disalbe Right click

Sunday, October 23, 2016

டயாபடிக் ரெட்டினோபதி

டயாபடிக் ரெட்டினோபதி - என்ன செய்ய வேண்டும்?
விழிப்புடன் இருப்போம்! விழித்திரை காப்போம்!
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை எனில், அது நரம்புமண்டலம், ரத்தக் குழாய், சிறுநீரகம், இதயம் என உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதிக்கும்.
சர்க்கரை அளவு அதிகரிப்பால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது, அதை டயாபடீக் நியூரோபதி என்றும், சிறுநீரகம் பாதிக்கப்படும்போது டயாபடீக் நெப்ரோபதி என்றும், கண்கள் பாதிக்கப்படும்போது டயாபடீக் ரெட்டினோபதி என்றும் அழைக்கிறோம்.
டயாபடீக் ரெட்டினோபதி
நாம் பார்க்கும் பொருளின் பிம்பம், கண்ணின் லென்ஸ் வழியாகச் சென்று, விழித்திரையில் (ரெட்டினா) விழும். அங்கிருந்து நரம்புகள் மூலம் மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு, அது என்ன பொருள் என்று மூளை அதன் படத்தை உருவகப்படுத்தும். எந்த ஒரு பிம்பத்தையும் பார்ப்பதற்கு இந்த விழித்திரை அவசியம்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, அதைக் கட்டுப்படுத்தாமல் விடும்போது, விழித்திரைக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும். ரத்தக்குழாய்களில் கசிவு ஏற்படும். புதிது புதிதாக ரத்தக்குழாய்கள் வளர ஆரம்பிக்கும். இதனால் பார்வை மங்கலாகத் தெரியும். ஒரு கட்டத்தில் ரெட்டினா முழுவதையும் மறைக்கும் அளவுக்கு ரத்தக் கசிவு ஏற்படும். இதனால், பார்வையே பறிபோய்விடும்.
பொதுவாக, 40 – 50 வயதில் பார்வைத்திறன் பரிசோதனைக்கு வருபவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை பரிந்துரைக்கப்படும்.
பெரும்பாலானோர் அப்போதுதான் அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதைத் தெரிந்துகொள்கின்றனர்.
சர்க்கரை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, வாழ்க்கை முறை மாற்றம், மாத்திரை மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைத்திருப்பதன் மூலம் டயாபடீக் ரெட்டினோபதி பிரச்னையை இயன்றவரை தடுக்க முடியும்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
குடும்பத்தில் யாரேனும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், 40 வயதைத் தாண்டிய குடும்ப உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு இருமுறையும் கண் மருத்துவமனைக்குச் சென்று முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு கண்புரை, டயாபடீக் ரெட்டினோபதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கண் பார்வையில் ஏதேனும் சிறு குறைபாடு இருப்பதை உணர்ந்தாலும், கண் அழுத்த அளவைப் பரிசோதிக்க வேண்டும்.
மருத்துவர்கள், கண்ணில் சொட்டு மருந்தைவிட்டு, இன்டேரக்ட் ஆப்தல்மோஸ்கோப்பி (Indirect Opthalmoscopy) என்ற பரிசோதனை மூலம் ரத்தக்குழாயில் விரிசல், ரத்தக் கசிவு ஏதேனும் இருக்கிறதா எனப் பரிசோதனைசெய்து, அதன் அடிப்படையில் சிகிச்சை அளிப்பர்.
சிகிச்சை என்ன?
டயாபடீக் ரெட்டினோபதியில் 10 விதமான நிலைகள் இருக்கின்றன. ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால், முதல் ஐந்து நிலைக்குள் இருக்கும்பட்சத்தில் எந்தவித சிகிச்சையும் தேவை இல்லை.
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், டயாபடீக் ரெட்டினோபதியின் தீவிரத்தைத் தடுக்க முடியும். 6 முதல் 10 நிலைகளில் இருந்தால், ரத்தக்குழாய்கள் விரிசல் அடைந்துள்ளதா, ரத்தம் எவ்வளவு கசிகிறது, புது ரத்தக்குழாய்கள் வளர்ந்தி ருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் லேசர் முறையில் கண்ணுக்குள், வெள்ளைப்பகுதியில் 0.5 -0.7 மி.மி அளவுக்கு மிகச் சிறிய துளையிட்டுவிட்ரேக்டமிஎனும் நுண்ணிய அறுவைசிகிச்சை செய்யப்படும்.
கண்புரை பிரச்னை உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை மூலம் மீண்டும் புரையால் இழந்த பார்வைத்திறனைப் பெற முடியும். டயாபடீக் ரெட்டினோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம், மீதமிருக்கும் பார்வைத்திறனை காப்பாற்றிக்கொள்ளலாம்.
ரெட்டினோபதியைத் தவிர்க்கலாம்!
சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக பார்வை இழப்பு ஏற்படுத்தும் முக்கியமான காரணிகளில் ரெட்டினோபதியும் ஒன்று.
ஆனால், இந்தப் பார்வை இழப்பைத் தவிர்க்க முடியும். சர்க்கரை நோயாளிகளில் 90 சதவிகிதம் பேருக்கு ரெட்டினோபதி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் வந்தவுடன், உடனடியாக பாதிப்பு இருக்காது.
சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்காதபோதுதான் பாதிப்பு ஏற்படும்.
15 – 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயுடன் இருப்பவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டயாபடீக் ரெட்டினோபதி பிரச்னை இருந்தால், கண்ணின் ரெட்டினா பகுதி பாதிக்கப்பட்டு, பார்வை இழப்பு ஏற்படும்.
எனவே, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிப்பைத் தவிர்க்கலாம். முற்றிய நிலையில் பார்வை இழப்பு தவிர்க்க முடியாததாகிவிடும்.
நன்றி : டாக்டர் விகடன் – 01.08.201

