disalbe Right click

Sunday, January 22, 2017

அவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்!


அவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்!
நிபுணர்கள் கருத்து

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது. இதன்படி, ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விட்டன. முக்கிய இடங்களில் நடத்த முடியாவிட்டாலும் அவசர சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. 
மத்திய அரசு இயற்றிய பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகளையும் அரசு வகுத்துள்ளது. இதில், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன.

கைவிட மறுப்பு

'இந்த சட்டம் தற்காலிகமானது தான்; ஆறு மாதங்களுக்கு தான் செல்லும். இது தேவை யில்லை; நிரந்தர சட்டம் தான் வேண்டும்' என, போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோர் வலியு றுத்தி வருகின்றனர். போராட்டத்தை கைவிடவும் மறுக்கின்றனர்.

பார்லிமென்ட் அல்லது சட்டசபை நடக்கும் போது சட்ட மசோதா தாக்கல் செய்து, விவாதம் நடத்தி, அது நிறைவேறும் போது சட்டமாக மாறுகிறது. அதன்பின், அந்த சட்டத்துக்கு கவர்னர், ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அப்போது, சட்டம் முழு வடிவம் பெறுகிறது.சட்டசபையோ, பார்லிமென்ட்டோ கூடாத போது சூழ்நிலையை மற்றும் அவசர தன்மையை கருத்தில் கொண்டு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. 

அதாவது, சட்டசபை கூடும் வரை காத்திருக்காமல், அவசர தேவையை கருதி, அவசர சட்டம் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அவசர சூழ்நிலை உள்ளது என்பதில் கவர்னர், ஜனாதிபதி திருப்தியடைய வேண்டும். இந்த அவசர சட்டத்தின் ஆயுள், அதிகபட்சம் ஆறு மாதங்கள் தான்; சட்டசபை கூடியதும், ஆறே வாரங்களில் அவசர சட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும். அவசர சட்டம், சட்டசபையில் நிறை வேற்றப்பட்டு சட்டமாகலாம். இல்லையென்றால் புதியசட்டமும் கொண்டு வரலாம்.

முதல்வர் உறுதி

'தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் தொடர் பாக, இன்று துவங்க உள்ள தமிழக சட்டசபை கூட்டத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்படும்; மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்' என, முதல்வர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.
இந்த அவசர சட்டம் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தன் முகநுால் பக்கத்தில் கூறியுள்ளதாவது: 

அவசர சட்டம் என்பது தற்காலிகமானது தான்; 

ஆனால், இன்று கூடும் சட்டசபை கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு மாற்றாக, சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது; அப்போது, அது நிரந்தர மானதாகி விடும்.ஒரு சட்டத்தை எதிர்த்து, நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடியும். இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தால், அது வெற்றி பெறாது; 

ஏனென்றால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 254(2)ன் கீழ், ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனால், சிலரது யூகங்களுக்கு அடிப்படை இல்லை. ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியதாவது:

தமிழக அரசு, 2009ல், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம், மத்திய சட்டத்துக்கு முரணாக இருந்ததால் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இப்போது, மத்திய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளித்து, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால், மாநில சட்டத்துக்கும்,மத்திய சட்டத்துக்கும் இடையே முரண்பாடு எழாது.

சட்டசபை கூடாத போது அவசர சட்டம் தான் பிறப்பிக்க முடியும். சட்டசபை கூடும் போது அவசர சட்டத்தையே சட்டமாக நிறைவேற்றி னால் போதும்; அது, சட்ட வடிவம் பெற்று விடும். அவசர சட்டத்துக்கும், நிரந்தர சட்டத்துக்கும் இது தான் வித்தியாசம். இதை புரிந்து கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரமுள்ளது

உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டருமான பி.வில்சன் கூறியதாவது:அவசர சட்டம் பற்றிய முழு தகவல்களும் கிடைக்கவில்லை. அரசின் உத்தரவை பார்த்தால், இந்த அவசர சட்டம், நீதிமன்றத்தின் பரிசீலனையின் போது நிற்காது. ஏனென்றால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உள்ளது.

அதேநேரத்தில், அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால், பொதுவாக நீதிமன்றம் தடை விதிப்பதில்லை. அவசர சட்டம் பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்றால் தான் தடை விதிக்க முடியும். ஆனால், அவசர சட்டம் பிறப்பிக்க, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 22.01.2017


ஜல்லிக்கட்டு - நிபந்தனைகள்


ஜல்லிக்கட்டு நடத்த அரசு விதித்துள்ள நிபந்தனைகள்

சென்னை: தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை அடிப்படையாக கொண்டு, தமிழக கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை இயக்குனர் ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார்.

கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை இயக்குனர் ககன் தீப் சிங் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் - 1960ல் திருத்தம் ஏற்படுத்தி, தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. விலங்குககள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் பிரிவு - 3,துணை பிரிவு(2)ன்படி, தமிழக கவர்னர் சில விதிமுறைகளை உருவாக்கி உள்ளார். அவை வருமாறு:

1. விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 2, உட்பிரிவு( டிடி)ன் கீழ் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் தனி நபர் அல்லது அமைப்பினர் மாவட்ட கலெக்டருக்கு எழுத்து பூர்வமாகதகவல் தெரிவிக்க வேண்டும்.

2. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மனிதர்களுக்கு மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இத்தகவல்களை கலெக்டர் பதிவு செய்ய வேண்டும்.

3. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரும கலெக்டர், ஜல்லிக்கட்டு நடக்க உள்ள இடத்தை பார்வையிட வேண்டும்.

4. வருவாய், கால்நடை, போலீஸ் மற்றும் சுகாதார துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்ற ஒரு ஜல்லிக்கட்டு குழுவை கலெக்டர் ஏற்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளின்படி நடக்கிறது என்பதை அந்த குழுவினர் மேற்பார்வையிடுவர்.

5. கால்நடை துறையினரால், காளைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்பதை போட்டி நடத்துபவர்கள் உறுதி செய்ய வேண்டும். போதை பொருள் உள்ளிட்ட உணர்வுகளை துண்டும் பொருட்கள், காளைகளுக்கு கொடுக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

6. ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள், நோயால் பாதிக்கப்படவில்லை; போதை பொருட்களுக்கு ஆட்படவில்லை என்பதை, கால்துறை நிபுணர்களின் உதவியுடன் கலெக்டர் உறுதிசெய்ய வேண்டும்.

7. போட்டி நடத்துபவர்கள், திறந்வெளி மைதானத்தில் கீழ்கண்ட வசதிகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்.

நிபந்தனைகள்:

* மைதானத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன், காளைகளுக்கு, 20 நிமிட ஓய்வு அளிக்க வேண்டும்
*போட்டி துவங்குவதற்கு முன் காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில், ஒவ்வொரு காளையும் சாதாரண குணத்துடன் இருக்கும் வகையில் போதிய இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

*ஒவ்வொரு காளைக்கும், 60 சதுர அடி இடம் தர வேணடும். அவற்றுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் தந்து, அவை சாதாரண குணத்துடன் இருக்கும் வகையில் வசதி ஏற்படுத்தவேண்டும். காளையின் மன நல பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய, அதன் உரிமையாளர் அதன் அருகிலேயே இருக்க வேண்டும்.

*போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு காளையையும், கால்நடை துறையின் டாக்டர்கள் மற்றும் போலீசார் கண்காணிக்க வேண்டும்.

*காளை உடலின் மேற்பகுதியில் காயங்கள் ஏதும் உள்ளதா, காது அருகே காயம் உள்ளதா, வால் பகுதியில் காயம் உள்ளதா என்பதை கால்நடைதுறை டாக்டர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

*காயம் இருக்கும் காளையை, போட்டியில் பங்கேற்க தடை செய்ய வேண்டும்.

* காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் ஷாமியானா போட்டு இருக்க வேண்டும். மழை மற்றும் சூரிய ஒளியில் இருந்து காளைகளை பாதுகாக்க வேண்டும்.

*காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடம், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். காளைகளின் கழிவுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லாதஅளவுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும்.

திமில் பகுதியை பிடித்தபடி :

* தேவைப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும்.
8. காளைகளை, கால்நடைதுறையின் தகுதி வாய்ந்த கால்நடை டாக்டர்களின் ஆய்வுக்கு உட்படுத்துவது கட்டாயம்.

9. காளைகளின் பொதுவான உடல்நலம் ஆய்வு செய்ய வேண்டும், பரிசோதனை கூட ஆய்வையும் மேற்கொள்ள வேண்டும். சோர்வு, நீர்போக்கு பாதிப்பு, உடல் நல பாதிப்புள்ள காளைகளை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கூடாது.

10. போதை பாதிப்புக்கு உள்ளான காளையை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கூடாது.

11. வாடிவாசல் பகுதிக்கு காளையை கொண்டு சென்று, அதன் மூக்கணாங்கயிற்றை அதன் உரிமையாளர் தான் அகற்றி, மைதானத்திற்குள் அனுப்ப வேண்டும்.

12. காளைகளை பரிசோதனை செய்யும் இடம், ஷாமியானா வசதியுடன் இருக்க வேண்டும்.

13. போட்டி நடக்கும் மைதானம் குறைந்தபட்சம், 50 சதுர மீட்டர் இட வசதி கொண்டதாக இருக்க வேண்டும். 50 சதுர மீட்டர் பகுதிக்குள் தான், காளைகளை போட்டியில் பங்கேற்பவர்கள் ஏறுதழுவ வேண்டும்.

14. வாடிவாசலை மறித்து கொண்டு போட்டியாளர்கள் நிற்க கூடாது. அதே போல் காளைகள் வெளியேறும் பகுதியையும் அவர்கள் மறிக்க கூடாது. காளையின் திமில் பகுதியை பிடித்தபடி, 15.மீட்டர் அல்லது 30 வினாடிகள் அளவுக்கு அல்லது காளையின் மூன்று துள்ளல்கள் வரை போட்டியாளர்கள் காளையுடன் ஓட வேண்டும். போட்டியாளர்கள் காளையின் வால், கொம்பு மற்றும்வாலை பிடித்து அதன் ஓட்டத்தை தடுத்து நிறுத்த கூடாது. இந்த விதிகளை மீறும் போட்டியாளர்கள், தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுவார்கள். போட்டியாளர்கள் ஏறு தழுவும் முயற்சி மேற்கொள்ளும், 15 மீட்டர் இடம், மிருதுவான பகுதியாக மாற்றப்பட வேண்டும். அப்போது தான், காளைகளுக்கோ, போட்டியாளர்களுக்கோ காயம் ஏற்படாது.

15. ஏறு தழும் இடத்தில் இருந்து காளை சென்று சேரும் இடம் வரையான பகுதி காளை ஓடும் பகுதி எனப்படும். அப்பகுதி, பார்வையாளர் மாடத்தில் இருந்து, தள்ளி இருக்கும் வகையில்தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். காளைகள் அவிழ்த்து விடும் வாடிவாசல் பகுதியில் இருந்து, 15 மீட்டர் தூரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் பார்வையாளர்கள் எழுப்பும் சத்தம், காளைகளை மிரள செய்யாது.

16. ஏறு தழும் நடக்கும், 15 மீட்டர் பகுதிக்கு பிறகு காளையை தொடர்ந்து போட்டியாளர்கள் ஓட கூடாத. அவற்றை தொட கூடாத. காளை ஓடும் இடம், 100 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்க வேண்டும். வாடிவாசல் பகுதியில் இருந்து போட்டி முடியும் இடம் வரையான இடம் வரை காளை ஓடும் நேரம், 60 வினாடிகள் முதல், 120 வினாடிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

17. போட்டி முடியும் இடத்தில், காளையின் உரிமையாளர் அல்லது அவரது பிரதி நிதி மட்டுமே இருக்க வேண்டும். அங்கு, ஒவ்வொரு காளைக்கும், 60 சதுர மீட்டர் இடம் அளிக்க வேண்டும். அங்கு உணவு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். அங்கு, 20 நிமிடங்கள் காளைகள் ஓய்வு எடுத்த பிறகு வீட்டுக்க அழைத்து செல்லலாம்.

18. போட்டி முடியும் இடத்தில், ஷாமியானா வசதி இருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கால்நடை டாக்டர்கள், போலீசார் இருக்க வேண்டும்.

19. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் சான்றிதழ் பெற்று, பார்வையாளர் மாடத்தை அமைக்க வேண்டும்.

20. பார்வையாளர் மாடம், குறைந்தபட்சம், 8 அடி உயரத்தில், இரட்டை தடுப்பு வசதியுடன் இருப்பதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.

21. பார்வையாளர் மாடத்தில் எத்தனை பேர் இருக்கலாம் என்பதை பொதுப்பணித்துறையினரின் வழிமுறைகளின்படி கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.

22. போட்டியாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பிரத்யேக சீருடை, அடையாள அட்டை அணிந்து இருப்பதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். போட்டியாளர்கள்மற்றும் காளைகளின் கூடுதல் மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், டாக்டர்கள், கால்நடை டாக்டர்கள் போதிய அளவில் இருப்பதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். அவசர காலவெளியேறும் வழிகளை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 22.01.2017

Friday, January 20, 2017

மாநில தகவல் ஆணையம்


மாநில தகவல் ஆணையம்

நமது நாட்டில் நடைபெறுகின்ற ஊழல்களை வெளிக் கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகிப்பது, “தகவல் அறியும்  உரிமைச் சட்டம்-2005” என்றால், அது மிகையாகாது.

சமூக ஆர்வலர்களாக இருந்தாலும் சரி, சாதாரணமானவர்களாக இருந்தாலும் சரி, மேற்கண்ட சட்டத்தை பயன்படுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு இதனது பயன்பாடு இருந்திருக்கிறது. 

சிலரது பெயருக்கு முன்னால் இந்த சட்டத்தின் சுருக்கச் சொல்லானது  (RTI) இணைந்து, அவர்களுக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்த சட்டத்தைப் போல வேறு எந்த சட்டத்தையும் மக்கள் அதிக அளவு பயன்படுத்தி இருப்பார்களா? என்றால், அது சந்தேகமே.

ஆரம்பத்தில் இருந்த வேகம் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எதுவும்  இதனை செயல்படுத்தும் ஆணையத்தில்  தற்போது இல்லை என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, வருத்தம் தரக்கூடிய விஷயம்.

இருந்தபோதிலும் இந்த சட்டத்திற்கு ஆதரவு இன்னும் குறையவில்லை. பயன்படுத்துபவர்களும் அதனைப் பற்றி விசாரிப்பவர்களும் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள்.

மாநில தகவல் ஆணையத்திற்கென்று தனியாக  http://www.tnsic.gov.in/ இணையதளம் ஒன்று உள்ளது. 

அதற்குள் சென்று பார்த்தால் 

* தகவல் அறியும் உரிமைச் சட்டம்

* மாநில தகவல் ஆணையம்

* தகவல் எப்படி கோருவது

* தகவல் ஆணைய முடிவுகள் மற்றும் ஆணைகள்

* நடைபெற இருக்கும் வழக்கு பற்றிய விபரங்கள்

* மாநில தகவல் ஆணையத்தின் முகவரி

* மற்ற மாநில தகவல் ஆணையங்களின் இணைப்புகள்

ஆகியவற்றைப் பற்றிய ஏராளமான தகவல்கள் நமக்கு கிடைக்கிறது.

மத்திய தகவல் ஆணையத்தின் இணைப்பிற்கு இதனை கிளிக் செய்யுங்கள்.

http://www.cic.gov.in/

*****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி**

போலி மதிப்பெண் சான்றிதழ் - TNPSC நடவடிக்கை


போலி மதிப்பெண் சான்றிதழ் - TNPSC நடவடிக்கை

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தவருக்கு தேர்வு எழுத 7 ஆண்டுகள் தடை : டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை

சென்னை: போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்தவருக்கு 7 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதித்து டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை:

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2ஏ(நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) பதவிக்கான (2014-2015) நேரடி நியமனம் தேர்வுக்கு, விண்ணப்பத்தாரர் என்.பிரேம் என்பவர் எழுத்து தேர்வு முடிவுகள் குறித்த பதிவுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை திருத்தி போலி மதிப்பெண் சான்றிதழை தயாரித்துள்ளார். 

