல் வேண்டும். 

ஆப்லைன் முறையில் மாற்றும் போது உங்களது புதிய நிறுவனம் பழைய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அதற்கான பணிகளைச் செய்யும்.

உரிமைகோரல்

 ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து இரண்டு மாதங்கள் நீங்கள் பணியை தொடராமல் இருந்தால் நீங்கள் படிவம் 19-ஐ பயன்படுத்தி பணத்திற்கான உரிமைகோரலாம். 

இதற்கான படிவத்திதை ஈபிஎப்ஓ(EPFO) இணையதளத்தில் இருந்து பதிறக்கி கொள்ளலாம்.

10 சதவீதம் டிடிஎஸ்

 நிறுவனத்தில் ஐந்து வருடம் தொடர்ந்து பணி புரியாமல் 50,000 ரூபாய்க்கு மேல் இருந்து பணத்திற்கான உரிமை கோரும் போது 10 சதவீதம் வரை டிடிஎஸ்(TDS) கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதுவே ஐந்து வருடத்திற்கு மேற்பட்டு நீங்கல் பணி புரிந்து இருந்தால் வரி செலுத்த தேவை இல்லை.

------------------------------------------------------------------------------------------------------------தமிழரசு

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் - 28.09.2016

Tuesday, October 4, 2016

உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா


உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா - என்ன செய்ய வேண்டும்?

ரகசிய காமிராவை  கண்டுபிடிப்பது எப்படி?
ஹோட்டல் அறை, உடை மாற்றும் அறைகளில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது ஆள் காட்டி விரலை வைக்க வேண்டும். இப்போது விரல் நுனிக்கும், கண்ணாடி பிம்பத்தில் தெரியும் பிம்ப ஆள்காட்டி விரல் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி. இல்லையேல், அது கண்ணாடிக்கு பின்னால் இருந்தும் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘இரு பக்க’ கண்ணாடியாகும். கண்ணாடிக்கு பின்னால் இருந்துகொண்டு அறையில் நடப்பதை பார்க்க முடியும்.

*

ஹோட்டல்களில் தங்கும் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைக்க வேண்டும். பின்னர், அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுக்க வேண்டும். தொடர்ந்து அதை ஓடவிட்டுப் பார்த்தால் எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் அங்கு ரகசிய கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.

*

செல்போனில் யாரிடமாவது பேசியபடி அறை முழுவதும் மெதுவாக நடக்க வேண்டும். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்பது உறுதி.

*

விளக்குகளை அணைத்து விட்டு கண்ணாடி மீது டார்ச் அடித்துப் பார்த்தால், பின்னால் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியலாம்.

பல வடிவங்களில்
ரகசிய கேமராக்கள் கதவு கைப்பிடி, கடிகாரம், சுவிட்ச், சுவிட்ச் போர்டு, பல வகை லைட் வடிவம், அலங்கார விளக்கு, பொம்மை, குளியல் அறை லைட், ஷவர், வாட்டர் ஹீட்டர், பூந்தொட்டி, திரைச் சீலை, வரவேற்பறை மாடல்கள், போர்டுகள் என எந்த வடிவங்களிலும் இருக்கலாம்.

உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை!

ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வணிக வளாகங் கள் உட்பட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இவை எல்லோருக்கும் தெரியும் வகையில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் சிலர் உளவு பார்ப்பதற்காகவோ, வக்கிர எண்ணங்களுடனோ ரகசிய கேமராக்களை பொருத்தியி ருப்பார்கள். சில ஜவுளிக் கடைகளின் உடை மாற்றும் அறை, ஹோட்டல்களின் படுக்கை அறை, தங்கும் விடுதிகளின் குளியல் அறைகளில் ரகசிய கேமராக்கள் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன் கோவாவில் ஜவுளிக் கடை ஒன்றுக்கு சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அங்கு உடை மாற்றச் சென்றபோது அங்கு ரகசிய கேமரா இருந்ததை கண்டுபிடித்தார்.

இதேபோல் ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் இணைய தளங் களில் வைரலாக இன்னும் உல வுகின்றன. எனவே ஜவுளிக்கடை, தங்கும் விடுதி, ஹோட்டல் ஆகியவற்றுக்கு செல்பவர்கள் உஷாராக இருக்கும் படி சென்னை காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, தியாகராய நகர் உதவி ஆணையர் ராதா கிருஷ்ணன் கூறும்போது, “சட்ட விரோதமாக ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டி ருந்தால் புகார் தெரிவிக்கலாம். உள் நோக்கத்தோடு ரகசிய கேமரா பொருத்தி வாடிக்கையாளர்கள், பணியாளர்களை படம் பிடித்தால் சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை, தங்கும் விடுதி, ஹோட்டல்கள் ஆகியவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 05.10.2016

ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்றால் என்ன?


ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்றால் என்ன? - என்ன செய்ய வேண்டும்?

''ஜீரோ எஃப்ஐஆர் என்றால் என்னன்னு தெரியுமா?

பொதுவாக, ஒரு குற்றம் தொடர்பான புகார் குறித்து பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையான எஃப்ஐஆர் (FIR-First Information Record) ஆனது. சம்பவம் நடந்த ஏரியாவின் சட்ட எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில்தான் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆனால் பெண்களைப் பொருத்தவரை, ஆபத்து நேரங்களில் அவர்கள் எந்தக் காவல் நிலையத்திலும் FIR புகாரைப் பதிவு செய்யலாம்.
அது ஜீரோ எஃப்ஐஆர்(Zero FIR)ஆகப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சம்பவம் நடந்த இடத்தின் அடிப்படையில் அது எந்தக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமோ அங்கு மாற்றப்பட்டு, அந்தப் புகார் விசாரிக்கப்படும்.

பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள்


பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் -  என்ன செய்ய வேண்டும்?

இந்தியப் பெண்களுக்குக் கைகொடுக்கும் கூரான சட்ட ஆயுதம், இந்த இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு - 354 ஆகும். வெளியிடத்தில் மட்டுமல்ல, வீட்டிலும்கூட ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமான வார்த்தைகள் தாக்குதலோ அல்லது உடல் ரீதியான தாக்குதலோ நிகழ்த்தும் எவரின் மீதும், இந்தச் சட்டத்தின் கீழ் பெண்கள் புகார் அளிக்கலாம்.

குற்ற விசாரணைச் சட்டம், பிரிவு 164


Cr.P.C. section : 164 - என்ன செய்ய வேண்டும்?

குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒப்புதல் வாங்க முற்படுகின்ற போது நடுவரானவர், குற்ற விசாரணைச் சட்டம், பிரிவு 164ன்படி, குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் கீழ்கண்டவற்றை தெரிவிக்க வேண்டும்.
# தாங்கள் என்னிடத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க கட்டுப்பட்டவர் அல்ல.
# தாங்கள் கொடுக்கின்ற ஒப்புதல் வாக்குமூலமானது தங்களுக்கு எதிராக சாட்சியமாக பயன்படுத்தக்கூடியது.
மேலும், யாருடைய வற்புறுத்தலுமின்றி ஷை ஒப்புதல் வாக்குமூலமானது குற்றஞ்சாட்டப்பட்டவரால் தன்னிச்சையாகவே கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் மேற்கண்ட விஷயங்களை தன்முன்னால் குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு படித்துக் கட்டப்பட்டு அவரால் ஒத்துக் கொள்ளப்பட்டது என்பதையும் நடுவர் ஷை வாக்குமூலத்தின் அடியில் குறிப்பிட வேண்டும்.

Monday, October 3, 2016

முதல் சந்திப்பிலேயே பிறரை கவர்வதற்கு


முதல் சந்திப்பிலேயே பிறரை கவர்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதல்முறையா ஒருவரை சந்திக்கும்போதே இம்பரஸ் பண்ணுற மாதிரி நடந்துக்கணும்னு சொல்லுவாங்க. 

பெரும்பாலும்  'மூணு நிமிஷத்துல இருந்து 5 நிமிஷம் வரைதான் முதல்முறையா ஒருவர் கூட சந்திச்சு பேசும் சூழல் உருவாகும். 

அதுக்குள்ள எப்படிங்க இம்பரஸ்னு கேட்குறீங்களா? 

உங்களுக்கு ஹெல்ப் பண்ணதான் இந்த 5 பாயிண்ட்ஸ். படிங்க இம்பரஸ் பண்ணுங்க. 


5. மீட்டிங்க்கு ரெடி ஆகுங்க : 

ஆபிஸ் கான்பரன்ஸ், ப்ரெண்ட்ஸ் பார்ட்டி, இன்டர்வியூனு இப்படிப்பட்ட இடங்களில் தான் புதுபுது நபர்களை சந்திப்போம். 

முன்னாடியே இந்த நபரைதான் மீட் பண்ணப்போறீங்கன்னு தெரிந்தால், அவரை பத்தி சில பேசிக்கான விஷயங்களை தெரிஞ்சுட்டுப் போங்க. 

அவர் கூட என்ன பேசப்போறோம்னு மனசுக்குள்ளயே சின்னதாக டிரைலர் ஓட்டிப்பார்த்து கொஞ்சம் ரெடி ஆகுங்க.  

ஃபர்ஸ்ட் டைம் பேசும்போதே, அவரை பற்றி தெரிந்திருப்பதால், 'பரவாயில்லையே. நம்மளை பற்றி தெரிஞ்சு வைச்சு இருக்காறே'னு ஒரு சின்ன இம்பரஷன் கிடைக்கும். 

'அட, என் நண்பரோட, நண்பரைதான் பார்க்கப் போறேன். இதுக்கு எல்லாம் எதுக்கு ரெடி ஆகணும்னு நினைக்காதீங்க.  

யாருன்னே தெரியாது... அப்பதான் திடீர்னு ஒருவரை மீட் பண்ணுறீங்கன்னா... உங்களை பற்றி சுருக்கமா செல்ப் இன்ட்ரோ கொடுத்து, அவரை பத்தியும் கேட்டு தெரிஞ்சுக்கோங்க. 

4. உடையில் கவனம் : 

உங்க அறிவு, திறமை எல்லாம் உங்களை சந்திக்க வந்த நபருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. 

உங்களது உடையின் மீதும், முகத்தின் மீதும்தான் அவரது கவனம் இருக்கும். அதனால், உடையில் எப்போதும் கவனம் செலுத்துங்கள். 

சாதாரண டி-ஷர்ட் அணிந்தால் கூட அதில் ஒரு டீசன்ட் லுக் இருக்கணும் என்பதை மறக்காதீங்க. 

முகத்தை கொஞ்சம் ப்ரெஷாக வைச்சுக்கோங்க. அதுக்குனு மாடல் மாதிரி இருக்கணும்னு அவசியம் கிடையாது. 

ஜென் Z பசங்க போல, தலை முடியை கலைத்து சீவினாலும்... அதையும் ஸ்டைலா வைச்சுக்கோங்க. 

பிஞ்சு போன செப்பலையே தொடந்து பயன்படுத்துறது, பாலிஸ் பண்னாத ஷூ-வை போடுவதை எல்லாம் தவிர்த்துடுங்க. 

உங்க உடலும், உடையும் தான் முதல் இம்பரஷன். ஆபிஸ், பார்ட்டினு அதுக்கு தகுந்த மாதிரி டிரஸ் பண்ணுங்க. இம்பரஸ் செய்யுங்க. இதில்தான் நீங்க யார்னு தெரிஞ்சுப்பாங்க. 

3. பாடிலேங்குவேஜ் : 

உடல்மொழிக்கு நீங்க பேசுற மொழியை விட வலிமை அதிகம். முதலில் சந்திச்சதும், ஜென்டிலா ஸ்மைல் பண்ணி கான்பிடென்டா கைகொடுத்து வெல்கம் பண்ணுங்க. 

நீங்க பெண்ணாக இருந்தால், நீங்கதான் முதல்ல கையை நீட்டணும். 

'நாம கை நீட்டி அவங்க கொடுக்காம போய்ட்டா, என்ன பண்ணுறது?'னு சில ஆண்களிடம் சின்ன தயக்கம் உண்டு. 

இல்லைன்னா, சிம்பிளா 'வணக்கம்' சொல்லுங்க. 

அடுத்து அவங்க பேசும்போது அவங்க கண்ணை பார்த்து கவனமா கேளுங்க. இதுதான் அவங்க பேசுறதுக்கு நீங்க எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்கனு புரிய வைக்கும். 

ஸ்டைலா சுவத்துல சாஞ்சுட்டோ, போனை நோண்டிட்டோ, நகத்தை கடிச்சுட்டோ, தலைமுடி கூட விளையாட்டிட்டோ பேசுறதையோ தவிர்த்துடுங்க. 

சிலர், அவரை விட பெரிய நபரை சந்தித்தால் எதுக்குனே தெரியாம பதட்டபட ஆரம்பிச்சுடுவாங்க. பதட்டப்படாதீங்க.

 'என்ன பண்ணாலும் பதட்டப்படாம இருக்க முடியலை'னு சொன்னால், வடிவேலு மாதிரி பதட்டதையும், பயத்தையும் முகத்துக்கு கொண்டு வராமல் பேஸ்மென்ட்லயே வைச்சுக்கோங்க. ஸ்மைலிங் ஃபேஸோட பேசுங்க. 