டயாபடிக் நியுரோபதி

டயாபடிக் நியுரோபதி - என்ன செய்ய வேண்டும்?
டயாபடிக் நியூரோபதி என்றால் என்ன?
நாள்பட்ட நீரிழிவு தொடரும் போது நரம்பு இழைகள் மற்றும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவது டயாபடிக் நியூரோபதி.
இப்பிரச்னையால் நரம்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது அது மிக நுண்ணிய ரத்தக் குழாய் சுவர்களை பாதிப்படையச் செய்கிறது. இதனால், நரம்புகளுக்குப் போதுமான அளவு பிராண வாயு மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.
நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் நியூரோபதி பாதிப்பு ஏற்படுமா?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதன் மூலம் இப்பாதிப்புகளிலிருந்து தப்பலாம்.
டயாபடிக் பாதிப்பால் சிறுநீரக கோளாறு ஏற்படுவது ஏன்?
180 மி.கிராம் வரை சிறுநீரகங்கள் சர்க்கரையை சேமிக்கும் திறன் கொண்டவை. இந்த அளவைத் தாண்டும் பொழுது, மைக்ரோ அல்புமின் எனப்படும் புரதம் வெளியேறத் துவங்கும். 300 மி.கிராமிற்கு மேல் புரதம் வெளியேறினால் சிறுநீரகங்களை பாதிக்கும்.
புகை மற்றும் மது குடிக்கும் பழக்கம்இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
சிகரெட்டில் உள்ள நிகோடின் ரத்தக் குழாய்களின் உட்புற சுவரில் படிந்து, ரத்தக்குழாய் சுவர்களை சுருங்கச் செய்கிறது. இதனால், கால் பாதங்களுக்குச் செல்லக் கூடிய ரத்தத்தின் அளவு குறைந்து, காலில் ஏற்படும் காயங்கள், புண்கள் சரியாவதில் சிக்கல் ஏற்படுகிறது.
டயாபடிக் நியூரோபதியில் வகைகள் உள்ளனவா?
பெரிபெரல் நியூரோபதி, ஆடானமிக் நியூரோபதி, பராக்ஸிமல் நியூரோபதி, போகல் நியூரோபதி என, நான்கு வகைகள் உள்ளன.
அறிகுறிகள்?
கால் மரத்துப் போகும், கால் பாதங்களில் ஊசி குத்தும் உணர்வு, பாதம் மென்மையான பொருள் மீது நடப்பது போல் இருக்கும். காலில் ஏதாவது பொருட்கள் குத்தினால் கூட உணர்வு இருக்காது.
தடுக்கும் வழிமுறைகள்?
மது, புகைப் பழக்கத்தை கைவிடுவது, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது தான் இதற்கு தீர்வு.
டயாபடிக் நியூரோபதி வராமல் தடுக்க உணவுக் கட்டுப்பாடு தேவையா?
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு அட்டவணையை பின்பற்ற வேண்டும். அதோடு தினமும் உடற்பயிற்சி அவசியம்.
தீர்வு என்ன?
டயாபடிக் நியூரோபதி வந்துவிட்டால் தீர்வு இல்லை. இதைத் தடுக்க ஒரே வழி, மேற்சொன்னவாறு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதே.
மருத்துவரின் அறிவுரையின் படியே மருந்துகள் எடுக்க வேண்டும்.

கே.பரணிதரன்பொது மற்றும் நீரிழிவு சிறப்பு நிபுணர்
நன்றி : தினமலர் நாளிதழ் – 18.10.201

Saturday, October 22, 2016

பழைய வீட்டின் மதிப்பைக் கண்டுபிடிக்க


பழைய வீட்டின் மதிப்பைக் கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்?