அதனை தேர்வாணையத்திற்கு சமர்ப்பித்த காரணத்தால் அவர் 7 ஆண்டுக்கு தேர்வாணையம் நடத்த போகும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளில்  கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது குறித்து அவர் மேல் குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தி்னகரன் நாளிதழ் - 21.01.2017

தலைமை செயலக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை


தலைமை செயலக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை

சங்க வீட்டுமனைகள் ஒதுக்குவதில் முறைகேடு தலைமை செயலக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை

சென்னை: சங்க வீட்டுனைகள் ஒதுக்குவதில் முறைகேடு செய்த தலைமை செயலக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
சென்னையை சேர்ந்தவர் சுந்தர் (59). 
சென்னை தலைமை செயலகத்தில் வேளாண்மை துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். சென்னை தட்டச்சர், சுருக்கெழுத்தர் கூட்டுறவு சங்க தலைவராகவும், வீட்டு வசதி வாரிய சங்க தலைவராகவும் இருந்தார். 

கடந்த 1997ம் ஆண்டு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில், வீட்டு வசதி வாரிய சங்கத்தின் மூலம், தன்னுடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என சென்னை கூட்டுறவு பதிவாளருக்கு கோரிக்கை வைத்தார்.

அதன்படி 22 ஏக்கர் நிலம் மாடம்பாக்கத்தில் வழங்கப்பட்டது. அதை 247 பேருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அதில், 38 பேருக்கு மனையை வழங்காமல் சுந்தர், தனது உறவினர்கள் பெயருக்கு முறைகேடாக மாற்றி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு சென்னை கூட்டுறவு சார்-பதிவாளர் சார்பில், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. 

போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி தேவநாதன், குற்றம் சாட்டப்பட்ட சுந்தர் மீது, அனைத்து தரப்பு சாட்சிகள், ஆதாரங்கள் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 7 ஆண்டு சிறை, 35 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 20.01.2017

பற்று அட்டை மூலம் முன்பதிவு


பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் 


பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் வழிமுறை: ரயில்வே விளக்கம்

பற்று அட்டை (டெபிட் கார்டு), கடன் அட்டை (கிரெடிட் கார்டு) ஆகியவற்றைப் பயன்படுத்தி "ஸ்வைப்' மெஷின் மூலம் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் வழிமுறைகளை ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் 10,000 "ஸ்வைப்' மெஷின்களை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், ரயில்வே கவுன்டர்களை அணுகி டிக்கெட்டை ரத்து செய்துகொள்ள முடியும். பற்று அட்டைகளை மீண்டும் எடுத்து வரவேண்டியதில்லை. இதையடுத்து, முன்பதிவு தொகை வாடிக்கையாளரின்  வங்கிக் கணக்கில் 7 தினங்களில் வரவு வைக்கப்படும்.

ஒருவேளை, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி பற்று அட்டை மூலம் முன்பதிவு செய்யவில்லை எனில், ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் நபர் "ஸ்வைப்' மெஷினில் தனது பற்று அட்டை அல்லது கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) பயன்படுத்த வேண்டும்.

அதன் மூலம், அந்த நபரின் வங்கி விவரங்கள் எடுக்கப்பட்டு முன்பதிவு செய்த தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

நன்றி : தினமணி நாளிதழ் - 21.01.2017

பொறியியல் கல்லூரி - நுழைவுத்தேர்வுகள்!


பொறியியல் கல்லூரி - நுழைவுத்தேர்வுகள்!

தேசிய அளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர ஐ.ஐ.டி.ஜே.இ.இ., எனும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பது பலரும் அறிந்ததே! முன்னணி நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், பிரத்யேகமாக நுழைவுத்தேர்வை நடத்தி மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குகின்றன. அவற்றில் சில குறிப்பிட்ட நுழைவுத்தேர்வுகள் குறித்த விபரம் இதோ...

Birla Institute of Technology and Science Admission Test (B.I.T,S.A.T) 

பிலானி, துபாய், கோவா மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (பிட்ஸ்) கல்வி நிறுவனத்தில், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு படிக்க ஆர்வம் கொண்ட மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.

தகுதிகள்: 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற ஒவ்வொரு பாடங்களிலும் தலா 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் அவசியம்.

தேர்வு முறை: 

அப்ஜெக்டிவ் அடிப்படையில் ஆன்லைன் தேர்வு. இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதிகளில் 80 கேள்விகள், காம்பிரிஹென்சன் (ஆங்கில மொழித் திறன் 15- கேள்விகள், லாஜிக்கல் ரீசனிங்- 10 கேள்விகள்) மற்றும் கணிதத்தில் 45 கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 6

விபரங்களுக்கு: www.bitsadmission.com

V.I.T. Engineering College Entrance Exam (V.I.T.C.E.E)

சென்னை, வேலூர், போபால் மற்றும் அமராவதி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் படிப்பில், மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் தேசிய பொது நுழைவுத்தேர்வு.

தகுதிகள்

பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் போன்ற பாடங்களில் தலா 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் அவசியம்.

தேர்வு முறை: 

மல்டிபில் சாய்ஸ் அடிப்படையில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் 40 கேள்விகள் வீதம் மொத்தம் 125 கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 28

விபரங்களுக்கு: www.vit.ac.in

S.R.M. Joint entrance examination (S.R.M.J.E.E)

இந்த தேர்வு மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியியல் படிப்பில் சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதிகள்

இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடங்களை முதன்மை பாடமாக பயின்று பிளஸ் 2வில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: 

அப்ஜெக்டிவ் அடிப்படையில், ஆன்லைனில் நடைபெறும் இத்தேர்வில், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து 315 மதிப்பெண்களுக்கு 155 கேள்விகள், மல்டிபில் சாய்ஸ் அடிப்படையில் கேட்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 2017

விபரங்களுக்கு: www.srmuniv.ac.in

Manipal university online entrance test (M.U.O.E.T)

மனிப்பால் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மனிப்பால் கல்வி நிறுவனங்களில் உள்ள பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வே எம்.யூ.ஒ.இ.டி.,!

தகுதிகள்:

12ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு திட்டம்: 

இயற்பியல் - 50 கேள்விகள், வேதியியல் - 50 கேள்விகள், கணிதம் - 70 கேள்விகள் மற்றும் ஆங்கில மொழி திறனாய்வு- 30 கேள்விகள் கேட்கப்படும். 

தேர்வு காலம் 2.30 மணி நேரம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 11

விபரங்களுக்கு: http://manipal.edu/

Amirta engineering entrance exam (A.E.E.E)

கொல்லம், பெங்களூரு மற்றும் கோவையில் உள்ள அமிர்தா விஷ்வா வித்யாபீத் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் கொண்ட பி.டெக்.., பட்டப்படிப்பிற்கான இடங்கள், ஏ.இ.இ.இ., நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

தகுதிகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தலா 55 சதவீத மதிப்பெண்களுக்கு குறைவில்லாமல் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:

 கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31

விபரங்களுக்கு: www.amrita.edu

sathyabama university

சென்னையில் உள்ள இப்பல்கலைக்கழகம் நடத்தும் அகில இந்திய நுழைவுத் தேர்வின் மூலம், இளநிலை பி.இ., மற்றும் பி.டெக்., பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதிகள்:

 பிளஸ் 2வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31

விபரங்களுக்கு: www.sathyabamauniversity.ac.in

நன்றி : தினமலர் (கல்விமலர்) -20.01.2017

Thursday, January 19, 2017

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம்


நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்னைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிகமுறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் புகார்தாரரே புகார் தாக்கல் செய்தும் அவரே வாதிட்டும் நீதிபெற முடியும். 