2. கண்ணியமா பேசுங்க :

முதல்முறையா பேசும்போது திக்கி திணறி பேசாமல், நிறுத்தி தெளிவா பேசுங்க. குரலை அதிகம் உயர்த்தியோ, 'நான் யார் தெரியுமா?' என்ற தோரணையில் பேசாதீங்க. 

அதுபோல, உங்க சாதனை பட்டியலை அந்த 5 நிமிஷத்துல சொல்லி முடிச்சடணும்னு நினைச்சு படபடவென அடுக்காதீங்க. 

நீங்க குறைவா பேசுங்க. அவரை அதிகம் பேச விடுங்க. 

உங்களை பத்திதான் உங்களுக்கு தெரியுமே. அவரை பத்திதானே நாம தெரிஞ்சுக்கணும் என்ற மனநிலையில் இருங்க. 

உங்க சொந்த கதைகளை எல்லாம் ஃபர்ஸ்ட் மீட்லேயே சொல்லாதீங்க.

1. 'மகிழ்ச்சி'னு சொல்லுங்க : 

உங்களுக்கு அவர் போன் நம்பர் தேவைப்பட்டால், பேசி முடிச்சதும் நம்பர் கேளுங்க. 

உங்க விசிட்டிங் கார்டு, இ-மெயில் ஐடி கொடுங்க.

 நடுவுல ஏதாவது சொல்லிட்டு இருக்கும்போதே 'உங்க நம்பர் கொடுங்களேன்'னு கேட்காதீங்க. 

அவர் முதல்முறை நம்பர் சொல்லும்போதே கவனமா நோட் பண்ணிக்கோங்க. 

திரும்ப திரும்ப நம்பரை சொல்ல வைக்காதீங்க. 

இதுல நீங்க எவ்வளவு கவனமான ஆளுனு புரிஞ்சுப்பாங்க. 

உங்க நம்பரை சேவ் பண்ணுறதுக்கு அவர்கிட்ட மிஸ்டு கால் விடுவதற்கு பதிலா, 'உங்களை சந்திச்சதில் மகிழ்ச்சி'னு உங்க பேரு போட்டு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிடுங்க. 

அவர் உங்க நம்பரை சேவ் பண்ண மறந்தாலும், நீங்க அனுப்பின மெசேஜை வைச்சு மீண்டும் உங்களை தொடர்பு கொள்ள வசதியா இருக்கும். 

மீட்டிங் முடிந்ததும் கை கொடுத்து விடைபெறுங்க. 'தாங்க் யூ... மகிழ்ச்சி'னு ரஜினி ஸ்டைலில் சொல்லுங்க. 

இனி என்னங்க 'First impression is the best impression'னு கெத்து காட்டுங்க

நன்றி : விகடன் செய்திகள் - (20/09/2016)

ஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார்


ஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?

நீங்கள், ஒரு நுகர்வோர் எனில் ஒரு பிராண்ட்- இன் தயாரிப்புப் பொருட்கள், அல்லது சேவையின் தரம் பற்றி உங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், நீங்கள் ஒரு நுகர்வோர் புகார் தாக்கல் செய்து அதைச் சரி செய்ய முடியும். 

ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைப் பொறுத்து ஒரு நுகர்வோர் பல்வேறு வகையான புகார்களைத் தாக்கல் செய்ய இயலும். 

ஒரு நுகர்வோருக்குப் பிரச்சனைகள் இருந்தால், அவர் அந்தப் பிரச்சனை சம்பந்தப்பட்ட தேவையான ஆவணங்களுடன் ஒரு நுகர்வோர் நீதிமன்றம் சென்று அவருடைய பிரச்சனைகளைப் பதிவு செய்யலாம். 

இது தான் தற்பொழுது இருக்கும் நடைமுறை. 

இதற்கு மாற்றாக, நுகர்வோராகிய நீங்கள் ஒரு நுகர்வோர் புகாரை இணைய மூலமும் பதிவிட இயலும்.

 இணைய மூலம் உங்களுடைய பிரச்சனைகளைப் பதிவிடப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வலைத்தளம் அரசாங்கம், நுகர்வோர் ஆன்லைன் ஆதார மற்றும் அதிகாரமளித்தல் மையம் (http://consumerhelpline.gov.in/) என அழைக்கப்படும் ஒரு வலைத்தளத்தை நடத்தி வருகின்றது. 

இது ஒரு நுகர்வோர் புகார் மற்றும் குறைகளை நிவர்த்திச் செய்யும் மையம் ஆகும். இது நுகர்வோர் ஒருங்கிணைப்புக் கவுன்சிலால் நடத்தப்படுகின்றது. இதற்கு இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆதரவு வழங்குகின்றது.   

பதிவு புகார் கொடுக்க விரும்பும் நுகர்வோர், முதலில் இந்தத் தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்த வலைத்தளத்தில் உள்ள ஆன்லைன் பதிவு படிவத்தில் நுகர்வோரின் பெயர், மின்னஞ்சல், முகவரி மற்றும் தொலைப்பேசி எண் போன்ற விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 

அதன் பிறகு அவருக்கு உரியப் பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொல் உருவாக்கப்படும். புகார் பதிவு ஒரு நுகர்வோர், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு பிராண்ட் அல்லது சேவைக்கும் எதிராகப் புகார் தெரிவிக்க இயலும். ஆன்லைன் புகார் அமைப்பு வலைத்தளத்தில் பல்வேறு துறைகள், பிராண்டுகள், மற்றும் சேவைகளை உள்ளடக்கிய ஒரு மெனு உள்ளது. 

அதைப் பயன்படுத்தி ஒரு நுகர்வோர் தன்னுடைய புகாரைப் பதிவு செய்யலாம். செயல்முறை புகாரின் தன்மை, அந்தப் புகாருடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் ஆகியவற்றை அந்தத் தளத்தில் பதிவேற்ற வேண்டும். 

புகாரின் விளைவுகள் மற்றும் நுகர்வோர் கோரும் நிவாரணம் போன்றவற்றையும் அந்தத் தளத்திலேயே பதிவிடலாம். 

புகாரின் தற்பொழுது நிலைமை புகார் சமர்ப்பிக்கப்பட்ட பின் அந்தப் புகாருக்கு உரிய எண் மின்னணு முறையில் உருவாக்கப்பட்டு அந்தப் புகாருக்கு ஒதுக்கப்படும். 

அந்தப் புகார் தீர்க்கப்படும் வரை, புகாருக்கு உரிய எண்ணைப் பயன்படுத்தி அந்தப் புகாரின் நிலையைக் கண்காணிக்க இயலும்.      

Written by: திரு Batri Krishnan

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 03.10.2016



Friday, September 30, 2016

டிஜிலாக்கர் - வாகன ஓட்டிகளுக்கான வரப்பிரசாதம்!