பழைய வீடோ புதிய வீடோ எது வாங்குவதாக இருந்தாலும் அதில் வில்லங்கம் பார்ப்பது முக்கியம். அந்த வீட்டைச் சரியான விலைக்குத்தான் வாங்குகிறோமா என்பது அதை விட முக்கியம். வாழ்க்கையில் எப்போதாவது வாங்கும் வீடு, வாழ்க்கை முழுவதும் அவஸ்தையைத் தந்துவிடக் கூடாது.

வீடு வாங்குபவர்கள் பத்திரப் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தோ, ஆன்லைன் மூலமாகவோ வில்லங்கம் பார்ப்பது வழக்கம். சில சமயங்களில் இதிலும்கூடச் சிலர் ஏமாற்ற வாய்ப்புண்டு. விலை விஷயத்தைப் பொறுத்தவரை, வீடு விற்பவர், வாங்குபவர் இடையே தீர்மானிக்கப்படுகிறது. இப்படி வாங்கும்போது, சில சமயங்களில் வீட்டை வாங்குபவர்கள் அதிக விலை கொடுத்து ஏமாந்துவிடுவதும் உண்டு.

சரி, வில்லங்கத்தைச் சரியான முறையில் பார்ப்பது எப்படி? வீட்டைச் சரியான விலையில் மதிப்பீடு செய்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் தேசிய மதிப்பீட்டாளர் கழகத்தின் முன்னாள் துணைத் தலைவர் பி.கனகசபாபதி:

வீடு வாங்குவது என முடிவு செய்துவிட்டால், அதற்கு 2 முக்கிய விஷயங்களைச் சரிபார்க்கலாம்;

1) வில்லங்கம்

2)  விலை.

வில்லங்கம்

வில்லங்கத்தைப் பொறுத்தவரை, பொதுவாகப் பலரும் பத்திரப்பதிவு அலுவலகத்திலோ, ஆன்லைன் மூலமோ வில்லங்கச் சான்று பெறுவார்கள். 

இதில் சில சமயங்களில் தவறுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆனால் அதைவிட, இதற்கெனப் பிரத்யேகமாக உள்ள வழக்கறிஞர்களை (Competent Advocates) அணுகினால், வில்லங்க விஷயங்கள் 100 சதவீதம் துல்லியமாக அறிய ஏதுவாக இருக்கும். அவர் வீட்டின் மூலாதாரப் பத்திரம் முதல் மின் இணைப்பு ரசீது வரை அனைத்தையும் சரிபார்த்துவிட்டு, வீட்டை வாங்கலாமா, வேண்டாமா எனக் கூறுவார்.

சொத்து மதிப்பீடு

வீட்டில் எந்த வில்லங்கமும் இல்லை எனத் தெரிந்தால், அடுத்து அந்த வீட்டின் மதிப்பு எவ்வளவு என்பதை மதிப்பீடு செய்வது முக்கியமானது. சொத்து மதிப்பீடு என்பது சொத்து வாங்க இருப்பவரும், சொத்தை விற்க இருப்பவரும் சேர்ந்து விவாதித்து, எந்த நிர்பந்தத்திற்கும் உள்ளாகாமல், ஒரு விலைக்கு வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒப்புக் கொள்வது. வீடு வாங்குவதாக இருந்தால் வீட்டை வாங்க இருப்பவருக்கும், வீட்டை விற்க இருப்பவருக்கும் வீட்டின் மதிப்பு தெரியவில்லை என்றால், மத்திய அரசில் பதிவு பெற்ற மதிப்பீட்டாளரை அணுகலாம்.

அவர், அந்த வீடு அமைந்துள்ள மனையின் மதிப்பு, வீடு, அதில் உள்ள வசதிகள், இதர அம்சங்கள் ஆகிய 4 விஷயங்களைக் கொண்டு வீட்டின் மதிப்பைக் கணக்கிடுவார்.

இதில், மனையின் மதிப்பு அப்போதைய சந்தை மதிப்பைக் கொண்டு கணக்கிடலாம். வீட்டைப் பொறுத்தவரை, எத்தனை சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது, எந்த ஆண்டு கட்டப்பட்டது, சுவரின் அகலம், உறுதித் தன்மை, இன்னும் எத்தனை வருடத்துக்குக் கட்டிடம் உறுதியாக இருக்கும், வீட்டைக் கட்டிய கட்டுநர் போன்ற காரணிகள் எடுத்துக் கொள்ளப்படும். 

பொதுவாக வீட்டின் மதிப்பானது, கட்டப்பட்ட ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் ஒன்றரை சதவீதம் மதிப்பு குறையும்.ஒரு வீடு கட்டி 10 ஆண்டுகள் ஆகி இருந்தால், 15 சதவீதம் தேய்மான மதிப்பாக எடுத்துக் கொள்ளப்படும். குறிப்பாக 5 ஆண்டுக்கு முன் ஒரு வீட்டை கட்ட ரூ.30 லட்சம் செலவாகி இருந்தால், தற்போது அந்த வீட்டின் உத்தேச மதிப்பு ரூ.27 லட்சத்து 75 ஆயிரம் எனக் கணக்கிடலாம்.