மருத்துவக்குறைபாடுகள், வங்கிகள், வீடு கட்டிக் கொடுப்பவர் பிரச்னைகள் மற்றும் பொருள்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய சிக்கல்களுக்கு நீதி பெற நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.

முக்கிய விதிகள்:-

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”2(7)” நுகர்வோர் மன்றங்கள் எல்லாம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இல் பிரிவு 27(2) இன்படி முதல் நிலைக் குற்றவியல் நீதிமன்றமாக செயல்படவும், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கவும் அல்லது அதிகபட்சம் ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம்) அபராதம் விதிக்கவும் அதிகாரம் உள்ளது. 

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”3” அடுக்கு நீதி வழங்கும் நுகர்வோர் மன்ற அமைப்புகள் பண வகையிலான அதிகார வரம்பு :-

* மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் 

* மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் 20 இலட்சத்திற்கு மேல் ஒரு கோடி வரை.

* தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஒரு கோடிக்கு மேல்.

* மேல் முறையீடு  :- உச்சநீதிமன்றம் 

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 

பிரிவு 2(b):- 

புகார்தாரர்(Complainant) என்பவர் யார்? எந்தவகையான புகார்தாரர்கள் புகார் கொடுக்க உரிமை உள்ளது?

* நுகர்வோர் புகார் தாக்கல் செய்யலாம்.

* ஒரே நலனில் அக்கறை கொண்ட நுகர்வோர் பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இருக்கையில், ஒருவர் அல்லது பலர் இச்சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம்.

* நிறுவனச் சட்டம் (Company Act) 1956 இன் கீழ் அல்லது நடைமுறையிலுள்ள வேறு சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற எந்த நுகர்வோர் அமைப்பும் (Any Voluntary Consumer Association) புகார் செய்யலாம்.

* மத்திய அரசாங்கம் அல்லது ஏதேனுமொரு மாநில அரசாங்கம் புகார் செய்யலாம்.

* நுகர்வோர் (Consumer) இறப்பு (Death) ஏற்படும் நிலையில், அவரது சட்ட வாரிசு அல்லது பிரதிநிதி (Legal Heir) தாக்கல் செய்யலாம்.

* மேலும், நுகர்வோர் நேரிடையாகவோ அல்லது அவருடைய சார்பிலோ பொருட்களுடைய மதிப்பீட்டை அனுசரித்து அல்லது சேவையை அனுசரித்து நஷ்ட ஈடு தொகை பெறமுடியும்.

நுகர்வோர் (Consumer) என்பவர் யார் என்ற விளக்கத்தை கீழ்கண்ட பிரிவுகளில் காண்போம் :-

பிரிவு.2(d)(i):- 

பொருட்களை நுகர்வோர், பணம் செலுத்தி விலைக்கு வாங்குவது  (அ) பகுதி அளவு பணம் செலுத்துவது, மற்றும் பகுதி வாக்குறுதியின் பேரில் வாங்குவது (அ) தள்ளி பணத்தைச் செலுத்தப்படும் என்ற முறையில் பொருட்களை வாங்குவது; அத்தகைய பொருட்களை பயன்படுத்துவர் இந்த விளக்கத்தின் கீழ் வருகிறார். (அதாவது) பொருட்களை விலைக்கு வாங்கியவர் (அ) பாதி வாக்குறுதியின் பேரிலும், பாதி பணம் செலுத்தியதின் பேரில் சேர்த்து ‘நுகர்வோர்’ என்ற விளக்கத்திற்கு வருகிறார். ஆனால், நுகர்வோர் என்பவர், அத்தகைய பொருட்களை ‘மறுவிற்பனைக்கு வாங்குபவரும், (அ) ’வியாபார நோக்கத்திற்கு  வாங்குபவரும், ‘நுகர்வோர்’ பிரிவில் வருவதில்லை.

பிரிவு.2.(d)(ii):-  

பணம் செலுத்தி, ‘சேவையை’ வாடகைக்கு பெறுவது, (அல்லது) பயன் பெறுவது:- (அல்லது) பாதியை செலுத்தப்படுவது மற்றும் பாதி வாக்குறுதியின் பேரில் (பயன்பெறுவது)  (அல்லது) வேறு எந்த முறையின் கீழ் பணத்தை தள்ளி (பிறகு) செலுத்தப்படுதல், மற்றும்  பணம் செலுத்தி ‘சேவை’ பெறுதல் (அல்லது) வாக்குறுதியின் பேரில் செலுத்துவது, (அல்லது) பாதி செலுத்துவது மற்றும் பாதியை வாக்குறுதியின் பேரில் பெறுதல் செலுத்துவது, (அல்லது) வேறு எந்த முறையிலும் பணம் தள்ளி செலுத்துவது, பெறுபவர்களை தவிர அத்தகைய (Such Services) ’சேவைகளின்’ பலன்களை பெறுபவர்களையும் ‘(Benificiary)’ சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

பிரிவு.2(e) - நுகர்வோர் பிரச்சனை என்றால் என்ன?:-

நுகர்வோர், எழுத்து மூலம் புகார் (குறைபாடுகள்) (Complaint) வேறு நபர் மீது கொடுப்பது (அல்லது) அந்தப்புகாரில் ‘மறுப்பது’ அல்லது குற்றச்சாட்டுகளை எதிர்ப்பது என்பதாகும். அதாவது, நுகர்வோர் அல்லது பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்பு அல்லது மத்திய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கம் மேற்படி ’புகார்‘ (Complaint) தாக்கல் செய்வது, இந்த விளக்கத்தில் உள்ளடங்கியுள்ளது. எனவே, பிரச்னை (Dispute) என்ன என்பதை விரிவாக சொல்லவேண்டுமென்றால், ஒரு நபர் பரிகாரம்(Claim) கோருவது அந்த கோரிக்கையை மற்ற நபர் மறுப்பது அல்லது ’பொய்’ என்று கூறுவது அல்லது ‘உண்மை’ என்று கூறுவதாகும். 

‘நுகர்வோர்’ பிரச்னையில்’, ‘அசையா சொத்துக்கள் பற்றியும்’ அல்லது ‘அசையா சொத்துக்களின் விலை பற்றியும்’ எழுகின்ற பிரச்னைகள், வருவதில்லை. ஆகவே, நுகர்வோர் பிரச்னை பற்றி நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் சிவில் நீதிமன்றம் (Civil Court) போல புகாரில் தீர்ப்புக்காக ‘எழுவினாக்கள்’ (Issues) எழுதப்பட வேண்டியதில்லை. ஆனால், பிரச்னை பற்றி தீர்மானிக்கப்பட வேண்டிய அம்சங்கள் எழுதப்பட வேண்டும்(Points for determination).

பிரிவு.2(f) குறைபாடு (பொருட்கள்):- 

குறைபாடு என்றால், ‘தவறானது’, நேர்த்தியில்லாமல் இருப்பது’ அல்லது ‘தரத்தில்’ குறைபாடு உள்ளது, எண்ணிக்கைக் குறைபாடு, பொருளின் உள்திறன், சுத்தம் (Purity) அமலில் உள்ள சட்டத்தின்படி ‘தகுதி உடையவையாக’ இல்லாமல் இருத்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும், அந்த ‘குறைபாடு எந்த ஒப்பந்தத்தின் கீழ் அல்லது வெளிப்படையாகவும் அல்லது மறைமுகமாகவும் பொருட்கள் சம்பந்தமாக வியாபாரி (உற்பத்தியாளர்) என்ற வகையில் கோருகின்ற முறையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

நுகர்வோர் சட்டத்தில் நஷ்ட ஈடு கோர முடியாத சேவைகள்:-

மேற்குறிப்பிட்ட சேவைகள் போல் இல்லாமல் இலவசமாக பெறும் சேவை மற்றும் தனிப்பட்ட சேவை ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சேவைக்கும் பொருந்தாது. விதி விலக்காக அரசு அலுவலர் அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை எடுத்துக்கொண்டால் இலவச சிகிச்சையாகக் கருதமுடியாது. அதில் சேவைக் குறைபாடு இருந்தால் அந்த அரசு அலுவலர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெறலாம். 