DIJI LOCKER - என்ன செய்ய வேண்டும்?
டிஜிலாக்கர் - வாகன ஓட்டிகளுக்கான வரப்பிரசாதம்!
டூவீலரில் போகும் போது ஹெல்மெட் போடுவது போல, வாகனங்களுக்கான ஆவணங்களைக் கைவசம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் படும் அவஸ்தைகளைச் சொல்லி மாளாது. 
அப்பப்பா...காரில் செல்வோர் டேஷ்போர்டில் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்லலாம் என்றாலும், தப்பித்தவறி அதை மறந்துவிட்டுச் செலும்போதுதான் பிரச்னைகள் ரவுண்டு கட்டி அடிக்கும். அதையெல்லாம் சமாளித்துவிட்டு போகக்கூடிய பக்குவம் வேண்டும்.
இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், இந்த ஆவணங்களைப் பராமரிக்க தனி கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. என்னதான் டேங்க் கவரில் வைத்துச் சென்றாலும், தவிர்க்க முடியாத மழை மற்றும் வாட்டர் சர்வீஸ் செய்யும்போதும், அவை நனைந்து வெறும் வெள்ளை பேப்பா் மட்டுமே மீதம் இருக்கும். அதில் இருந்தது எல்லாம் ஜி-பும்-பா ஆகி இருக்கும். 
வாகன தணிக்கையின்போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால், என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஒரு அசத்தலான தீர்வை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. அது என்னனு கேட்கிறீங்களா மக்கழே! டிஜிலாக்கர் என்று அழைக்கப்படும் இந்த மின்னணு ஆவண பாதுகாப்பு பெட்டகம், 
தற்போது மொபைல் அப்ளிகேஷன் வடிவத்தில், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும் விதத்தில் களமிறங்கியுள்ளது.  இந்த வசதி மூலமாக, இனி வரும் நாட்களில் அரசு துறைகளில் காகிதமில்லா ஆவண புரட்சி வித்திடும் என்று கருதப்படுகிறது. 
ஆன்லைனில் நமது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் தொழில்நுட்பம்தான் இந்த டிஜிலாக்கர். கூகுள் டிரைவ் போன்ற இந்த வசதி தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. 
எனவே, இது மிகவும் நம்பகமான ஆவண பாதுகாப்பு முறை. மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் தனிநபர் சான்றுகள், ஆவணங்களை இந்த டிஜிலாக்கர் மூலமாகவே நேரடியாகப் பெற முடியும். 
இதன்மூலமாக, டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், வாகன பதிவு ஆவணம் போன்றவற்றை எளிதாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர இதிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக இந்த வசதி, வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று உறுதியாகக் கூற முடியும். ஏனெனில் வாகன ஓட்டிகள் ஆவணங்களைப் பாதுகாக்க மற்றும் பராமரிப்பதில் இருக்கும் நடைமுறை சிரமங்களை இந்த டிஜிலாக்கர் முற்றிலும் ஒழித்துவிடும்.
மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது பயன்பாட்டுக்கு வரும்போது கார், பைக்கில் செல்லும்போது இனி காகித ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
வாகன தணிக்கையின்போது, உங்களது மொபைல்போனில் இருக்கும் டிஜிலாக்கர் செயலி மூலமாகவே ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை சம்பந்தப்பட்ட தணிக்கை அதிகாரியிடம் காட்டலாம். 
உங்களது ஆவணங்களை அதிகாரி சரிபார்த்தபின், அந்த ஆவணங்களை நீங்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும். இயற்கை சீற்றங்கள், ஆவணங்கள் காணாமல் போகும் பிரச்னைகளுக்கும் இது சிறப்பானதொரு தீர்வாக அமையும்.
இதேபோன்று, சாலை விதிமுறைகளை மீறுவோர்க்கும் இந்த செயலி மூலமாகவே தகவல் அளித்து, அபராதத்தை செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. 
இந்த டிஜிலாக்கரை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்களது மொபைல்போன் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து, எளிமையாகக் கணக்கை துவங்கிக் கொள்ளலாம்.
 டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் என்றில்லை, இதர அரசு ஆவணங்களை பெறுவதற்கும், தற்போதுள்ள ஆவணங்களை ஸ்கேனர் கருவி மூலமாக, சுய கையொப்ப அத்தாட்சியுடன் நீங்களே இதில் பதிவேற்றி பாதுகாக்கும் வசதியும் அளிக்கப்படும்.
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பெற முடியும். 
தெலங்கானா மற்றும் டெல்லியில் இந்த வசதி முதலில் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், ஹேக்கர்கள் மூலமாக தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதுதான், இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
செய்தி - .சஷஃபியுல்லா (மாணவப் பத்திரிகையாளர்)
நன்றி : நாணயம் விகடன் - 20.09.2016  

EMI லாபமா? நஷ்டமா?


EMI லாபமா? நஷ்டமா? - என்ன செய்ய வேண்டும்?

கன்ஸ்யூமர் ஸ்பெஷல்
இஎம்ஐ கடன் மூலம் நாம் பல்வேறு பொருட்களை வாங்குகிறோம். இஎம்ஐயில் பர்சனல் லோனையோ, கன்ஷுயூமர் லோனையோ வாங்குவது தவறல்ல. அந்தக் கடனை வாங்கும்முன் அது நம் முன்னேற்றத்துக்கு பயன்படுமா என்று பார்ப்பது முக்கியம்.

பொதுவாக தனிநபர் கடன், நுகர்வோர் கடனுக்கு 14% முதல் 22% வட்டி வசூலிக்கப்படுகிறது.

ஆண்டுக்கு 14% வட்டியில், ஒரு நுகர்வோர் ரூ.3 லட்சம் கடன் வாங்கி அதனை 3 வருடங்களில் திரும்பச் செலுத்தினால், இஎம்ஐ-ஆக ரூ.10,255 கட்டவேண்டும். 

வட்டிக்கு மட்டும் ரூ.69,200-ஆக செல்லும். இதுவே 22 சதவிகித வட்டிக்கு தனிநபர் கடன் என்றால், வட்டிக்கு செல்வதோ ரூ.1.12 லட்சம். 

வாங்கிய கடனோ ரூ.3 லட்சம் ரூபாய்தான்.

சில உதாரணங்கள் மூலம் பார்த்தால், இன்னும் தெளிவாக இருக்கும். உதாரணத்துக்கு, 

ரூ. 3 லட்சம் ரூபாய்க்கு ஒருவர் தங்க நெக்லஸ் வாங்கியதாக வைத்துக்கொள்வோம். அவர் நகை வாங்கும்போதே குறைந்தது 15 – 20% செய்கூலி, சேதாரம் போய்விடும். இந்த நகையை பர்சனல் லோன் வாங்கி, அதன் மூலம் வாங்கி இருந்தால், அதற்கான வட்டி 22% மற்றும் சேதாரம் 20% சேர்ந்து மொத்தம் 42%  போய்விடும். 