அடுத்தது, வீட்டில் உள்ள வசதிகள். உள் அலங்கார வேலைப்பாடுகள், வாஸ்து, சமையலறை வசதி, வார்ட்ரோப், ஷோகேஸ், பூஜை அறை, மெயின் கதவு உள்ளிட்ட அம்சங்கள் கணக்கிடப்படும். இவற்றுக்கும் தேய்மான மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதர வசதிகளைப் பொறுத்தவரை, மோட்டார் சர்வீஸ், சாக்கடை வசதி, காம்பவுண்ட் சுவர் போன்றவற்றின் மதிப்பு எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த 4 அம்சங்களையும் எடுத்துக்கொண்டு கணக்கிடும் மதிப்பு Present Worth எனப்படும். இது தவிர, வீடு அமைந்துள்ள இடம் கோயில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்கள், முக்கிய சாலைகள், பேருந்து நிறுத்தம் ஆகியவற்றின் அருகில் இருந்தால் Present Worth-ஐவிடச் சற்று அதிகமாகவும், நேர்குத்தல் இடமாக இருந்தாலோ, டாஸ்மாக், மீன் மார்க்கெட், பம்பிங் ஸ்டேஷன் ஆகியவற்றின் அருகிலேயோ, தாழ்வான பகுதியிலேயோ இருந்தாலோ Present Worth-ஐ விடச் சற்றுக் குறைவாகவும் இருக்கும்.

இத்தனை அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வீடு வாங்கினால், எந்தப் பிரச்சினையும் இன்றி நிம்மதியாக இருக்கலாம். ஆனால், சுமார் 40 சதவீதம் பேர் மட்டுமே, இதுபோல முறையாக வாங்குபவர்களாக (Prudent Buyers) உள்ளனர். ரொக்கமாகப் பணம் கொடுத்து வாங்குவதாக இருந்தால் தான், இந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 

வங்கி மூலம் கடன் பெற்று வாங்குவதாக இருந்தால், இந்த அனைத்து நடைமுறைகளையும் வங்கி நிர்வாகமே மேற்கொள்ளும். இதற்காகவே ஒவ்வொரு வங்கிக்கும் Panel Advocates மற்றும் மதிப்பீட்டாளர்கள் உள்ளனர்.

எவ்வளவு கட்டணம்?

மதிப்பீட்டாளர்கள், சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை மதிப்பிட சுமார் ரூ.8 ஆயிரமும், ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை மதிப்பிட சுமார் ரூ.10,750-ம் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

அதன் பின் வரும் ஒவ்வொரு கோடிக்கும் ரூ.5 ஆயிரம் கட்டணம். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வீடு வாங்கும்போது, முறையாக மதிப்பிடச் சில ஆயிரம் செலவளிப்பது பெரிதல்ல. வீடு வாங்குபவர் மட்டுமல்ல, வீடு விற்பவரும், வீட்டை மதிப்பீடு செய்ய இதே முறையைப் பின்பற்றலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 22.10.2016

Friday, October 21, 2016

விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால்


விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் இனி பிரச்சனையில்லை!

சென்னை: 'விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வோர், எந்தவொரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக மாட்டார்கள்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசாணை விபரம்:

* விபத்தில் காயமடைந்தவர்களை, கண்கூடாக பார்த்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம். 

அவர்களை எந்த கேள்வியும் கேட்காமல், முகவரியை பெற்று வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். 

விபத்தில் சிக்கியோருக்கு உதவி செய்பவர்கள், எந்தவொரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக மாட்டார்கள்* 

பெயர் மற்றும் சொந்த விபரங்களை தெரிவிக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது; அவற்றை தெரிவிப்பது, அவர்களின் விருப்பத்தை பொறுத்தது. 

மருத்துவ துறையினரால் வழங்கப்படும் படிவங்களில், பூர்த்தி செய்யவும் கட்டாயப்படுத்தக் கூடாது* 

அப்படி கட்டாயப்படுத்தும் அலுவலர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

உதவி செய்பவர்கள், தாமாக சாட்சி சொல்ல விருப்பத்தை தெரிவிக்கும் போது, அவரிடம் போலீசார் ஒரு முறை மட்டுமே விசாரணை மேற்கொள்ளலாம்; 

கட்டாயப்படுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது* 

உதவி செய்வோர், காயமடைந்தோரின் உறவினராக இல்லாதபட்சத்தில், மருத்துவமனைகள் பணம் செலுத்தும்படி கோரக் கூடாது;

உடனடியாக, சிகிச்சை அளிக்க வேண்டும். 

சிகிச்சையில் அக்கரை செலுத்தவில்லை என்றால், மருத்துவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்* 

அனைத்து மருத்துவமனைகளின் நுழைவாயிலிலும், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழியில், இதுதொடர்பான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். 

அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளும், இந்த நடைமுறைகளை, உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 

இவ்வாறு அரசாணை யில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 22.10.2016

Thursday, October 20, 2016

குழந்தை - தத்து எடுப்பதற்கு


குழந்தை - தத்து எடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருவதை அடிக்கடி செய்திகளின் வாயிலாக அறிகிறோம். ஆனால் அதற்கு, சட்டத்துக்குப் புறம்பான தத்தெடுத்தல்களும் முக்கிய காரணம் என்பது பலருக்கும் தெரியாது. 

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பிறந்த பல மணிநேரங்களில் அல்லது சில நாட்களில் கடத்தப்பட்டு குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு விற்கப்படுகின்றன
.
குழந்தையைத் தத்தெடுப்பது எதற்காக?

குழந்தை இல்லாதவர்கள், குழந்தை இருந்தும் சில ஜோதிட காரணங்கள், சொத்துக்களை நிர்வகிக்க, ஈமச்சடங்குகள் செய்ய ஆண் வாரிசு இல்லாதவர்கள், வீடு மங்களகரமாக இருக்க பெண் குழந்தை வேண்டுவது போன்ற பல காரணங்களுக்காக குழந்தைகளைப் பலரும் தத்தெடுக்கிறார்கள்.

சில பெற்றோரே தங்கள் முழு மனதுடன் பணம் வாங்கியோ அல்லது வாங்காமலோ தங்கள் குழந்தையை மற்றவர்களுக்குத் தத்துக்கொடுக்கிறார்கள். ஆனால், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர்கள் தங்கள் பிள்ளை மீது உரிமை கோர நேரலாம். அப்போது வளர்ப்புப் பெற்றோருக்கு சிக்கல் ஏற்படும்.

இப்படி குழந்தை தத்தெடுத்தலில் உள்ள பாசப் பிரச்னைகள் மற்றும் சட்ட விரோதச் செயல்களுக்குத் தீர்வு காணும் விதமாக, குழந்தையைக் கொடுப்பவர், வாங்குபவர், இடைத்தரகர் என இந்த மூன்று தரப்புகளுக்கு உள்ளாகவே குழந்தையைத் தத்தெடுப்பது, தத்துக்கொடுப்பது தற்போது சட்டத்துக்குப் புறம்பான செயல்களாகப் கருதப்படுகின்றன.

சட்டத்துக்குப் புறம்பாக தத்தெடுக்க நினைப்பது ஏன்?

சட்டரீதியாக ஒரு குழந்தையைத் தத்தெடுக்க அதிக காலம் காத்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள், நாம் தத்தெடுப்பது பலருக்கும் தெரிந்துவிடுமே என நினைப்பவர்கள், தவறான வழிகளில் குழந்தைகளைப் பயன்படுத்தும் நோக்கம் கொண்டவர்கள் எல்லாம், சட்டத்துக்குப் புறம்பான தத்தெடுத்தல்களை செய்கிறார்கள். 

எனவே, கடத்தப்படும், திருடப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும், 20 - 30 பேர் வரை காத்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் எந்தவித உடல்நலக் குறைபாடுகளும் இல்லாத குழந்தைகளைத்தான் தேர்வு செய்கிறார்கள். தவிர குழந்தைகளைத் தத்தெடுத்து பிச்சையெடுத்தல், சட்ட விரோத செயல்களிலும் சிலர் ஈடுபடுத்துவதும் அதிகரித்துவிட்டது.

சட்டரீதியாக குழந்தையைத் தத்தெடுப்பது எப்படி?

தங்கள் குழந்தையைத் தத்துக்கொடுக்க முன்வரும் பெற்றோரிடமோ அல்லது அரசு மற்றும் தனியார் காப்பகங்களில் வளரும் குழந்தைகளையோ சட்டப்படியான வழிமுறைகளில் தத்தெடுக்கலாம். 

அதற்கான அனைத்து  நடைமுறைகளும் முடிந்ததும் அக்குழந்தை சம்பந்தப்பட்ட தம்பதியின் சொந்தக் குழந்தையாக சட்டப்படி உரிமை பெறும். அப்போதிலிருந்து அந்தத் தம்பதியிடம் அக்குழந்தைக்கு சொத்துரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளும் உள்ளது. 

சட்டப்படி தத்தெடுக்க...

* முதலில் குழந்தையில்லாத தம்பதி முழு மனதோடு, நம் வாழ்க்கைத் துணைக்காக ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளலாம் எனவோ, அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக நாம் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளலாம் எனவோ, அல்லது ஏற்கனவே குழந்தை இருந்தும் மற்றொரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளலாம் எனவோ ஒருமித்த கருத்துடன் ஒரு குழந்தையை தத்தெடுக்கும் முடிவினை எடுக்க வேண்டும்.

* மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்கும் தம்பதி இருவரின் வயது கூட்டுத்தொகை 90-க்கு மிகாமலும், மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தையை தத்தெடுக்கும் தம்பதியரின் வயது கூட்டுத்தொகை 105-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். தம்பதியர் இருவரின் தனிப்பட்ட வயது 45-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* திருமணமாகி விவாகரத்தாகியோ, கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தாலோ, தம்பதியினரில் ராவது ஒருவர் மரணமடைந்து இருக்கும் பட்சத்திலோ, தனிமையில் இருக்கும் தங்கள் வாழ்க்கைக்குத் துணையாக ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் அவரது வயது 30-45 -க்குள் இருக்க வேண்டும்.

* தத்தெடுப்பவருக்கும், தத்தெடுக்கப்படும் குழந்தைக்கும் இடையே 21 வயது இடைவெளி இருக்க வேண்டும். அத்தோடு தத்தெடுப்பவருக்கு அவரது குடும்ப நபர்களின் உதவியும் இருக்க வேண்டும்.

* பிறந்த கைக்குழந்தை முதல் 12 வயது வரையிலான சிறுவர்களை மட்டுமே தத்தெடுக்க முடியும். ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அவர்களின் ஒப்புதலுடன்தான் தத்துக்கொடுக்க முடியும். கணவனின் துணையின்றி வாழும் பெண், ஓர் ஆண் அல்லது பெண் குழந்தையை தத்தெடுக்கலாம். ஆனால் மனைவியின் துணையின்றி வாழும் ஆண், ஆண் குழந்தையை மட்டும்தான் தத்தெடுக்க முடியும்.

* தத்தெடுப்பவர்களின் வருமானம், குழந்தைகளை முறையாக வளர்க்கும் தகுதி, தத்தெடுப்பவர்களுக்கு பிற்காலத்தில் ஏதாவது உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் அக்குழந்தைக்கு மாற்று பாதுகாப்பு போன்ற பல்வேறு கூறுகளும் தத்தெடுக்கும் சமயத்தில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

* தத்தெடுப்பவர் எந்தவித குற்றப்பின்னணியும் இல்லாதவர் என, தான் வசிக்கும் பகுதி சார்ந்த காவல்நிலையத்தில் சான்றிதழ் பெற வேண்டும். பின்னர் பதிவு செய்யப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசின் 'காரா (CARA - Central Adoption Resource Agency)' தத்தெடுப்பு மையத்தில் முறையாக பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து பதிவு செய்த தம்பதி அல்லது நபரை 'காரா' மையத்தினர் தனியாக கவுன்சிலிங் செய்து தேர்வு செய்யும் பட்சத்தில், ஒரு குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி கொடுப்பார்கள். அதன் பின்னர்தான், குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தங்களுக்கு பிடித்தமான ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்குத் தேர்வுசெய்ய முடியும்.

* தொடர்ந்து சைல்டு வெல்ஃபேர் கமிட்டி மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவலர்களால் விசாரணை செய்யப்பட்டு, காப்பகத்தில் வளரும் அக்குழந்தை தத்துக்கொடுக்கும் விபரம் நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிடப்படும். பின்னர் குறிப்பிட்ட நாள் வரையில் அந்த குழந்தையைச் சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை எனில், அக்குழந்தையை தத்தெடுக்க விண்ணப்பித்தவர்கள் தத்தெடுத்துக்கொள்ளலாம் என சைல்டு வெல்ஃபேர் கமிட்டி உறுப்பினர்கள் சான்று கொடுப்பார்கள்.

* பின்னர், குழந்தை தத்தெடுத்தல் தொடர்பான அனைத்து தகவல் மற்றும் வாக்குறுதியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, நீதிமன்றமும் சாதகமான உத்தரவு கொடுத்த பிறகுதான் குழந்தையைத் தத்தெடுக்க முடியும். எனவே, குழந்தை தத்தெடுப்புக்கு முறையாக 'காரா' மையத்தில் பதிவு செய்த நாளிலிருந்து 1-2 வருடங்கள் வரைகூட ஒரு குழந்தையைத் தத்தெடுக்க காத்திருக்க வேண்டி வரலாம். அதுவரை பொறுத்திருக்க வேண்டும். பின்னர் அக்குழந்தையை விண்ணப்பித்தவர்கள் பெற்றுக்கொள்வதோடு, அன்று முதல் அக்குழந்தை அவர்களுக்குச் சொந்தமாகிவிடும்.

* குழந்தைகளைத் தத்தெடுக்க நினைப்பவர்கள், தத்தெடுத்தல் குறித்த முழு விபரங்களைத் தெரிந்துகொண்ட பின்னர் சட்டப்படியாக தத்தெடுப்பதே சிறந்தது. 

குழந்தை தத்தெடுப்பு குறித்த விபரங்களை அறிய மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம். 