மேலும் வாடகைதாரர் வீட்டு உரிமையாளர் சேவை குறைப்பாட்டிற்கும் நுகர்வோர் நீதிமன்றத்தில் பரிகாரம் கோரமுடியாது. இது போன்ற பல விரிவான சட்ட உரிமைகளை உள்ளடக்கியதே நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும். எனவே மக்கள் அனைவரும் நுகர்வாளர்களாக இருக்கும் பட்சத்தில் தாங்களே விரிவாக இச்சட்டத்தின் விளக்கத்தைப் பெற்று அல்லது வழக்கறிஞர் மூலமாக வழக்குத் தாக்கல் செய்து இழப்பீடு பெறலாம்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 18.01.2017



கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை!


கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை! 

நலம் நல்லது-54 
நம் பாரம்பர்யம், கருத்தரித்த பெண்களுக்காக எத்தனையோ வைத்திய முறைகளைத் தேடித்தேடிச் சொல்லியிருக்கிறது. அவற்றையெல்லாம் நவீன மருத்துவ முறை வந்த பிறகு, நாம் மறந்துவிட்டோம். 
கர்ப்பிணிப் பெண்கள் ஆங்கில மருத்துவத்தோடு, நம் பாரம்பர்ய மருத்துவ விஷயங்களையும் சேர்த்துக் கடைப்பிடிப்பது, ஆரோக்கியமான குழந்தைக்கும் எளிதான பிரசவத்துக்கும் வழிவகுக்கும். அவற்றைப் புறக்கணிக்கவே கூடாது. 

மகப்பேறு மருத்துவம், மிக அவசியமான ஒன்று. குடும்ப மருத்துவரை அணுகி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிந்துகொள்வது; தன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைச் சரிபார்ப்பது; சர்க்கரைநோய் இருக்கிறதா, உயர் ரத்த அழுத்தத்தின் அளவு என்ன என அறிந்துகொள்வது; தொற்றுநோய் ஏதாவது இருக்கிறதா எனப் பரிசோதனை செய்வது... எல்லாமே கர்ப்பிணிப் பெண்ணுக்கு முக்கியம்தான். 

ஆனால், பெண் கருத்தரித்திருக்கும் காலம் முழுவதும் மருத்துவமனையையும் மருத்துவரையும் மட்டுமே நம்பி இருக்கும் சூழல் இன்று இருக்கிறது. 

நம் தமிழர் மருத்துவம் கர்ப்பிணிப் பெண்களுக்கு சில நல்ல வழிகளைக் காட்டியிருக்கிறது. அவற்றைப் பின்பற்றினால் பிரசவம் சுகமாகும். அவற்றில் சில... 

* கர்ப்பிணிப் பெண்கள் மாதுளையை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பகால வாந்தி, ரத்தசோகை, முதல் ட்ரைமெஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுக்கள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும். 

* காரணமற்ற வெள்ளைப்போக்குக்கு, முளைகட்டிய வெந்தயக் கஞ்சி, உளுந்தங்கஞ்சி சிறந்த தீர்வைத் தருபவை. 
* கர்ப்பகால ஆரம்பத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு, கர்ப்பப்பையில் ஏற்படும் தேவையற்ற சுருக்கம் ஆகியவற்றுக்கு கொட்டையுள்ள கறுப்பு பன்னீர் திராட்சை நல்லது. 

* தாமரைப்பூ, தக்கோலம், நெய்தல் கிழங்கு, செங்கழுநீர்க் கிழங்கு ஆகியவை கர்ப்பகால சங்கடங்களில் இருந்து மீள சித்த மருத்துவம் சொல்லும் மருத்துவ உணவுகள். இவை ஃபோலிக் அமிலம் நிறைந்தவை; வலி நிவாரணி தன்மை உடையவை; வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றல் உடையவை. இரும்பு மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தவை. 

* வண்ணங்கள் நிறைந்த பழங்கள், கீரை, மீன், முட்டை, பால், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி சாதம் ஆகியவை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடவேண்டியவை. 

* விலை உயர்ந்த எந்த டானிக்குகளும் தர முடியாத பயனை, முருங்கைக்கீரை, பாசிப் பருப்பு கலந்த பொரியல், கேழ்வரகு அடை ஆகியவை தந்துவிடும். 

* முன் பக்கம் சிறுநீர்ப்பையும் பின் பக்கம் மலக்குடலும் அழுத்தப்படுவதால், முறையே நீர்ச் சுருக்கமும் மலச்சிக்கலும் ஏற்படுவது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சர்வ சாதாரணம். இதற்கு, தினமும் நான்கு லிட்டர் தண்ணீர், அத்திப்பழம், வாழைத்தண்டு பச்சடி, கனிந்த வாழைப்பழம், மருத்துவர் ஆலோசனைப்படி இரவில் கடுக்காய் பிஞ்சு ஆகியவற்றைச் சாப்பிட்டால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். 

* கர்ப்ப காலத்தில் மட்டும் சில பெண்களுக்கு சர்க்கரைநோய் (Gestational Diabetes) ஏற்படும். இதற்காகக் கலங்கத் தேவையில்லை. இந்தப் பெண்களுக்கு உரிய மருத்துவமும் வெள்ளைச் சர்க்கரை சேர்க்காத உணவையும் கொடுக்கவேண்டியது அவசியம். தினமும் உணவில் வெந்தயத்தையும் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக்கொள்வது கூடுதலாக நல்லது. 

அறிவியல் வசதி இல்லாத அந்தக் காலத்திலேயே 

`செப்பியதினம் ஒன்றில் கடுகு போலாம்’ என 23 மி.மீ அளவே இருக்கும் கர்ப்பப்பையையும்,
`பூவிலே இரண்டு திங்கள் கழுத்துண்டாம், 
புகழ் சிரசு முறுப்பாகும்’ என 
ஐந்தாம் மாதம் காது, மூக்கு உதடும், 
ஏழாம் மாதம் தலைமுடியும் தெரியும் என, 
கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு அகத்தியர் வல்லாதியிலும், 
பராசர சேகரத்திலும், 
யூகி சிந்தாமணியிலும் 
சொன்னவர்கள் நம் சித்தர்கள். 

அவர்கள் சொன்ன வழிமுறைகளைக் கடைப்பிடிப்போம்! ஆரோக்கியமான பிரசவத்துக்கு வழி வகுப்போம்! 

தொகுப்பு: பாலு சத்யா

நன்றி : விகடன் செய்திகள் -20.01.2017

நல்ல தேனை கண்டறிவது எப்படி?


நல்ல தேனை கண்டறிவது எப்படி?

தேன், நினைத்தாலே இனிக்கும் இயற்கையின் அற்புதம். தேனை விரும்பாதவர்கள் குறைவு. கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் என்றால் அது தேன் மட்டும்தான். பழங்காலம் தொட்டே மருந்திலும், விருந்திலும் தவறாமல் இடம்பெற்றிருந்த தேனில் கலப்படம் என்பதும் ஹைதர்காலத்து பழைய சமாச்சாரம்தான். 

இன்றைய வர்த்தகமயமான சூழலில் வளர்ப்புத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் பெருகிவிட்டது. கூடவே கலப்படமும் இவற்றில் நிறையவே நடப்பதாகக் கூறப்படுகின்றது. இவை கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு வண்ணமயமான ஸ்டிக்கர்களுடன் கணஜோராக காட்சியளிக்கின்றன. 

கிட்டத்தட்ட  எல்லா பாட்டில்களின் லேபிளின் மீதும் 'ஒரிஜுனல் நேச்சுரல் ஹனி' என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சூப்பர்மார்க்கெட்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தேனின் பளபளப்பான நிறம் நம் அனைவரின் கண்களையும் ஈர்க்கவே செய்கின்றது.  ஆனால், எளிதில் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன்தான். 