தங்கத்தின் விலை 42% அதிகரித்து இருந்தால் மட்டுமே இஎம்ஐ மூலம் வாங்கும் கடன் நமக்கு லாபம் அளிக்கும். 


இதேபோல்தான் இஎம்ஐ மூலம் தனிநபர் கடன் வாங்கி, நிலத்தில் முதலீடு செய்வதும். மனை வாங்கும்போது பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் 8%, தரகர் கட்டணம் 2% என குறைந்தது 10% செலவு ஆகிவிடும். 

இதனை தனிநபர் கடன் 22% வட்டியில் வாங்கி இருந்தால், மூன்றாண்டு கழித்து விற்பதாக இருந்தால் மனை விலை 32 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருந்தால் மட்டுமே லாபம். 

எனவே, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே இஎம்ஐ -ல் கடன் வாங்கலாம். இல்லை என்றால் கடன் வாங்குவது கூடாது. அதிலும் இஎம்ஐ-ல் கடன் வாங்குவது கூடாது. 

மேலே குறிப்பிட்டதுபோல, இஎம்ஐ கடன் பெற்று, அந்தக் கடனுக்காக மாதம்தோறும் (அதாவது, 36 மாதங்களுக்கு) வட்டியாக ரூ.10,000 அல்லது ரூ.15,000 (வட்டி விகிதத்துக்கேற்ப  செலுத்தும் திறனுடைய ஒருவர் ஏன் அந்த  இஎம்ஐ தொகையை முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு பொருட்களை வாங்கிக் கொள்ளக்கூடாது? 

இதற்கு ஒருவர் செய்ய வேண்டிய தியாகம், குறிப்பிட்ட அந்தப் பொருளை சில ஆண்டுகள் கழித்துப் பயன்படுத்துவதுதான். 

குறிப்பிட்ட அந்தப் பொருள் (தங்க ஆபரணம், பெரிய அளவு டிவி, வாஷிங் மெஷின், டைனிங் டேபிள், ஃப்ரிட்ஜ்) இல்லாமல் வாழப் பழகி இருக்கும் ஒருவரால் இன்னும் சில ஆண்டுகள் அது இல்லாமல் இருக்க முடியாதா?

   
இஎம்ஐ-ல் பொருள்கள் வாங்கு வதற்கு பதில் அதற்கான தொகையை மாதா மாதம் முதலீடு செய்து, வாங்கினால் எவ்வளவு லாபம் என்று பார்ப்போம். 

ஒருவர் மாதம் ரூ.10,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு ஈக்விட்டி பேலன்ஸ்டு ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். 

இந்த ஃபண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 12% வருமானம் கிடைப்பதாக வைத்துக்கொண்டால், முதலீடு செய்த தொகை ரூ.3.6 லட்சம். 

3 ஆண்டுகளில் இது ரூ.4.4 லட்சமாகப் பெருகி இருக்கும். அதாவது, லாபம் மட்டும் ரூ.75,000.  

இஎம்ஐ கடன், முதலீடு இந்த இரண்டில் எது பெஸ்ட் என்பதை ஆராய்ந்தால், இஎம்ஐ கடன் லாபமல்ல என்பது தெளிவாக விளங்கும்!

சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com.

நன்றி : நாணயம் விகடன் - 02.10.2016

பெண்குழந்தை - அரசு நிதியுதவி பெற


பெண்குழந்தை - அரசு நிதியுதவி பெற என்ன செய்ய வேண்டும்?

பெண் குழந்தைக்கு அரசு நிதியுதவி - A- Z தகவல்கள்!

பெண் குழந்தை பிறந்தால் அதை சுணக்கத்தோடு வரவேற்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். படிப்பு, கல்யாண செலவு என்று உடனே மனதில் பெரிய லிஸ்ட் போட ஆரம்பித்துவிடுவார்கள்.  

இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்துவிட்டால், பெற்றோர் கலங்கித்தான் போய்விடுகிறார்கள். 

பெண் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. 

அதில் முக்கியமானது சிவகாமி அம்மையார் நினைவுப் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம். இதன் மூலம் அரசு வழங்கும் நிதியான 50 ஆயிரம் ரூபாயைப்  பெற எப்படி விண்ணப்பிப்பது, யாரை அணுக வேண்டும்?

விண்ணப்பம்

சிவகாமி அம்மையார் நினைவு பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கான, விண்ணப்பம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெறலாம். 

அல்லது

http://cms.tn.gov.in/sites/default/files/forms/socialwelfareschemes.pdf 

என்ற இணையதள முகவரியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்படிவத்தை பூர்த்தி செய்து, மாவட்ட சமூக நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும். 

நிதி விவரம்

ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின், அந்தக் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்பீடாக 50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் எனில் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூபாய் 25 ஆயிரமும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யப்படும்

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பெண் குழந்தைகள், 1.8.2011 க்கு பிறகு பிறந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். 

குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். 

ஆண் குழந்தை இருக்கக் கூடாது. 

பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளவும் கூடாது. 

பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.

இணைக்க வேண்டியவை

குடும்ப அட்டை, 

வருமானச் சான்று, 

சாதி சான்று, 

பெற்றோரின் வயதுச்சான்று, 

கருத்தடை அறுவை சிகிச்சை சான்று, 

குழந்தைகளின் பிறப்புச்சான்று (பெயர்களுடன்), 

குடும்பப் புகைப்படம்- 1, 

ஆண் வாரிசு இல்லை என, வட்டாட்சியர் வழங்கும் உறுதிச்சான்று, 

இருப்பிடச் சான்று 
(விண்ணப்பத்தாரர் 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வசிப்பவர் என்று, வட்டாட்சியர் குறிப்பிட்டு வழங்குவது)

குறிப்பு

எந்தக் குழந்தையின் பெயரில் அரசு, தொகையை முதலீடு செய்ததோ அந்தக் குழந்தை 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே இறுதி முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படும். 

அவ்வாறு இல்லையெனில் வட்டியுடன் வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.

தகுதி

விண்ணப்பிக்கும் பெற்றோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.

மேலும் அதிக தகவலுக்கு

மேலதிக தகவல்களுக்கு உங்கள் மாவட்ட சமூகநலத் துறையை அணுகவும்.

- -----------------------------------------------------------------------------------------சு.சூர்யா கோமதி.