மேற்கொண்டு தத்தெடுத்தல் குறித்த விபரங்களை www.cara.nic.in இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். 

நன்றி : விகடன் செய்திகள் - 21.10.2016


பெண்குழந்தை - ரூ.50,000/- பெற


பெண்குழந்தை - ரூ.50,000/- பெற என்ன செய்ய வேண்டும்?

பெண் குழந்தை பிறந்தால் கொண்டாடும் பெற்றோருக்கு மத்தியில், `‘பொண்ணு பொறந்திருக்கா… இப்பவே அவளோட கல்யாணத்துக்கு காசு சேர்க்கணும்; படிக்க வைக்கணும்… கொஞ்சம் பயமா இருக்கு” என்று பதறுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

அதனாலேயே பிறந்த பெண் குழந்தைகளைக் கொண்டாட வைக்கும் ஒரு முயற்சியாக தமிழ்நாடு அரசு, ‘சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்’ என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

இந்தத் திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் நிதியான 50 ஆயிரம் ரூபாயைப் பெற எப்படி விண்ணப்பிப்பது, யாரை அணுகுவது என்பது போன்ற A to Z தகவல்களை சமூக நலத்துறை சார்பாக நமக்குத் தந்திருக்கிறார்கள். இதோ…

 விண்ணப்பம்

ஒவ்வொரு மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்களைப் பெறலாம். அல்லது 

http://cms.tn.gov.in/sites/default/files/forms/socialwelfareschemes.pdf 

என்ற இணையதள முகவரியில் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்துகொள்ளலாம் 

(தரவிறக்கம் செய்யும்போது பெண்கள் தொடர்பான அனைத்து திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் வரும். 
அதில் நீங்கள் சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்).

 தரவிறக்கம் செய்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அப்படிவத்தில் இருக்கும் உறுதிமொழிச்சான்றிதழை இணைத்து உங்கள் மாவட்டத்தில் இருக்கும் சமூக நல அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.

நிதி விவரம்

உங்களுக்கு ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின், அந்தக் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்பீடாக ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் எனில், ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25 ஆயிரமும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யப்படும்.

நீங்கள் தரவிறக்கம் செய்யும்போது இங்கே சொல்லப்பட்டிருக்கும் தொகையைவிட குறைவாக அதில் சொல்லப்பட்டிருக்கும். அவை பழைய தகவல். தற்போது சலுகைகளை அரசு உயர்த்தியிருக்கிறது.

இணைக்க வேண்டியவை…

  *குடும்ப அட்டை

  *வருமானச் சான்று

  * சாதிச் சான்று

  *பெற்றோரின் வயதுச் சான்று

  * கருத்தடை அறுவை சிகிச்சை சான்று

  * குழந்தைகளின் பிறப்புச்சான்று (பெயர்களுடன்)

  * குடும்பப் புகைப்படம் – 1

  * ஆண் வாரிசு இல்லை என வட்டாட்சியர் வழங்கும் உறுதிச்சான்று

  * இருப்பிடச் சான்று (விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வசிப்பவர் என்று வட்டாட்சியர் குறிப்பிட்டு வழங்குவது)


தகுதி

1.8.2011-க்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக்கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கவும் கூடாது.

எப்போது விண்ணப்பிப்பது?

குழந்தை பிறந்த 3 ஆண்டுக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.


உங்கள் குழந்தைகளில் யார் பெயருக்கு நீங்கள் விண்ணப்பித்தீர்களோ, அவர்களுக்கான தொகை அந்த குழந்தை 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த பிறகே அரசு முதிர்வுத் தொகையாக வழங்கும். அவ்வாறு இல்லையெனில் வட்டியுடன் வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம்

பெண் குழந்தை நலத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பெற்றோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது.

தரகர்களைத் தவிர்க்கலாம்

இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பதில் இருந்து அந்த தொகை முதிர்வுபெற்று பெறும்வரை நீங்களே அனைத்து வேலைகளையும் மேற்பார்வையிடுவது நல்லது. இடைத் தரகர்களை நம்பி வீணாக பணத்தை இழக்க வேண்டாம்.

மேலும் அதிக தகவல் பெற…

இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள உங்கள் மாவட்ட சமூகநலத் துறையை அணுகவும்.

நன்றி : அவள்விகடன் - 01.11.2016

உங்கள் ஏ.டி.எம். பின் நம்பரை மாற்ற


 உங்கள் ஏ.டி.எம். பின் நம்பரை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

உடனடியாக உங்கள் ஏ.டி.எம். பின் நம்பரை மாற்றுங்கள்? வங்கிகளின் #HighAlert!

சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். 

உங்கள் ஏ.டி.எம் பின்கோட் எண்ணை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இந்த செய்தி பாதுகாப்பை மேம்படுத்த மட்டுமே என வந்திருக்கும். நம்மில் பலர் அந்த செய்தியை ''ஜஸ்ட் லைக் தட்''  கடந்து செல்வதையே வாடிக்கையாக வைத்திருப்போம். 

ஆனால் அதன் விளைவு எவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது தெரியுமா? 32 லட்சம் டெபிட் கார்டுகளின் பின் நம்பர்கள் களவு போய்யுள்ளதாகவும், இதில் பெருமபாலான கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் பின் நம்பரை மாற்ற சொல்வது ஏன்?

இந்தியாவில் 32 லட்சம் டெபிட் கார்டுகளை மாற்றித் தரவோ அல்லது  வாடிக்கையாளர்களை பின் நம்பரை மாற்றவோ சொல்ல வங்கிகள் முடிவெடுத்துள்ளன. 

இதற்கு முக்கிய காரணம் சீனாவில் அங்கீகாரமற்ற முறையில் இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுகிற‌து என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.  இந்த பரிமாற்றங்கள் சீனாவில் ஏ.டி.எம், பொருட்களை பர்சேஸ் செய்யும் இடம் போன்ற இடங்களில் பதிவாகியுள்ளது. 

வாடிக்கையாளரின் தகவல்கள் திருடப்பட்டு அதே போன்ற கார்டுகள் க்ளோனிங் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. 

மொத்தமுள்ள 32 லட்சம் கார்டுகளில் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டு வகைகளை சேர்ந்தது என்றும், மீதமுள்ள 6 லட்சம் கார்டுகள் ரூ-பே கார்டுகள் என்றும் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான  கார்டுகள் எஸ்.பி.ஐ மற்றும் ஹச்.டி.எஃப்.சி வங்கிகளைச் சேர்ந்த கார்டுகளாக உள்ளன. 

எஸ்.பி,ஐ 6 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இந்த விஷயம் தொடர்பாக புதிய கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறது. வங்கிகள் எண்களை மாற்ற சொல்கிறது என்பதை சாதாரண விஷயமாக கருதாமல் அதனைக் கொஞ்சம் சீரியசாக அணுகுங்கள். 

வங்கிகள் அடிக்கடி பின் நம்பரை மாற்றுவது நினைவில் வைத்துக் கொள்ள கடினமாக தான் இருக்கும் ஆனால் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுங்கள் என்கின்றன வங்கிகள். 

உங்கள் எண்கள் இந்த 32 லட்சம் எண்களில் இருக்கறதோ? இல்லையோ? பாதுகாப்புக்காக உங்கள் ஏ.டி.எம்  பின் நம்பரை உடனடியாக மாற்றி விடுங்கள்.

தகவல்கள் எப்படி திருடப்படுகின்றன?

நமக்கு மட்டுமே தெரிந்த நமது பின் நம்பர், கார்டு எண்கள் எப்படி திருடப்படுகின்றன. அதுவும் சீனாவில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாக கூறப்படுகின்றன.

1. பர்சேஸ் செய்ய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் ''ஸ்கிம்மர்கள்'' எனும் கருவி ஸ்வைப் செய்யும் கருவியுடன் இணைக்கப்பட்டு மொத்த தகவலும் எடுக்கப்படலாம்.

2. ஏ.டி.எம் நிலையங்களிலேயே ஸ்கிம்மர்கள் பொருத்தப்பட்டு அனுமதியற்ற முறையில் தகவல்கள் திருடப்படலாம்.

3. போலியான இணையதளங்களில் பணப்பரிவர்த்தனை செய்வது முறையற்ற முறையில் ஸ்க்ரீன் கேப்சர் செய்யப்படுவது.

4. அதிகாரபூர்வமற்ற வங்கி ஆப்ஸ்கள் மூலமாகவும் தகவல்கள் திருடப்படுகிறது.

இப்படியெல்லாம் திரட்டப்படும் தகவல்கள் குறிப்பிட்ட பெரிய தொகைக்கு  விற்கப்படுகிறது. இப்படித் தான் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பணம் திருடுபோகிறது.

என்ன செய்ய வேண்டும்?

1. வங்கிகளின் இணையதளங்களை நீங்களே டைப் செய்து செல்லுங்கள். இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-ல் வரும் லின்க்களை க்ளிக் செய்யாதீர்கள். 

2.வங்கிகளின் முறையான ஆப்ஸை மட்டுமே பயன்படுத்துங்கள்.

3. பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இங்கெல்லாம் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது அந்த கருவிகளில் வித்தியாசமாக ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.

4. ஆன்லைன் ஆர்டர்களை கூடியமட்டில் கேஷ் ஆன் டெலிவரியாக செய்யுங்கள்

5. ப்ரெளசிங் சென்டர்களில் பணப்பரிவர்த்தனை செய்வதை தவிருங்கள்.

______________________________________________________________________ ச.ஸ்ரீராம்

நன்றி : விகடன் செய்திகள் - 20.10.2016