வணிக நோக்கத்துக்காக சில நிறுவனங்கள் தேனில் வெள்ளை சர்க்கரையைக் கலந்து விற்பனை செய்து வருகின்றன. தங்களது வியாபாரத்தைப் பெருக்க, இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தனியார் நிறுவனங்கள் சாமர்த்தியமாக மீறுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன.

 இதுபோன்ற கலப்படங்களின் விளைவாக தேனுக்கான மகத்துவமும், மருத்துவ குணமும் இல்லாமல் போகிறது. மேலும் தேனில் மற்ற சில கலப்படங்களும் நடக்கின்றன. இந்தக் கலப்படங்களைக் கண்டறிவது எப்படி, நல்ல தேனை எப்படிக் கண்டுப்பிடிப்பது போன்ற விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். 

➽* ஒரு  சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விடவும்.  தண்ணீரில் அது கரைந்தால், அது கலப்படம் செய்யப்பட்டது. கரைந்து போகாமல் நேராக பாத்திரத்தின் கீழே சென்று தங்கினால், அது சுத்தமான தேன்.

➽*சுத்தமான காட்டன் துணியை தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பித்தால், நன்றாக சுடர்விட்டு பற்றி எரியும். அப்படி எரிந்தால் அது சுத்தமானது. 

➽* சிறிதளவு தேனை எடுத்து வாணலியில் சூடு செய்தால், அதன் அடர்த்தி குறைந்து, உருகிவிடும். பின்னர் அடுப்பை அணைத்து விடவேண்டும். சுத்தமானதாக இருந்தால்,  சில மணி நேரங்களானதும், பழைய அடர்த்தியை  அடைந்துவிடும். கலப்படம் செய்யப்பட்டதாக இருந்தால், இழந்த அடர்த்தியைத் திரும்பப் பெறாது.

➽* தேனை கண்ணாடி ஜாரில் ஊற்றி, சில மணிநேரம் வைத்திருக்க வேண்டும். சுத்தமான தேனாக இருந்தால், அடர்த்தி ஒரே சீராக இருப்பதுடன், நிழல் போன்ற அடுக்குப் படலம் ஏற்படாது. தேனின் நிறம் ஒரே சீராக இருக்கும். கலப்படம் செய்த தேனின் அடர்த்தி மாறுபடும். 

➽* சுத்தமான தேனுக்கு அடர்த்தி அதிகம். அதை ஸ்பூனில் எடுத்து கிண்ணத்தில் விட்டால், மெல்லிய நூல் இழை போல் இறங்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன், சொட்டு சொட்டாக வடியும். 

➽* சுத்தமான தேனை ஒரு பாத்திரத்தில் இருந்து  மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றினால், அதன் அடர்த்தி காரணமாக உடனே ஒட்டாமல் குமிழ் போல பரவி, பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப தேன் சம நிலை பெற சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். கலப்படம் மிகுந்த தேனை பாத்திரத்தில் ஊற்றினால், உடனேயே தண்ணீர் போல பாத்திரத்தில்  சமநிலையில் இருக்கும்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

நன்றி : விகடன் செய்திகள் - 19.01.2017

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், தொடரும் தடை


அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், தொடரும் தடை

தமிழகத்தில் விவசாய நிலங்கள் அதிகமாக வீட்டு மனை ‘லே – அவுட்’ ஆக மாற்றப்பட்டு, அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்பட்ட நிலையில், விளைநிலங்களை அங்கீகாரம் இல்லாத மனைகளாக மாற்றி விற்பனை செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 
அதேசமயம், ‘2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைகளை, மறு பத்திரப் பதிவு செய்ய விலக்கு அளிக்கப்பட வேண்டும்’ என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்வதற்கு கூடுதல் விவரங்களைக் கேட்டனர் உயர் நீதிமன்ற நீதிபதிகள். கூடுதல் விவரங்களை அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தது. 

இந்த நிலையில், இந்த பிரச்னையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வக்கீல் யானை ராஜேந்திரன், புதிதாக இன்னொரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ‘‘முறையாக அங்கீகாரம் பெற்று வீட்டுமனைகளை உருவாக்கவேண்டும் என்றால், ஒரு ஏக்கர் நிலத்துக்கு சுமார் ரூ.20 லட்சம் செலவு செய்ய வேண்டும். அதை செய்யாமல், முறைகேடாக     லே -அவுட்களுக்கு அங்கீகாரம் பெற்றுவிடுகின்றனர். எனவே, மனைகளுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். விவசாயம் செய்யப்படாமல் தரிசு நிலமாகக் கிடந்தால், அதை அரசு கையகப்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கானது கடந்த 9-ம் தேதியன்று தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி     எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் ஒருவர், ‘‘பல அடுக்கு மாடி வீடுகளை என் கட்சிக்காரர் கட்டி உள்ளார். பத்திரப் பதிவுக்குத் தடை விதித்து உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளதால், இந்த வீடுகள் எல்லாம் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளன’’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘‘அந்த அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலம் அங்கீகாரம் பெற்ற வீட்டுமனையா?’’ என்று கேட்டனர். அதற்கு, ‘‘அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை’’ என்றார் வக்கீல்.

‘‘இப்படி விளைநிலங்களில் கட்டடங்கள் கட்டினால் விவசாயம் என்னவாகும்? நாளை உணவுக்கு என்ன செய்வீர்கள்?’’ என்று நீதிபதிகள் கேட்டனர்.

அப்போது மற்றொரு வக்கீல், ‘‘உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவினால், நிலங்களை விற்பனை செய்ய முடியாமல் இருவர் இறந்துள்ளனர்’’ என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், ‘‘நிலத்தை வாங்கும் போது அது எந்த வகையானது என்று பார்க்க வேண்டும். அதைச் செய்யாமல், இதுபோன்ற குற்றச்சாட்டைச் சுமத்தக்கூடாது. இவர்களுக்காக சட்டத்தை வளைக்க வேண்டும் என்கிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது மனுதாரர் யானை ராஜேந்திரன், ‘‘உயர் நீதிமன்றம் தடை விதித்ததால்தான், சுமார்  3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காப்பாற்றப்பட்டன. மத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அண்மையில் அறிவித்தது. இந்தப் பணத்தை மாற்ற கால அவகாசமும் வழங்கியது. இந்த கால அவகாசத்தின்போது, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக உள்ள விவசாய நிலத்தை வாங்கி இருப்பார்கள். நீதிமன்றம் விதித்த தடையால் இந்த விளைநிலங்கள் தப்பித்துள்ளன’ என்றார்.

தமிழகத்தில் நிலங்களை எவ்வாறு வகைப்படுத்துவது, அங்கீகாரமற்ற மனைகளை எவ்வாறு வரையறை செய்வது என்பது குறித்து பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் இருவார கால அவகாசம் கேட்கப் பட்டதால், இந்த வழக்கு விசாரணை வருகிற   30–ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை அங்கீகாரம் இல்லாத வீடு, அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.

வரும் முறையாவது தமிழக அரசின் சார்பில் சரியான திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதே லட்சக்கணக்கான வர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் எவ்வளவு?

11.00% – தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளாக மாறியுள்ள விளைநிலங்கள்.

25 லட்சம் ஏக்கர் – லே அவுட்களுக்காக தமிழகம் முழுக்க அழிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள்.

13.28 லட்சம் – தமிழ்நாட்டில் உள்ள அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளின் எண்ணிக்கை.

நன்றி : நாணயம் விகடன் - 22.01.2017

வங்கியில் டெபாசிட்… வருமான வரி நோட்டீஸ் வந்தால்


வங்கியில் டெபாசிட்… வருமான வரி நோட்டீஸ் வந்தால் 

பழைய 500, 1,000 ரூபாய் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பலரும் அதிகத் தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கிறார்கள். ஏறக்குறைய 60 லட்சம் பேர் சுமார்  7 லட்சம் கோடி ரூபாயை வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 3 முதல் 4 லட்சம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருக்கலாம் என வருமான வரித் துறை சந்தேகிக்கிறது.