நன்றி : விகடன் செய்திகள் - 29.09.2016

Thursday, September 29, 2016

ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்


ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் - என்ன செய்ய வேண்டும்?

ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் உறுதிமொழி ஆவணத்தில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பமின்றி, சுய உறுதிமொழி அளித்தால் போதுமானது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப். 26 தொடங்கி அக். 3 வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை நடைபெறுகிறது. 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவுடன், உறுதிமொழி ஆவணம் மற்றும் ரூ. 20-க்கான பத்திரத்தில் நோட்டரி பப்ளிக் (சான்று உறுதி அலுவலர்) சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

உறுதிமொழி ஆவணத்தில் பகுதி ‘அ’வில் வேட்பாளரின் விவரம், நிரந்தரக் கணக்கு எண் (பான்), வேட்பாளரின் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா, தண்டனை ஏதும் பெற்றுள்ளாரா?, வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்துகள் விவரம், தொழில், கல்வித் தகுதிகள் என 10 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. 

அடுத்து பகுதி ‘ஆ’ வில், பகுதி ‘அ’ வில் குறிப்பிடப்பட்ட 1 முதல் 10 வரையிலான விவரங்களின் சுருக்கம் இடம் பெற்றுள்ளது.

கடைசியாக பக்கம் 10-ல் வேட்பாளரும், சான்றுறுதி அலுவலரும் கையொப்பமிட வேண்டும்.

இந்த தேர்தலில், புதிய நடைமுறையாக நோட்டரி பப்ளிக் அல்லது முதல்நிலை குற்றவியல் நீதிபதி மட்டுமல்லாது, உறுதிமொழி ஆணையரும் (வழக்கறிஞர்களில் உறுதிமொழி ஆணையராக பதிவு செய்துள்ளவர்கள்) சான்றளிக்கலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் உறுதிமொழி ஆவணத்தில் புகைப்படம் ஒட்டும் நடைமுறையையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் வேட்பாளர்கள் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது. மனுக்கள் திரும்பப் பெறுவது போன்ற செயல்களில் வேட்பாளரோ அல்லது அவரது அங்கீகாரம் பெற்றவரோ எளிதில் அடையாளம் காண முடியும். 

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மனு வாபஸ் பெறும் நடைமுறைகளில் பிரச்சினையின்றி திடமான முடிவுகளை எடுக்க முடியும்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்கும்போது, நோட்டரி பப்ளிக் அல்லது உறுதிமொழி ஆணையர் அல்லது முதல்நிலை குற்றவியல் நீதிபதியிடம் சான்று பெறத் தேவையில்லை. 

ரூ.20-க்கான பத்திரத்தில் வேட்பாளரே சுய உறுதிமொழி அளித்தால் போதுமானது என்ற நடைமுறையையும் மாநில தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடு பவர்கள் சான்றொப்பம் பெற பணம் செலவு செய்யத் தேவையில்லை என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 29.09.2016

Wednesday, September 28, 2016

சி டி சி என்றால் என்ன?


சி டி சி என்றால் என்ன - என்ன செய்ய வேண்டும்?

மாதச்சம்பளத்தில் குறிப்பிடும் CTC என்றால் என்ன என்று தெரியுமா?

நீங்கள் மாத சம்பளம் பெறுபவரா? உங்களுடைய வேலைக்கான அப்பாயின்ட்மெண்ட் லட்டரில் போட்டுள்ள CTC என்ற மாத சம்பளத்திற்கும், உங்கள் கையில் கிடைக்கும் உண்மையான தொகையை பார்க்கும் போது, சற்று வருத்தப்பட்டதுண்டா?? 

உங்களின் வேலைக்கான அப்பாயின்ட்மெண்ட் லட்டரில் போட்டுள்ள தொகைக்கும் (CTC), நீங்கள் இறுதியாக கையில் பெறும் தொகைக்கும் உள்ள வித்தியாசம் நிறையவே உங்களை யோசிக்க வைத்திருக்கும்.

நிறுவனம்

இந்த ஏமாற்றத்திற்காக உங்களுடைய கம்பெனியை குறை சொல்லி எந்த பலனும் இல்லை. 
ஆனால், CTC என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாமல் போனது நம்முடைய தவறுதான்.

CTC (cost to company) என்றால் என்ன? 

CTC என்பது அதன் பெயரைப் பொறுத்தே விளங்கும். அதாவது உங்களை பணிக்கு அமர்த்துவதால் அந்நிறுவனம் எவ்வளவு செலவு செய்கிறது என்பது தான் இதன் விளக்கம். இவை மட்டுமல்லாமல், சில நேரங்களில் போனஸ் போன்றவைகளும் நன்மதிப்பிற்காக சேர்க்கப்படலாம். உங்களுடைய சேமநல நிதி (PF) உட்பட எல்லா வகையான கணக்குகளையும் உள்ளடக்கி இருப்பது தான் CTC ஆகும்.

20 சதவீத சம்பளம் 

நீங்கள் புதிய நிறுவனத்தில் அல்லது முதல் முறையாக நிறுவனத்தில் மாத வருமானம் பற்றி விவாதிக்கும் போது 10 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே வரி, சேமநல நிதி போன்றவைகளுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எப்படி குறைகிறது? 

ஒரு எடுத்துக்காட்டு மூலம் இதைக் கணக்கிடுவோம். 
இப்போது அஜய் என்பவரின் ஊதியத்தைக் கணக்கிடுவோம். 
அடிப்படை ஊதியம் (Basic Salary) - ரூ.300,000 
வீட்டு வாடகை படி (HRA) - ரூ.60,000 
மருத்துவ பதிலீடு (Medical Reimbursement) - ரூ.15,000 
போக்குவரத்து படி (Conveyance) - ரூ.8,000 
ஆண்டுக்கான மொத்த ஊதியம் (CTC Per Annum) - ரூ.3,83,000 
(மாத சம்பளம் ரூ.31,917)

பிடித்தங்கள்

அடிப்படை ஊதியம் மற்றும் வீட்டு வாடகை படியில் வரி - ரூ.11,000 
தொழிலாளர் சேமநல நிதி (அடிப்படை ஊதியத்தில் 12%)(EPF) - ரூ.36,000 
மருத்துவ காப்பீடு (Medical Insurance) - ரூ.4000
தொழில் வரி (Professional Tax)- ரூ.3600 
நிகர வருமானம் (Net Salary per Annum) - ரூ.3,39,400 
(நிகர மாதாந்திர வருமானம் (Net Salary Per Month- ரூ.28,283) 
இந்த 28,283 ரூபாய் தான் உங்களது takehome salary.

வித்தியாசம் 

மேற்கண்ட எடுத்துக்காட்டிலிருந்து CTC-க்கும் கையில் பெறும் ஊதியத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.

வருமான வரிச் சலுகை

எனவே, நீங்கள் ஒரு வேலைக்காக தேர்ந்தெடுக்கப்படும் போது, எந்தெந்த வகையில் பிடித்தம் செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் உங்களுக்கு சேமநல நிதி வேண்டாம் என்று சொல்ல முடியும். அந்த வகையில் வருமான வரி பிரிவு 80சி-யின் கீழ் பெறும் வரி சலுகைகள் உங்களுக்கு கிடைக்காது.

வரி மற்றும் மருத்துவ காப்பீடு 

வரிகளையும் மற்றும் கூட்டு மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்களையும் உங்களால் தவிர்க்க முடியாது. எனவே, உங்களுடைய ஊதியத்தைப் பற்றி மிகவும் கவனமாக விவாதிப்பதும் மற்றும் பல்வேறு வகையான பிடித்தங்களை புரிந்து கொள்வதும் அவசியமானதாகும்.

கூப்பன்கள் 

சில நிறுவனங்களின் பணியாளர்கள் பணத்திற்கு பதிலாக சலுகை கூப்பன்களை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்களுடைய கையில் கிடைக்கும் ஊதியத்திலிருந்து வரி பிடித்தம் செய்யப்படுவது குறைகிறது. 

Posted By: Prasanna VK

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் - 27.09.2016



கோர்ட் டைரக்‌ஷன் - ஐகோர்ட் உத்தரவு


கோர்ட் டைரக்‌ஷன் - ஐகோர்ட் உத்தரவு -என்ன செய்ய வேண்டும்?

சென்னை: 'ஒரு புகாரின் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, நேரடியாக உயர் நீதிமன்றத்தை அணுகுவது ஏற்புடையதல்ல' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போலீஸ் நிலையங்களில் அளித்த புகார்களை, பதிவு செய்ய உத்தரவிடும்படி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, வழக்கறிஞர் ஒருவர், ''உச்ச நீதிமன்றம், ஒரு வழக்கில், சட்ட அம்சங்களை வரையறுத்துள்ளது;
அதன்படி, போலீஸ் அதிகாரிகள், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவற்றை அணுகிய பின் தான், உயர் நீதிமன்றத்தை அணுக முடியும்,'' என்றார்.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவது குறித்து, மூத்த வழக்கறிஞர்கள், அரசு குற்றவியல் வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ஒரு குற்றம் தொடர்பாக, யார் புகார் அளித்தாலும், அதை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரிகள் பெற வேண்டும். ஆரம்ப விசாரணை நடத்த விரும்பினால், சி.எஸ்.ஆர்., எனப்படும், சமூக பணி பதிவேட்டின் நகல் வழங்க வேண்டும். 

புதுச்சேரி என்றால், அதற்கென தனி ரசீது வழங்க வேண்டும்
.
ஆரம்ப விசாரணைக்கு பின், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேவையில்லை என்றால், புகாரை முடித்து வைத்ததற்கான அறிக்கை நகலை வழங்க வேண்டும்.

அந்த அறிக்கையை பெற்ற பின், புகார்தாரர் விரும்பினால், மாஜிஸ்திரேட்டிடம் மனு தாக்கல் செய்யலாம்; 

அந்த மனு மீது, போலீசார் விசாரணை நடத்தும்படி, மாஜிஸ்திரேட் உத்தரவிடலாம்.

புகாரை பெற, போலீஸ் நிலைய அதிகாரி மறுத்தால், பதிவு தபாலில், எஸ்.பி., அல்லது துணை ஆணையருக்கு அனுப்ப வேண்டும். 

அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டை அணுகலாம்.

புகாரை பெற்ற பின், 15 நாட்களுக்குள், மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்;

 அதன் நகல், புகார் மனுவின் நகலை, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் விசாரணைக்காக, மாஜிஸ்திரேட் அனுப்ப வேண்டும்.

உத்தரவுக்கு பின், ஒரு வாரத்துக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றால், அந்த போலீஸ் அதிகாரி மீது, மாஜிஸ்திரேட் நடவடிக்கை எடுக்கலாம்; 

உயர் நீதிமன்றத்தை, புகார்தாரர் அணுகலாம்.

ஆரம்பகட்ட விசாரணையை, ஆறு வாரங்களில் போலீசார் முடிக்கவில்லை என்றாலும், உயர் நீதிமன்றத்தை புகார்தாரர் அணுகலாம்.

 உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தவறினால், அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்; 

அது மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 28.09.2016

பி.எஃப் மூலம் இலவச ஆயுள் காப்பீடு


பி.எஃப் மூலம் இலவச ஆயுள் காப்பீடு - என்ன செய்ய வேண்டும்?

பிஎப் சந்தாதார்களுக்கு 6 லட்சம் வரை இலவச ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..? 

நீங்கள் பணி புரியும் நிறுவனத்தில் உங்களது சம்பளத்தின் ஒரு பங்காக ஒவ்வொரு மாதமும் பிஎப் பிடித்தம் செய்கிறார்களா? இந்த பணத்திற்கு வரி இல்லை ஆனால் வட்டி உண்டு என்று எல்லோருக்கும் தெரியும், ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா..? 

ஆம், உங்கள் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஆயுள் காப்பீடும் உள்ளது. 

இது பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு (Employee's Deposit Linked Insurance - EDLI) என்று அழைக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி கணக்குப் உரிமையாளர் இறக்கும் பொது பிஎப் சந்தாதாரின் வாரிசுகள் இதைப் பெறலாம். 

யாருக்கெல்லாம் இது பொருந்தும்? 
இந்தத் திட்டம் யாரெல்லாம் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் சம்பளத்தில் இருந்து பிஎப் திட்டத்தில் பங்களிக்கிறீர்களோ அவர்கள் எல்லாம் இத்திட்டத்தில் பயன்பெறலாம். 

பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் ஊழியர் சேமலாப நிதியம் (Employee's Provident Fund Organisation - EPFO) மூலம் கட்டமைக்கப்பட்டது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை 
சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு அளிக்கின்றது என்றால் அது EPFO இல்லாமல் தனியாக அளிக்கிறார்களா என்பதை உறுதி செய்வது நல்லது. 

இந்தக் காப்பீடு திட்டத்திற்கு ஊழியர்கள் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவைல் இல்லை.

காப்பீடு தொகை 
இந்தக் காப்பீட்டிற்கான தொகை செப்டம்பர் 2015 ஆம் முதல் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய அறிவிப்பின் படி சந்தாதார்களின் பரிந்துறைப்பாளர்கள் 6 லட்சம் வரை பெறலாம்.

எவ்வாறு கணக்கிடப்படுகிறது? 
இந்த காப்பீடு 12 மாத சம்பளம் பெறுவதைப் பொருத்து கணக்கிடப்படுகிறது. அதிகபட்சம் 15,000 ரூபாய் வரை இந்தச் சம்பளம் வாங்குபவர்கள் இதில் பயன்பெறலாம். இங்குச் சம்பளம் என்றால் அடிப்படை ஊதியம் மற்றும் கிராக்கிப்படி இரண்டும் ஆகும்.

எவ்வளவு தொகை பெற இயலும்?
 குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் பெற இயலும். இது சராசரியாக தங்களது சராசரி சம்பளத்தில் இருந்து 30 முறைகளுக்கான பணமாக கணக்கிடப்பட்டு அளிக்கப்படும். 

இது ஊழியர்களின் வயது மற்றும் வேலை செய்த நாட்களைப் பொருத்து மாறும்.

உரிமைகோரல் செயல்முறை 
ஒரு வேலை ஊழியர் காலமானால் இறப்பு சான்றிதழ், குடும்ப சான்றிதழ், மற்றும் வங்கி விவரங்கள் போன்றவற்றை அளித்து பரிந்துறைப்பாளர்கள் உரிமைகோரலாம். 

வருங்கால வைப்பு நிதி கணக்கில் பரிந்துறைப்பாளர்கள் யாரும் இல்லை என்றால் சட்ட பூர்வமான வாரிசுகள் இதைப் பெற இயலும். 

இந்த உரிமைகோரல் ஊழியர் இறந்தால் மட்டுமே தவிர வேறு எந்த காரணத்தைக் கொண்டும் பெற இயலாது. 

-------------------------------------------------------------------------------------------Written by: Tamilarasu

நன்றி : குட் ரிட்டன்ஸ் - தமிழ் - 27.09.2016

Monday, September 26, 2016

எலக்‌ஷன்ல நிக்கப் போறீங்களா!


எலக்‌ஷன்ல நிக்கப் போறீங்களா! - என்ன செய்ய வேண்டும்?

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒப்பந்ததார ராக இருக்கக்கூடாது, கண்டுபிடிக் கப்பட்டால் தகுதிநீக்கம் செய்யப்படு வதாக தேர்தல் ஆணையம் எச்ச ரித்துள்ளது.

தமிழகத்தில் 1,31,794 உள்ளாட் சிப் பதவிகளுக்கு அக்டோபர் 17, 19 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. நேற்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதிமுக, நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மற்ற கட்சியினரும், சுயேச்சைகளும் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றனர். உள்ளாட்சித் தேர் தலில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை, மோதல்கள், சர்ச்சைகள் ஏற்படு வதை தடுக்க வேட்பாளர் தகுதி மற்றும் தகுதியின்மை, வாக்காளர் களை அணுகும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், நன்ன டத்தை விதிகள், சட்டத்திருத்தங்கள் அடங்கிய 14 அத்தியாயங்கள் அடங் கிய வழிகாட்டுதல் கையேட்டை தேர்தல் ஆணையம் வெளியிட்டு எச்சரித்துள்ளது. அதில் குறிப்பிடப் பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:

$ குற்றவியல் நீதிமன்றத்தால் ஆறு மாதத்துக்கு மேல் தண் டனை பெற்றிருப்பின் தண் டனை காலத்திலும் மற்றும் தண்டனை முடிவடைந்த நாளி லிருந்து ஆறு ஆண்டு காலத் துக்கும் தேர்தலில் போட்டியிடு வதற்கு தகுதி அற்றவராக கருதப்படுவார்கள்.

$ தேர்தல் குற்றச்செயல்களுக் காக தண்டனை பெற்றிருப்பின் தண்டனை பெற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தகுதி யற்றவராக கருதப்படுவர்.

$ தேர்தலில் போட்டியிடுபவர் மன நலம் குன்றியவராக இருக்கக் கூடாது.

$ 1955-ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண் டனை பெற்றவராக இருத்தல் கூடாது.

$ பேரூராட்சி, நகராட்சி, மாநக ராட்சிகளில் கவுன்சிலராக போட்டியிடுகிறவர்கள், அந்த உள்ளாட்சியுடன் நேரடி யாகவோ, மறைமுகமாகவோ அல்லது பங்குதாரர் மூல மாகவோ எந்த ஒரு வேலைக் கான அல்லது பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்த தாராக இருக்கக் கூடாது. கண்டுபிடித்தால் தகுதிநீக்கம் செய்யப்படுவர்.

$ அரசுப் பணியாளராகவோ, அலு வலராகவோ இருக்கக் கூடாது.

$ உள்ளாட்சிகளுக்கு சேர வேண்டிய தொகைகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது.

$ சட்டமன்ற தேர்தலில் போட்டி யிட தகுதியின்மை எதுவும் பெற்றிருத்தல் கூடாது.

$ கடந்த கால உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வேட்பாளர் தேர்தல் செலவின கணக்கினை உரிய காலத் தில் தாக்கல் செய்ய தவறிய மைக்காக மாநில தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வராக இருப்பின், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து மூன்றாண்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட தகுதியற்றவராகக் கருதப் படுவர்.

$ வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களோ, அச்சுறுத்தல் களோ கொடுக்காமல் வாக்கு சேகரிக்கும் பணியை செய்ய வேண்டும்.

$ போட்டி வேட்பாளர் களை போட்டியிட விடாமல் செய் வதை தவிர்க்கவோ அல்லது போட்டியிட செய்ய வைக்கவோ முறையற்ற வழிகளை கையா ளக் கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனி மனித தாக்குதல் கூடாது

$ மத, இன, சாதி மற்றும் மொழி உணர்வுகளை துாண்டி வாக்கு சேகரிக்கக் கூடாது.

$ சக வேட்பாளர்களின் சொந்த விஷயங்கள் மற்றும் அவர்கள் நடத்தை குறித்து பிரச்சாரம் செய்யக் கூடாது. வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து வர வாகனங்களை வாடகைக்கு அமர்த்தக் கூடாது.

$ தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர், எவருக்கும் நேரடியாகவோ அல்லது முறைமுகமாகவோ இடையூறு, அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடாது.

$ வாக்காளர்களுக்கு உணவு வழங்குதல் மது மற்றும் போதைப் பொருட்களை வழங்குதல் கூடாது. வேட்பாளர் பெயரை முன்மொழிபவரது பெயர், போட்டியிடும் உள்ளாட்சி வார்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

$ வேட்புமனு படிவங்கள் தேர்தல் அலுவலகங்களில் கிடைக்கும். அச்சிட்டப் படிவம் கிடைக்கப்பெறாத நிலையில் கையால் எழுதியோ, தட்டச்சு செய்தோ வேட்புமனு தயாரித்து தாக்கல் செய்யலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 27.09.2016