இந்த நிலையில், நடப்புக்கணக்கில் ரூ.12.5 லட்சம், சேமிப்புக் கணக்கில் ரூ.2.5 லட்சம் தொகைக்கு மேல் டெபாசிட் செய்திருந்தால், அந்த விவரங்களை வங்கிகள், வருமான வரித் துறைக்கு அனுப்பி வருகின்றன. இதுபோன்றவர்களுக்கு வருமான வரித் துறையிடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வர வாய்ப்பு இருக்கிறது.

இப்படி வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும், எப்போதெல்லாம் நோட்டீஸ் வரும் என்பதை சென்னையின் முன்னணி ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார் விளக்கி சொன்னார்.

‘‘கிடைத்த வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருப்பது, வருமானத்தைத் தவறாக கணக்குக் காட்டி இருப்பது, செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் இருப்பது, குறிப்பிட்டத் தொகைக்கு மேல் வருமானம் வந்தும் வருமான வரித் துறையிடம் வருமான வரித் தாக்கல் செய்யாமல் இருப்பது, தவறாக வரிக் கணக்குத் தாக்கல் செய்வது, தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்வது போன்ற காரணங்களுக்காக வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வரும். 

இப்படி நோட்டீஸ் வந்தவுடன் பதறவோ, பரபரப்படையவோ வேண்டாம். வருமான வரித் துறையிடமிருந்து தேவை இல்லாமல் யாருக்கும் நோட்டீஸ் வராது. உங்கள் வரவு செலவுக் கணக்கில் வழக்கத்துக்கு மாறாக ஏதோ ஒரு விஷயம் நடந்திருந்து, அதற்கான விளக்கத்தைப் பெற வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்புகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

ஒருவருக்கு நோட்டீஸ் வந்தவுடன், என்ன காரணத்துக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குப் புரியவில்லை எனில், ஒரு ஆடிட்டரிடம் சென்று, இந்த நோட்டீஸ் ஏன் வந்திருக்கிறது என்று கேட்டு, விளக்கம் பெறலாம். வருமான வரித் துறை கேட்கும் கேள்விகளுக்கு என்னென்ன ஆதாரங்கள் உங்களிடம் உள்ளது என்பதை எடுத்துச் சொல்லலாம். 

வரவு செலவுக் கணக்கைப் பொறுத்தவரை, ஆடிட்டரிடமோ அல்லது வருமான வரித் துறையினரிடமோ மறைக்க முயற்சிப்பது குற்றமாகும். எனவே, வரிச் சட்டத்துக்குட்பட்டு, ஆடிட்டர் தரும் யோசனைகளின்படி தகுந்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு வருமான வரித் துறை அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிப்பதன் மூலம் வருமான வரித் துறையினர் அனுப்பும் நோட்டீஸை எந்தப் பதற்றமும் இல்லாமல் எதிர்கொள்ளலாம்.

வருமான வரி வரம்பைவிட சிறிதளவு தொகை மட்டுமே வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் பட்சத்தில், அதற்கான விளக்கத்தை நீங்களே தந்துவிட முடியும் என்று நம்பினால், நேரடியாக வருமான வரித் துறை அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் தரலாம்.

ஆனாலும், வருமான வரி தொடர்பாக சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால், அந்த விஷயங்களைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்.

  வியாபாரிகளுக்கு!

பொதுவாக, 1 கோடி ரூபாய்க்கு மேல் டேர்ன் ஓவர் இருந்தால், கட்டாயமாக ஒரு ஆடிட்டரிடம் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். மொத்த கணக்குவழக்குகளை ஆடிட்டர் சரிபார்த்து கையொப்பம் இட்டிருக்க வேண்டும். இதுவே 1 கோடி ரூபாய்க்குக் கீழ் என்றால், வியாபாரிகள் தங்களுடைய வரவு செலவுப் புத்தகங்களைச் சரியாக வைத்திருந்தால் போதும்.

ஓர் உதாரணம் மூலம் இதைப் புரிந்துகொள்ள முற்படுவோம். 

ஒருவரின் நிறுவனம் அல்லது கடையில் மாத டேர்ன் ஓவர் சராசரியாக ரூ.5 லட்சமாக இருந்து வருவதாக வைத்துக் கொள்வோம். திடீரென்று ரூ.5 லட்சத்துக்கு மேல் வியாபாரக் கணக்குகளின் மூலம் கிடைத்ததாக டெபாசிட் செய்தால், வரித் துறையினர் நிச்சயம் கேள்விக் கேட்க வாய்ப்பிருக்கிறது. அப்படிக் கேட்கும்போது வியாபாரிகள் அவர்களின் பிரச்னைகளை விளக்கமாக எடுத்துச் சொல்லலாம். பிசினஸில் ரொக்கத்தின் தேவை எவ்வளவுக்கு இருந்தது என்பதை எல்லாம் வியாபாரிகள்தான் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

  கடன்கள்! 

நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ நீங்கள் கடன் தந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் தந்த பணத்தை கடன் வாங்கியவர் உங்களுக்குத் திரும்பத் தருகிறார். அவர் தந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மொத்தமாக வங்கியில் டெபாசிட் செய்தால், வருமான வரித் துறையினர் கேள்வி எழுப்புவார்கள்.

பொதுவாக, வருமான வரி சட்டப்படி, ரூ.20,000-க்கு மேல் மனைவி, குழந்தை என்று எந்த ரத்தபந்தமாக இருந்தாலும், வங்கி வரையோலை மற்றும் காசோலை அல்லது நெட்பேங்கிங் மூலமாகத்தான் கடன்  கொடுக்க வேண்டும்.  அப்போது தான் கடன் கொடுக்கப்பட்டதாக வருமான வரித் துறையினர் கணக்கில் எடுத்துக் கொண்டு, திரும்பப் பெறும் கடன் தொகையை வருமானமாகக் கருதமாட்டார்கள். அப்படி இல்லாதபட்சத்தில், நீங்கள் கடன் கொடுத்து, திரும்பப் பெற்ற தொகையை வருமானமாகக் கருதி, வரி விதிக்கவே செய்வார்கள்.   

அதுமட்டுமின்றி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ரொக்கமாகக் கடன் வழங்கி இருப்பது வரித் துறையினருக்குத் தெரியவந்தால், கொடுக்கப்பட்ட கடன் தொகைக்குச் சமமான தொகை அபராதமாக விதிக்கப்படும்.

எனவே, உறவினர்களுக்கு ரொக்கமாக கடன் கொடுத்திருக்கும்பட்சத்தில், வருமான வரித் துறையினருடன் வாக்குவாதம் செய்யாமல், திரும்ப வந்த தொகையை வருமானமாகக் காட்டி, அதற்கான வரியைக் கணக்கிட்டு செலுத்திவிடுவது உத்தமம். இது தனி நபர்கள் மற்றும் வியாபாரிகள் இருவருக்கும் பொருந்தும்.

 சொத்துகள்!

நடுத்தர வருமானப் பிரிவினர் செய்யும் தவறுகளில் மிக முக்கியமானது, வீடு மற்றும் மனை வாங்கும்போது ரொக்கமாகப் பணம் தருவதுதான். தங்கம் தொடங்கி வீடுகள், ரியல் எஸ்டேட் சொத்துகள் வரை எல்லாவற்றையும் ரொக்கமாக வாங்குவதையே நம்மில் பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

வருமான வரிச் சட்டப்படி ரூ.20,000-க்கு மேல் ரொக்கமாகத் தந்து பொருட்களை வாங்கும்போது காசோலை அல்லது வரையோலையாகத்தான் செலுத்த வேண்டும். அதேபோல்,  ரூ.20,000 ரூபாய்க்கு மேல் சொத்துகளை விற்கும்போதும் நாம் பணமாக வாங்காமல், காசோலை அல்லது வங்கி வரையோலையாகத்தான் பெற வேண்டும்.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 95 சதவிகித மக்களுக்கு இப்படியொரு சட்டம் இருப்பதே தெரியவில்லை. காரணம், இந்திய மொத்த மக்கள் தொகையில் வெறும் 5.17 கோடி பேர்தான் வரிக் கணக்குத் தாக்கல் செய்கிறார்கள்.

 தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்!

தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்று, கையில் ரொக்கமாகப் பணத்தை வைத்திருந்தால், அவை இதர வருமானம் என்று கருதி, 30% வரி விதிக்கப்படும். அதோடு, எந்த நிதி ஆண்டில் சொத்து விற்கப்பட்டதோ, அதற்கு அடுத்த நிதி ஆண்டின் முதல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதத்துக்கும், கட்டவேண்டிய வரிக்கு வருமான வரி சட்டப் பிரிவு 234A, 234B, 234C-ன்படி 1% வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

சொத்துகளை (தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்) காசோலை அல்லது டிடி-யாகப் பெற்றிருந்தால், அதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 20% செலுத்தும்படி வரித் துறையினர் ஏற்கெனவே அறிவுறுத்தி இருப்பார்கள்.

ஒருவேளை, இப்படி நீங்கள் செய்யாமல் விட்டிருந்தால், இப்போது அந்தப் பணத்துக்கு 20% நீண்ட கால மூலதன ஆதாய வரி மற்றும் எந்த நிதி ஆண்டில் சொத்து விற்கப்பட்டதோ, அதற்கு அடுத்த நிதி ஆண்டின் முதல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதத்துக்கும் 1% வட்டி செலுத்த வேண்டியிருக்கும். 

விவசாயிகளுக்கு!

இதுவே விவசாய நிலமாக இருந்து, அவர்கள் கிராமத்தில் எந்த ஒரு வங்கியும் இல்லாத நிலையில், நிலத்தை விற்றிருந்தால், கிடைத்த தொகையை ரொக்கமாகப் பெற்றிருக்கலாம். ஆனால், விவசாய நிலத்துக்கு இருக்கும் பட்டா மற்றும் சிட்டா போன்றவற்றில் ‘விவசாய நிலம்’ என்று குறிப்பிடப்பட்டு, பயிர் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போது இந்தப் பணத்தை பக்கத்து ஊரில் இருக்கும் வங்கிகளில் சென்று செலுத்தலாம்.

இதுகுறித்து வரித் துறையினர் கேள்வி எழுப்பினால், வங்கி இல்லாத காரணத்தைக் குறிப்பிட்டு, முறையான வருமான வரித் தாக்கல் செய்யவேண்டி இருக்கும். விவசாய நிலங்களுக்கு மூலதன ஆதாய வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

 விளக்கம் போதவில்லை எனில்…?

நோட்டீஸ் வரப் பெற்றவர் கொடுக்கும் விளக்கம், வருமான வரித் துறை அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனில், அதிகாரிகள் விதிக்கும் அபராதத்தையும், வட்டியையும் செலுத்த வேண்டும். அதோடு, தாமதமாக வரி செலுத்தியதற்கு, செலுத்த வேண்டிய வரித் தொகையில் 1%  வட்டியாக கட்ட வேண்டியிருக்கும்.

எனவே, நோட்டீஸ் வரப் பெற்றவர் அளிக்கும் விளக்கங்கள் வரித் துறை அதிகாரிகளுக்கு திருப்தி அளிப்பதாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரித் துறை அதிகாரிகள், அபராதம் விதிக்காமல் வட்டியை மட்டும் கட்ட அனுமதிப்பார்கள். 

  மேல் முறையீடு!

வருமான வரித் துறை அதிகாரி, வட்டியைக் கட்டச் சொல்லி அறிவுறுத்தியபின், மேலதிகாரிகளிடம் முறையீடு செய்ய முடியாது. எனவே, வரித்  துறை அதிகாரிகளை அணுகும் முன் வரி மற்றும் வட்டியை மட்டும் கட்டிவிட்டு வரும் வகையில் நேர்மையாகப் பதில்களை தயார் செய்துகொண்டு, தகுந்த ஆதாரங்களோடு செல்ல வேண்டும். தவறான பதில்களால் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று முடித்தார் ஆடிட்டர் சதீஷ்குமார்.

சம்பளக்காரர்களாக இருந்தாலும் சரி, தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, வரவு செலவுக் கணக்கை முறையாக மேற்கொள்ளும் பட்சத்தில், எந்தச் சிக்கலிலும் சிக்க வாய்ப்பே இல்லை என்பது மட்டும் நிச்சயம்!

வரியும் வட்டியும்!

வங்கியில் வரவு வைக்கப்பட்ட மொத்தப் பணத்துக்கு இணையாக, வரும் வரிக் கணக்கீட்டு ஆண்டில் வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிட்டால், வருமான வரித் துறையினர் வரியை மட்டுமே கணக்கிடுவர். அபராதம் விதிக்க மாட்டார்கள். ஆனால், தாமதமாக வரி செலுத்துவதால் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். முன்கூட்டியே அதாவது, இந்த நிதி ஆண்டிலேயே வரி செலுத்தியிருந்தால், வட்டி  செலுத்தத் தேவை இருக்காது.

நன்றி : நாணயம் விகடன் - 22.01.2017

Wednesday, January 18, 2017

விசா பெற என்ன செய்ய வேண்டும்?

விசா பெற என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் வெளி்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்தால்விசாபெற வேண்டும். இதற்கென்று வழிகாட்ட இணையதளங்கள் உள்ளது. அதற்குள் சென்றால் நீங்கள் மிக இலகுவாக விசா பற்றிய விபரங்கள் அனைத்தும் அறியலாம்.
விசா விரிவாக்கம் :
விசா என்பதன் விரிவாக்கம் VISA - Visa International Service Association என்பதாகும். விசா என்பது லத்தீன் மொழியிலுள்ள ஒரு வார்த்தை ஆகும்.
எந்த நாட்டுக்கு சென்றாலும் விசா எடுக்க வேண்டுமா?
அனைத்து நாடுகளுக்கும் விசா கண்டிப்பாக எடுக்க தேவையில்லை. சில நாடுகளுக்கு நீங்கள் விசா இல்லாமலேயே சென்று வரலாம். அங்கு சென்றவுடன் விசா பெற வேண்டும். ஆனால் பாஸ்போர்ட் அவசியம். பெரும்பாலான நாடுகளுக்கு நீங்கள் முன்கூட்டியே விசா பெற வேண்டும். ஒவ்வொரு நாடும் இதற்கென்று சில விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளது.
விபரங்கள் தருகின்ற இணையதளங்கள்
எந்த நாட்டுக்கு விசா தேவையில்லை, எந்த நாட்டுக்கு விசா எடுக்க வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்களுக்கு நீங்கள் http://www.visamapper.com என்ற இணையதளத்திற்குள் சென்றால் போதும்.
முகப்பிலேயே உலக வரைபடம் ஒன்றை உருவாக்கி அதில் நாடுகளை குறித்து. ஒவ்வொரு நாட்டுக்கும் விசா பெறுவதற்கான நடைமுறைகளுக்கு தகுந்தவாறு வண்ணங்கள் கொடுக்கப்பட்டு எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் அந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளார்கள்
வண்ணங்களின் அர்த்தம்
இந்த தளத்தில் முகப்பில் காணப்படுகின்ற உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வண்ணங்களை வைத்து குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை நாம் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் கலர் என்றால் நாம் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை நிறம் என்றால் விசாவே தேவையில்லை. மஞ்சள் கலர் என்றால் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். சிவப்பு நிறம் என்றால் விசாவே கிடையாது.
விசாவை பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் கண்டிப்பாக உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் இது ஒரு வழிகாட்டித் தளம் மட்டுமே. இதில் உள்ள விவரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமானவை என்று கொள்ளக்கூடாது.
மேற்கண்ட இணையதளத்தை போலவே http://www.visamap.net என்ற இணையதளமும் விசா தொடர்பான தகவல்கள் அனைத்தையும் வரைபடம் மூலம் தருகிறது.
விசா பற்றிய தகவல்கள் மற்றும் அந்நாட்டு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளது? ஆகிய தகவல்களை இது நமக்கு அளிக்கிறது.
***************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி